நீதான்யா கேப்டன்.. மனசாட்சி இல்லாமல் ஜடேஜா, பிஷ்னாய்க்கு பவுலிங் கொடுக்காமல் தவிர்த்த ரியான் பராக்!
ஜெய்ப்பூர்: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் செய்த பவுலிங் மாற்றங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக ஜடேஜா மற்றும் ரவி பிஷ்னாய் இருவருக்கும் தலா ஒரேயொரு ஓவர் மட்டுமே கொடுத்தது கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
ஐபிஎல் தொடரின் 36வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து ஐதராபாத் அணி விளையாடியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 228 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய வைபவ் சூர்யவன்ஷி 37 பந்துகளில் 12 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 103 ரன்களை விளாசினார்.

இதன்பின் களமிறங்கிய ஐதராபாத் அணி 18.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ரன்களை எடுத்து அபார வெற்றியை பெற்றது. சிறப்பாக ஆடிய இஷான் கிஷன் 31 பந்துகளில் 3 சிக்ஸ், 11 பவுண்டரி உட்பட 74 ரன்களையும், அபிஷேக் சர்மா 29 பந்துகளில் ஒரு சிக்ஸ், 11 பவுண்டரி உட்பட 57 ரன்களையும் குவித்தனர். இதன் மூலமாக ஐதராபாத் அணி 5 போட்டிகளில் வென்று புள்ளிப் பட்டியலில் 10 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது.
ராஜஸ்தான் அணிக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக மாறியுள்ளது. இருப்பினும் ராஜஸ்தான் அணியின் தோல்விக்கு அந்த அணியின் கேப்டன் ரியான் பராக் முக்கிய காரணமாக அமைந்திருக்கிறார். ஏனென்றால் ஃபார்மில் இல்லாத ஹெட்மயருக்கு எதன் அடிப்படையில் தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்கப்படுகிறது என்பதே இதுவரை தெரியவில்லை.
அதேபோல் ஐதராபாத் அணியில் அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் களத்தில் நின்றதால், இடதுகை ஸ்பின்னரான ரவீந்திர ஜடேஜா பவுலிங் செய்யவே அழைக்கப்படவில்லை. இடதுகை ஸ்பின்னரான ஜடேஜாவுக்கு மட்டுமல்லாமல் ரவி பிஷ்னாய்க்கும் இதுதான் நிலைமையாக இருந்தது. கடைசி வரை இருவரும் தலா ஒரு ஓவர் மட்டுமே வீசினர்.
இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு இடதுகை ஸ்பின்னர்கள் பவுலிங் செய்யக் கூடாது என்று கொடூரமான விதியை ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியின் தீவிரமாக பின்பற்றி வருகிறது. ஆனால் பிஷ்னாய் அல்லது ஜடேஜா உள்ளிட்டோரை பவர் பிளேவுக்கு பின் அட்டாக்கில் கொண்டு வந்திருந்தால், ஐதராபாத் அணிக்கு சவால் அளித்திருக்க முடியும் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications