நிதி நெருக்கடியில் ஸ்நாப்டீல்: 2000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டம்
ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஸ்நாப்டீல், கடுமையான நிதிச் சுமையில் தள்ளாடுவதால், சுமார் 30 சதவிகித ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு: பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஸ்நாப்டீல் டெல்லியை தலைமை இடமாக கொண்டு 2010ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றது. இந்நிறுவனத்திற்கு தேவையான மூலதனத்தை ஜஸ்பால் இன்ஃபோடெக் என்ற நிறுவனம் அளித்து வருகிறது. நிதிச் சுமையில் தள்ளாடுவதால், சுமார் 30 சதவிகித ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் 2000 ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயம் எழுந்துள்ளது.
ஸ்நாப்டீல் மின்னனு வர்த்தக நிறுவனத்தின் மூலம் சுமார் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட கம்பெனிகள் இந்தியா முழுவதும் 30 மில்லியனுக்கும் மேற்பட்ட பொருட்களை சுமார் 6000க்கும் மேற்பட்ட இடங்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளது.

ஸ்நாப்டீல் நிறுவனத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும், பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்க்கும் பிரிவில் 7000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்கின்றனர்.
தற்போது, ஸ்நாப்டீல் நிறுவனம் நிர்வாகச் செலவுகளை குறைக்கும் நோக்கத்தில், தன்னுடைய நிறுவனத்தில் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய முடிவெடுத்திருக்கிறது. இதனால், நேரடியாகவும் ஒப்பந்த முறையிலும் வேலை செய்யும் சுமார் 2000 ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.
எங்கள் நிறுவனத்தில் பொருட்களை கொண்டு சேர்க்கும் பிரிவில் பணி புரியும் ஐயாயிரம் ஊழியர்களை மூவாயிரமாக குறைக்க நடவடிக்கை முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று ஸ்நாப்டீல் நிறுவனத்தின் துணை நிறுவனமான உல்கன் எக்ஸ்பிரஸ்ஸின் உயர் அதிகாரி கூறியுள்ளார்.
இது குறித்து துல்லியமான விவரங்களை தெரிவிக்குமாறு மேலாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜஸ்பால் இன்ஃபோடெக் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ஸ்நாப்டீல் நிறுவனத்தின் உயர்தரமான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு தேவையான முதலீட்டை நாங்கள் தொடர்ந்து அளித்து வருவோம் என்றார்.
ஸ்நாப்டீல் நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கைக்கும் எங்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது,மேலும், நாங்கள் விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர் மீது அளவுகடந்த மதிப்பும் நம்பிக்கையும் வைத்துள்ளோம். அந்த மதிப்பு மற்றும் நம்பிக்கையை தக்க வைக்க தொடர்ந்து எங்கள் தரமான சேவையை அளிக்க முயற்சி செய்வோம் என்றனர்.
ஸ்நாப்டீல் நிறுவனத்தின் ஊழியர்கள் தொடர்பான செலவினங்களைப் பொறுத்தவரையில், 2016ஆம் நிதி ஆண்டில் 911 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது, இது 2015ஆம் நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட 148 சதவிகிதம் அதிகமாகும்.
விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்துதல் போன்ற செலவினங்களைத் தவிர்த்து, ஊழியர்களுக்கான செலவினங்கள் கட்டுக்கடங்காமல் போனதே 2016-ஆம் ஆண்டில் கூடுதல் செலவிற்கு காரணம் என்ற ஸ்நாப்டீல் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications