டெல்லிவாசிகள் பட்டாசு வெடிக்க சுப்ரீம் கோர்ட் தடை... சோகத்தில் சிவகாசி!
டெல்லியில் பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால், பட்டாசு உற்பத்தி நகரமான சிவகாசிவாசிகள் விற்பனை பாதிக்கப்பட்ட சோகத்தில் உள்ளனர்.
டெல்லி: வெடி வெடிக்காத தீபாவளி கொண்டாட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் டெல்லிவாசிகள் சோகமடைந்துள்ளனர். அவர்களை விட அதிகம் பாதிக்கப்பட்டது சிவகாசிவாசிகள்.
யாராவது பணத்தை கன்னா பின்னாவென்று செலவு செய்தால், அவர்களைப் பார்த்து மற்றவர்கள் ஏன்டா இப்படி காசை கரியாக்குரே என்று திட்டுவதுண்டு. ஆனால், அந்த கரியையே காசாக்குவதுதான் தீபாவளிப் பண்டிகையாகும். அந்த கரிதான் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார மக்களுக்கு சோறு போடும் தெய்வமாகும்.
இந்தியாவின் தலைநகராக டெல்லி இருப்பதால், தினசரி ஏதாவது ஒரு வெளிநாட்டிலிருந்து, அது அமெரிக்காவோ அல்லது அடையாளம் தெரியாதா ஒரு தீவோ, எந்த நாட்டிலிருந்தாவது ஒரு பிரதமரோ, ஜனாதிபதியோ அல்லது வெளிநாட்டு தூதுவரோ வந்துகொண்டே இருப்பார்கள். தினசரி கார்களின் அணிவகுப்பால் தலைநகர் டெல்லி அதகளப்பட்டுக்கொண்டே இருக்கும். இதனாலேயே டெல்லியில் காற்று மாசடைந்து மக்கள் சுவாசக் கோளாரால் அவதிப்பட்டு வருகின்றனர்.
மாசு நகரமான டெல்லி
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலும் சுவாசக் கோளாரினால் அவதிப்பட்டுவருகின்றார். இதன் காரணமாகவோ என்னவோ, கடந்த ஆண்டில், தலைநகர் டெல்லியில் சுற்றுச் சூழல் கடுமையாக மாசடைந்துள்ளதாக கூறி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வாகனப் போக்குவரத்திற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துளளார். இவர் தன்னுடைய அமைச்சரவை சகாக்களையும், கட்சிக்காரர்களையும் பெரும்பாலும் சைக்களையே உபயோகிக்குமாறு கட்டளையிட்டுள்ளார்.
தூசுகளின் அளவு அதிகரிப்பு
டெல்லிவாழ் மக்களும் நிலைமையை புரிந்துகொண்டு கார் மற்றும் இரு சக்கர வாகனத்தை உபயோகிப்பதை பெரும்பாலும் தவிர்த்து விட்டு சைக்கிளையும் பேருந்துகளையும் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது டெல்லியில் காற்றில் கலக்கும் தூசுகளின் அளவு குறைந்துள்ளது.
டெல்லியில் தீபாவளி பண்டிகை
இந்நிலையில், வரும் 19ம் தேதி தீபாவளிப் பண்டிகை நாடு முழுவதும் பெரும்பாலான வட மாநிலங்களில் கொண்டாடப்பட இருக்கிறது. அதுவும் தலைநகர் டெல்லியில் தீபாவளிப் பண்டிகை பட்டாசு சத்தங்களுடன் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வாடிக்கை.
தீபாவளி புகைப்படம்
கடந்த ஆண்டு தீபாவளிப்பண்டிகை முடிந்த மறுநாள் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம், பூமிக்கு மேலே மிதந்து கொண்டிருக்கும் மிர் விண்கலத்தின் மூலம் எடுத்தனுப்பிய புகைப்படங்களே அதற்கு அத்தாட்சியாகும்.
மாசு நகரமான டெல்லி
கடந்த ஆண்டு தீபாவளிக்கு மறுநாள் டெல்லி மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், காற்றில் கலந்துள்ள மாசுக்களின் அளவை அளந்தது. அதில் எதிரே வரும் வாகனங்களை அடையாளம் காண முடியாத அளவில் தூசு மண்டி இருந்ததும், சுவாசிக்க முடியாத அளவில் 14 முதல் 16 மடங்கு தூசு கலந்துள்ளதையும் கண்டறிந்து. மேலும், பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டன. இதனையடுத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் என்பவரும் இணந்து, டெல்லியில் உச்ச நீதிமன்றத்தில் பட்டாசு விற்பனை செய்வதை தடை செய்யவேண்டும் என்று வழக்கு தொடுத்தது.
பட்டாசு வெடிக்க தடை
உச்ச நீதிமன்றமும் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, தீபாவளிப் பண்டிகைக்கு பட்டாசு வெடிக்கக்கூடாது என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது. இந்த தடை உத்தரவு கடந்த செப்டம்பர் 12ம் தேதி தளர்த்தப்பட்டது. தடை உத்தரவை நீக்கக்கோரி வழக்கறிஞர் அர்ஜூன் கோபால் என்பவர் தடையை நீடிக்க வேண்டும் என்று மனு அளித்தார்.
பட்டாசு இல்லாத தீபாவளி
மனுவை ஏற்று உச்ச நீதிமன்றமும், இந்த தடை வரும் நவம்பர் 1ம் தேதி வரையிலும் அமலில் இருக்கும். கூடவே டெல்லியில் பட்டாசு விற்பதற்கான உரிமத்தையும் இடைநீக்கம் செய்துள்ளது. இதனால், இந்த ஆண்டு பட்டாசு இல்லாமல்தான் தீபாவளி கொண்டாட வேண்டுமா என்று டெல்லி மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.
டெல்லி போகும் சிவகாசி பட்டாசுகள்
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிப் பண்டிகைக்கு வட மாநிலங்களில் தான் அதிக அளவில் பட்டாசு விற்பனை நடக்கும். அதுவும் தலைநகர் டெல்லியில் பட்டாசு விற்பனை களைகட்டும். இதற்காகவே சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஒரு மாதமாக டெல்லியில் தங்கியிருந்து பட்டாசு விற்பனையை முடித்துக்கொண்டு தீபாவளி முடிந்த உடன்தான் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பி தீபாவளி கொண்டாடுவார்கள். தற்போது உச்ச நீதிமன்றம் பட்டாசு விற்பனை செய்வதற்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால், அவர்கள் அனைவரும் வருத்த்தில் உள்ளனர்.
பட்டாசு விற்பனை சரிவு
கடந்த ஆண்டு வரையில் அனைத்து ரக பட்டாசுகளுக்கும் 14.5 சதவிகிதம் வரையில்தான் வாட் வரி விதிக்கப்பட்டு இருந்தது. கடந்த ஜூலை மாதம் அமல்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை (GST) வரிவிதிப்பின் கீழ் பட்டாசுகளுக்கு 28 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டில் தீபாவளி பட்டாசு விற்பனை சரிந்துள்ளது.
சிவகாசி பட்டாசு தேக்கம்
மேலும் மலிவு விலையில் சீனப்பட்டாசும் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படுவதாலும், சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ள நிலையில், தற்போது உச்ச நீதிமன்றமும், சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது என்பதுதான் கூடுதல் சோகம். வல்லான் வகுத்ததே வேதம் என்றால், ஏழையின் சொல் என்றைக்கு அம்பலம் ஏறும்.