"வாழ்க டிரம்ப்.." தங்கம் விலை அடுத்து “இப்படி” தான் இருக்கும்.! அடித்து சொன்ன ஆனந்த் சீனிவாசன்
சென்னை: தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவிலும் கூட தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதற்கிடையே தங்கம் விலை உயர்வுக்கான காரணத்தை விளக்கியுள்ள ஆனந்த் சீனிவாசன், வரும் காலத்தில் இது எப்படி இருக்கும் என்பது குறித்தும் முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஒரு நாள் கொஞ்சம் இறங்கினாலும் அடுத்த நாளே அது உயர்ந்து உச்சம் தொட்டுவிடுகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் சென்னையில் கிட்டதட்ட ரூ.200 வரை உயர்ந்துள்ளது

தங்கம் விலை
நேற்றைய தினம் கூட சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ 320 உயர்ந்தது. இப்போது ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ 66 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.8250க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 24 கேரட் தங்கம் ரூ.9000ஐ தொட்டுவிட்டது. இப்படித் தொடர்ந்து உயர்ந்து வருவதால் தங்கத்தை மக்களால் வாங்கவே முடியாத சூழலே இருக்கிறது.
இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் தங்கம் விலை உயர்வு குறித்து விளக்கியுள்ளார். தங்கம் விலை உயர்வுக்கு என்ன காரணம்! அதன் பின்னணியில் உள்ள சர்வதேச கனெக்ஷன் மற்றும் வரும் காலங்களில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பது குறித்து அவர் விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.
ஆனந்த் சீனிவாசன்
இது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் பக்கத்தில், "அமெரிக்காவில் தங்கம் விலை நிரந்தரமாக 3000 டாலருக்கு மேலேயே இருக்கிறது. இதே ரேஞ்சில் தொடர்ந்தால் ஓராண்டில் 3500 டாலருக்குப் போய்விடும். அப்படிப் பார்த்தால் 22 கேரட் தங்கம் ரூ.9000ஐ தொட்டுவிடும். 24 கேரட் தங்கம் ரூ.10 ஆயிரத்தைத் தொட்டுவிடும். நாம் எதிர்பார்த்தது நடந்துவிடும் போலத் தான் இருக்கிறது. அது 12 மாதங்களில் நடக்கும் இல்லை 24 மாதங்களில் நடக்குமா என்பதே இப்போது கேள்வி!
வாழ்க டிரம்ப்
டிரம்ப் பாகவதர் என்ன செய்கிறார் என்பதைப் பொறுத்தே தங்கம் விலை இருக்கும். நாம் வாழ்க டிரம்ப் என்றே சொல்ல வேண்டும். அமெரிக்காவைச் சேர்ந்த பெரு முதலீட்டாளர் ஜிம் ரோஜர்ஸ் என்று ஒருவர் இருக்கிறார். அவர் பல புத்தகங்களையும் கூட எழுதியிருக்கிறார். அமெரிக்கப் பொருளாதாரத்தில் மிக பெரிய மந்தநிலை வரும் என்று அவர் கூறுகிறார். அந்த மந்தநிலையில் இருந்து அமெரிக்காவால் எழுந்திருக்கவே முடியாது என்கிறார்.
அமெரிக்காவை மீண்டும் முதன்மை நாடாக மாற்றுவேன் என்று ஆட்சியைப் பிடித்தார். ஆனால், அமெரிக்காவைச் சிறந்த நாடாக மாற்றுவதற்கு முன்பு, டிரம்ப் அமெரிக்காவை மந்தநிலை ஆக்கிவிடுவார் போலத் தெரிகிறது. இதனால் தங்கம் விலை உச்சத்திற்குப் போக போகுது. இந்தியப் பங்குச்சந்தையும் அடிவாங்கும் என்கிறார்.
இரண்டுமே அதிகரிக்கும்
இதனால் தங்கம், வெள்ளி என இரண்டுமே அதிகரிக்கும் என்கிறார். அவர் வெள்ளியையும் சேர்த்துச் சொல்கிறார். ஆனால், எனக்கு பெர்சனலாக வெள்ளி என்றால் பயம். வெள்ளியை உடனடியாக பணமாக மாற்ற முடியாது. அதை வங்கியில் வைத்தால் பணமும் கிடைக்காது. வெள்ளி என்பது முழுக்க முழுக்க ஒரு வணிக உலோகம். தங்கம் விலை உச்சம் தொடும் என்கிறார். நானும் அப்படி தான் நினைக்கிறேன்" என்றார்.
தங்கப் பத்திரங்கள்
அதேபோல மற்றொரு வீடியோவில், "தங்கப் பத்திரங்களைப் பொறுத்தவரை 2016- 2017இல் வாங்கியவர்களுக்கு இப்போது கிட்டதட்ட பல மடங்கு லாபம். அப்போது ஒரு கிராம் ரூ.2943ல் இருந்தது. இப்போது ரூ. 8624 கொடுக்கிறார்கள். கிட்டதட்ட 193% லாபம். போகப் போக நிலைமை மோசமாகவே இருக்கிறது. இதனால் மத்திய அரசு இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்ற வாய்ப்புகள் அதிகம். இவ்வளவு தான் எங்களால் கொடுக்க முடியும் எனக் கையை விரிக்க வாய்ப்பு இருக்கிறது.
தங்கம் என்னவாகும்
2019- 2020ல் வெளியிடப்பட்ட தங்கப் பத்திரங்களைக் கூட மக்கள் முன்கூட்டியே சரண்டர் செய்யலாம் என்ற திட்டத்தையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இது கம்பல்சரி இல்லை. விருப்பப்பட்டால் உங்கள் தங்கப் பத்திரங்களை சரண்டர் செய்து கொள்ளலாம். 2024 வரை தங்கப் பத்திரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. தங்கம் விலை அதிகரித்துக் கொண்டே போவதால் நஷ்டம் அதிகரித்துக் கொண்டே போகும். தங்கம் தினசரி புதிய சாதனையைப் படைத்தே வருகிறது" என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications