ஜிஎஸ்டி: வணிகர்களுக்கு அபராதம் விதிக்கக் கூடாது- மத்திய அரசுக்கு கோரிக்கை
ஜிஎஸ்டிஆர் - 3 பி படிவங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 2017 வரை நீட்டித்து அறிவிக்க வேண்டும் என்று வர்த்தகர்களும், வணிகர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை: ஜிஎஸ்டி ரிட்டன் தாமதத்துக்கு தினமும் ரூ.200 அபராதம் விதிக்கும் நடைமுறையை கைவிட வேண்டும் என்று வணிகர் சங்க பேரவை சார்பில் வணிகவரித்துறை ஆணையரிடம் மனு அளித்துள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி முறை அமலுக்கு வந்தது. இந்த வரி முறையில் குறிப்பிட்ட நாட்களுக்குள் வரிக்கான கணக்கு தாக்கல் செய்யவில்லை என்றால் ஒரு நாளைக்கு சி.ஜி.எஸ்.டிக்கு 100 ரூபாய் மற்றும் எஸ்.ஜி.எஸ்.டிக்கு 100 ரூபாய் என மொத்தம் 200 ரூபாய் வீதம் அபாராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் நாட்டின் ஜிஎஸ்டிக்கான முதல் கணக்கை தாக்கல் செய்யாதவர்களுக்கு அபராதத்திலிருந்து விலக்கு அளிக்கலாம் என ஜிஎஸ்டி ஆணையம் பரிந்துரைத்திருந்தது. இதை ஏற்று மத்திய அரசு அபராத தொகையை ரத்து
செய்தது. எனினும் தாமத தாக்கலுக்கான வட்டியை வரி செலுத்துவோர் கட்ட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அபராதத்தை ரத்து செய்க
ஜிஎஸ்டி வரி செலுத்தாதது மற்றும் மாதாந்திர படிவங்களை தாக்கல் செய்யாதது போன்ற காரணங்களுக்காக 2018 மார்ச் மாதம் வரை வணிகர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டாம் என மத்திய, மாநில அரசுகளை வரி ஆலோசகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
விளக்கக் கூட்டம் வேண்டும்
புதுக்கோட்டையில் தமிழ்நாடு வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் ஆர்.சுப்பிரமணியன் பேசும் போது, எஸ்டி விதிப்பு குறித்த தெளிவான விளக்கங்களை மத்திய, மாநில அரசுகள் அளிக்கவில்லை. விளக்கக் கூட்டங்கள் பெயரளவுக்கே நடத்தப்படுவதால் வணிகர்கள், தொழில்துறையினர் மற்றும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வணிகர்கள் பாதிப்பு
வரி செலுத்த தாமதிக்கும் வணிகர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை குறித்து முன்கூட்டியே தெரிவிக்கவில்லை. அவ்வாறு விதிக்கப்படும் அபராதம், வரியைவிட அதிகமாக இருப்பது வேதனையாக உள்ளது. இதனால் தணிக்கையாளர்களிடம் கணக்கு தாக்கல் செய்ய முடியாமல் வணிகர்களும் தொழில்துறையினரும் திணறுகின்றனர்.
வணிகர்கள் அதிருப்தி
ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு 2 மாதங்களுக்கு அபராதம் விதிக்கப்படமாட்டாது என்று வர்த்தகத் துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். ஆனால், அதையும் மீறி தற்போது அபராதம் விதிக்கப்படுவதால் மத்திய, மாநில அரசுகள் மீது வணிகர்களுக்கும் தொழில்துறையினருக்கும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்றார்.
இணையதளத்தை மேம்படுத்துக
கூட்டத்தில், ஜிஎஸ்டி தொடர்பாக இணையதளத்தில் படிவங்களை பதிவேற்றம் செய்யும்போதும் பெரும்பாலான நேரங்களில் இணையதளம் செயலிழந்துவிடுகிறது. எனவே, இணையதளத்தை மேம்படுத்த வேண்டும். ஜிஎஸ்டி கவுன்சில் வெளியிடும் அறிவிப்புகளை அந்தந்த மாநில மொழிகளில் வணிக வரி அலுவலகங்கள் மூலம் உடனடியாக அறிவிக்க வேண்டும்.
2018 மார்ச் வரை அபராதம் வேண்டாம்
ஒரு வணிகர் ஒவ்வொரு மாதமும் நான்கு விதமான படிவங்களை தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. இந்த நடைமுறை மிகவும் சிரமமாக உள்ளதால், தாக்கல் செய்யும் படிவங்களின் எண்ணிக்கையை 2 ஆக குறைக்க வேண்டும்.
2018 மார்ச் மாதம் வரை ஜிஎஸ்டி செலுத்தாதது உள்ளிட்ட காரணங்களுக்காக வணிகர்களுக்கு அபராதம் விதிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
ஜிஎஸ்டி தாக்கல் செய்ய தாமதம்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் விக்கிரமராஜா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜிஎஸ்டி படிவங்களை தாக்கல் செய்ய காலதாமதம் ஏற்பட்டிருப்பதற்கான காரணங்களை ஆராய்ந்து அது நெட்வொர்க், சர்வர் போர்டல் மற்றும் கணினியில் ஏற்பட்டிருந்த குழப்பங்களே காரணம் என்பதை கருத்தில் கொண்டு வணிகர்கள் மீது தினமும் 200 ரூபாய் அபராதம் விதிக்க மேற்கொண்டிருக்கும் நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும்.
ஜிஎஸ்டிஆர் - 3பி படிவம் தாக்கல்
ஜிஎஸ்டிஆர் - 3 பி படிவங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 2017 வரை நீட்டித்து அறிவிக்க வேண்டும். அதன் மூலம் வணிகர்களுக்கு தேவையான உதவிகளை செய்திட ஆணை பிறப்பித்து நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.