மீண்டும் முருங்கை மரம் ஏறிய சென்செக்ஸ், நிஃப்டி.. காலையிலேயே ரத்தக்களறி ஆனது..!
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரானுக்கு எதிராக அடுத்த 2-3 வாரங்களில் கடுமையான தாக்குதல்கள் நடைபெறும் என எச்சரித்ததையடுத்து, உலகளாவிய சந்தைகளில் ஏற்பட்ட அதிர்ச்சி இந்திய பங்குச் சந்தையையும் கடுமையாக பாதித்துள்ளது. ஏப்ரல் 2-ஆம் தேதி வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இரண்டும் ஆழ்ந்த சரிவில் திறந்தன.
நேற்று டிரம்ப் ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரும் என பேசிய காரணத்தால் இந்திய பங்குச்சந்தை உயர்ந்து காணப்பட்டது, ஆனால் டிரம்ப் நேற்று அமெரிக்க மக்களிடம் பேசுகையில் மீண்டும் ஈரான் போர் தீவிரம் அடையும் என பேசியுள்ளது இன்று பங்குச்சந்தை முதலீட்டில் எதிரொலித்துள்ளது.

சென்செக்ஸ் 1,500 புள்ளிகள் வரையில் குறைந்து சுமார் 2.26 சதவீதம் சரிவை பதிவு செய்துல 71,608 புள்ளிகளை தொட்டது, இதேபோல் நிஃப்டி 480 புள்ளிகள் வரையில் சரிந்து 22,209 புள்ளிகளை அடைந்தது.
மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தகத்தில் மொத்தம் 566 பங்குகள் மட்டுமே உயர்ந்த நிலையில் இருந்தது, அதேசமயம் 1,823 பங்குகள் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் குறியீட்டில் 30 நிறுவனங்களும் இன்று சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. இண்டிகோ பங்குகள் 4.44 சதவீதம் வரை சரிவு, சன் பார்மா 4 சரிவு.

இந்திய சந்தை மட்டுமல்லாமல், டிரம்ப்-ன் பேச்சால் ஆசியாவின் முக்கிய பங்குச் சந்தைகளும் சரிவை சந்தித்தன. ஜப்பான் Nikkei 225 2.20% வீழ்ச்சி கண்டது. ஹாங்காங் Hang Seng 1.19% சரிந்தது. ஆஸ்திரேலியாவின் S&P/ASX 200 மற்றும் இந்தோனேஷியாவின் IDX Composite ஆகியவை 1.10% மற்றும் 1.28% வீழ்ச்சியடைந்தன.
டிரம்ப் உரையால் ஈரான் போரில் தீவிரம் அதிகரிக்கும் என்ற அச்சம் உருவாகியுள்ளது மட்டும் அல்லாமல் சந்தையில் இது எதிரொலிக்கும் துவங்கியுள்ளது. கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 5 சதவீதம் வரையில் உயர்ந்து பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 106 டாலருக்கு உயர்ந்தன.
இது இந்தியா போன்ற கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு பெருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக பணவீக்கம், நாணய மதிப்பு, நடப்பு கணக்கு பற்றாக்குறை ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும்.
மார்ச் மாதம் தான் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து சுமார் 12 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை வெளியேற்றினார்கள் என்றால், ஏப்ரல் மாதத்திலும் இதே கதையாகியுள்ளது. ஏப்ரல் மாத தொடக்கத்திலேயே, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (FPI) ஏப்ரல் 1ஆம் தேதி வர்த்தகத்தில் மட்டும் சுமார் 8,331 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளனர். இதே நேரத்தில், உள்நாட்டு முதலீட்டாளர்கள் (DII) 7,172 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.
மேலும இந்திய பங்குச்சந்தையின் பதற்ற அளவை காட்டும் India VIX குறியீடு இன்று காலை வர்த்தகத்தில், 5% உயர்ந்துள்ளது முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.
ஈரான் மீது தாக்குதல் தீவிரமாவதற்கான அச்சம் காரணமாக, காப்பர் உள்ளிட்ட அனைத்து தொழில்துறை உலோகங்களின் விலைகளும் சரிவை சந்தித்துள்ளன. தொழில்துறை உலோகங்கள் குறைவது என்பது உற்பத்தி, வர்த்தகம் குறைவதை காட்டுகிறது. இதனால் பொருளாதார பாதிப்பின் தாக்கம் உலகளவில் எதிரொலிக்க துவங்கியுள்ளதையும் இது காட்டுகிறது.












Click it and Unblock the Notifications