மொத்த விலைப் பணவீக்கம் 5.13 சதவிகிதம் - சில்லரை பணவீக்கம் 3.77 சதவிகிதம்
இந்தியாவின் மொத்த விற்பனை விலைப் பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 5.13 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
சென்னை: ஆகஸ்ட் மாதத்தில் 4.53 சதவிகிதமாக இருந்த மொத்த விற்பனை விலைப் பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 5.13 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் பணவீக்கம் 3.14 சதவிகிதமாக இருந்தது.
ஆகஸ்ட் மாதம் சில்லறை பணவீக்கம் 3.69 சதவீதமாக இருந்த நிலையில் செப்டம்பர் மாதம் சிறிய அளவில் உயர்ந்து 3.77 சதவீதமாக உள்ளது.
உணவுப் பொருட்கள் மற்றும் பெட்ரோலியப் பொருட்களில் விலை உயர்வு காரணமாக சில்லரை பணவீக்கம் அதிகரித்துள்ளது. தொழில்துறை உற்பத்தி குறியீடு கடந்த மூன்று மாதங்களில் இல்லாத வகையில் ஆகஸ்ட் மாதத்தில் 4.3 சதவீதமாக சரிந்துள்ளது.
பணவீக்கம் ஏன்?
இந்திய ரிசர்வ் வங்கி செப்டம்பர் மாதம் சில்லறை பணவீக்க இலக்கினை 4 சதவிகிதமாக வைத்து இருந்தது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வினால் பணவீக்கம் 4 சதவீதத்தினை விடக் கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3.77 சதவிகிதமாக உள்ளது என மத்திய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு
உணவுப் பொருட்கள் மீதான பணவீக்கம் ஆகஸ்ட் மாதம் 0.29 சதவிகிதமாக இருந்தது. இதுவே செப்டம்பர் மாதம் 0.51 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் மதிப்புச் சரிவு, விவசாயப் பொருட்களுக்கு அளிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஆதரவு விலை போன்றவை உணவுப் பொருட்கள் விலை உயர்வுக்குக் காரணம் ஆகும்.
செப்டம்பர் மாதம் பணவீக்கம்
இந்தியாவின் பணவீக்கம் குறித்த விவரங்களை மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில் 4.53 சதவிகிதமாக இருந்த மொத்த விற்பனை விலைப் பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 5.13 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் பணவீக்கம் 3.14 சதவிகிதமாக இருந்தது.
காய்கறிகளின் விலை
உணவுப் பொருட்களின் விலை செப்டம்பர் மாதத்தில் 0.21 சதவிகிதம் குறைந்துள்ளது. குறிப்பாக, பருப்பு வகைகளில் விலை சென்ற ஆண்டின் செப்டம்பர் மாதத்திலிருந்து இந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் 18.14 சதவிகிதம் குறைந்துள்ளது. மேலும், காய்கறிகளின் விலை 3.83 சதவிகிதம் சரிந்துள்ளது. வெங்காயத்தின் விலை 25.23 சதவிகிதமும், பழங்களின் விலை 7.35 சதவிகிதமும் குறைந்துள்ளது. எனினும், உருளைக்கிழங்கின் விலை 80.13 சதவிகிதமும் உயர்ந்துள்ளது.
எரிபொருள் விலை உயர்வு
கச்சா பெட்ரோலியத்தின் விலை 47.83 சதவிகிதமும் உயர்ந்துள்ளது. எரிபொருள் மற்றும் மின்சாரத்துக்கான பிரிவில், திரவமாக்கப்பட்ட பெட்ரோலியம் எரிவாயுவின் விலை 33.51 சதவிகிதம் உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை 17.21 சதவிகிதமும், டீசல் விலை 22.18 சதவிகிதமும் செப்டம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளது. உற்பத்திப் பொருட்களுக்கான பிரிவில் சர்க்கரை விலை 12.91 சதவிகிதம் குறைந்துள்ளது. அதே நேரத்தில் உலோகங்களின் விலை 12.78 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
ஜிடிபி வளர்ச்சி
இதனிடையே சர்வதேச செலாவணி நிதியம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க நிதி சீர்திருத்தங்களை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. 2018-19ஆம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி எதிர்பார்ப்பு 7.3 சதவிகிதமாக இருக்கும் என்று வெளியிட்டுள்ளது.
ஐஎம்எஃப் அறிக்கை
பணவீக்கம் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதற்கு ஏற்ப நிதிக் கொள்கைகளை மேலும் கடுமையாக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. பணவீக்கம் அதிகரிக்க அதிகரிக்க ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை சந்திக்கும். இந்தியாவின் வளர்ச்சி போக்கு விரைவில் மேம்படும் என்று சர்வதேச செலாவணி நிதியம் தனது அரையாண்டு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவின் பணவீக்க எதிர்பார்ப்பு 2018-19 நிதியாண்டில் 4.7 சதவிகிதமாக இருக்கும் என சர்வதேச செலாவணி நிதியம் கணித்துள்ளது.