TCS: அடுத்தடுத்து அடிவாங்கும் டிசிஎஸ் ஊழியர்கள்.. நிதா கான் வாங்கிய அதே அடி இப்போ டேனிஷ் எஜாஸ் ஷேக்
நாசிக் நீதிமன்றம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஊழியர் டேனிஷ் எஜாஸ் ஷேக் தாக்கல் செய்த இடைக்கால முன்ஜாமீன் மனுவை நிராகரித்துள்ளது. மும்பை நாகா போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மத உணர்வுகளை புண்படுத்திய வழக்கில் கைதாகியிருக்கும் டேனிஷ் எஜாஸ் ஷேக்-கிற்கு இது பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
இதேபோல நாசிக் நீதிமன்றம் திங்கட்கிழமை, டிசிஎஸ் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நிதா கானுக்கு இடைக்கால கைது தடை வழங்க மறுத்துவிட்டது. மேலும், போலீசுக்கு ஏப்ரல் 27-ம் தேதி பதில் அளிக்க அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் நிதா கான் 2 மாதம் கர்ப்பமாக உள்ளார்.

ஏப்ரல் 21-ம் தேதி செவ்வாய்க்கிழமை டேனிஷ் எஜாஸ் ஷேக் மனுவை கூடுதல் செஷன்ஸ் நீதிபதி வி.வி. கதாரே விசாரித்த நிலையில் இந்த உத்தரவை வழங்கினார். எப்.ஐ.ஆரில் உள்ள குற்றச்சாட்டுகள் திட்டமிட்டு மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாக நீதிபதி கூறினார்.
"மனுதாரருக்கு எதிராக ஏற்கனவே தீவிர குற்றப் பின்னணி உள்ளது. இந்த வழக்கை தனித்து பார்க்க முடியாது. இந்த குற்றம் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கை பாதிக்கும்" என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளதால் ஷேக்கை விடுவித்தால் விசாரணைக்கு இடையூறு ஏற்படும் என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.
டிசிஎஸ் ஊழியர் கிருஷ்ணா மானே 2022 முதல் தன் சக ஊழியர்களான டேனிஷ் எஜாஸ் ஷேக், தவுசிப் அட்டார் உள்ளிட்டோர் தனது இந்து மத நம்பிக்கைகளை அவமானப்படுத்தியதாக புகார் அளித்தார். இஸ்லாத்தை புகழ்ந்தும், இந்து மதத்தை தாழ்த்தியும் பேசியதாகவும், குர்ஆன் படிக்கவும், அசைவ உணவு உண்ணவும் நிர்பந்தித்ததாகவும், மிரட்டியதாகவும், பெண் ஊழியர்களுக்கு பாலியல் சார்ந்த கமெண்ட் செய்தாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
டேனிஷ் எஜாஸ் ஷேக் தற்போது நாசிக் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தியோலாலி போலீஸ் நிலையத்தில் டேனிஸ் சக பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கிலும் அவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.
டேனிஷ் எஜாஸ் ஷேக் சார்பில் வழக்கறிஞர் உமேஷ் வால்ஜடே மனு தாக்கல் செய்தார். ஆனால் அரசு வழக்கறிஞர் கிரண் பெண்ட்பார் எதிர்ப்பு தெரிவித்தார். சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், தேசிய மகளிர் ஆணையம் இந்த விவகாரத்தை கவனித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். நீதிமன்றம் போலீசாருக்கு பதில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, ஏப்ரல் 27-ம் தேதி விசாரணைக்கு ஒத்தி வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications