ஐயோ.. மீண்டும் மீண்டுமா! பணமதிப்பு நீக்கம்? அப்போ "தங்கம்" என்னவாகும்! வெடியை வீசிய ஆனந்த் சீனிவாசன்
சென்னை: தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து இப்போது உச்சத்திற்குப் போய்விட்டது. இப்போது பெரும்பாலான மக்களால் தங்கத்தை வாங்க முடியாத சூழலே இருந்து வருகிறது. இதற்கிடையே தங்க முதலீடு குறித்து சில முக்கிய கருத்துகளைப் பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தங்கம் விலை என்பது தொடர்ச்சியாக உயர்ந்தே வருகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் தங்கம் வாங்கவே முடியாத ஒரு சூழல் நிலவுகிறது. இது ஒரு பக்கம் இருக்க மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தங்கப் பத்திர திட்டம் ஒன்றை அறிவித்திருந்தது. சில ஆண்டுகள் தொடர்ச்சியாக அதை வெளியிட்டும் வந்தது.

ஆனந்த் சீனிவாசன்
ஆனால், இப்போது அதை நிறுத்திவிட்டது போலவே தெரிகிறது. இதனால் தங்கப் பத்திரங்களின் நிலை என்னவாகும் என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது. இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
பணமதிப்பு நீக்கம் போல
இது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் பக்கத்தில், "தங்கப் பத்திரங்களைப் பணமதிப்பு இழப்பு போலச் செய்ய மாட்டார்கள் என்று நாம் நம்புவோம்.. இதற்குப் பிரார்த்தனையும் செய்வோம். இதுவரை அவர்கள் செய்யவில்லை.. ஒரு ஈகோவால் இதுவரை அப்படி செய்யவில்லை. உங்கள் பணம் திரும்ப வந்துவிடும். பணமதிப்பு நீக்கம் சமயத்தில் உங்கள் பணம் திரும்ப வந்தது தானே.. அதாவது இன்றைய விலைக்கு நான் மதிப்பை லாக் செய்துவிடுவேன். இதற்கு மேல் எவ்வளவு வந்தாலும் 4% அல்லது 5% மட்டும் தான் தருவோம் எனச் சொல்ல வாய்ப்பு இருக்கிறது.
என்ன சொல்கிறார்?
பணமதிப்பு நீக்கம் என்றால் உங்கள் பணமே திரும்ப வராது என நான் சொல்லவில்லை.. இதுவரை மட்டுமே தங்கத்தின் மதிப்பை என்னால் தர முடியும். இதற்கு மேல் தங்கத்தின் மதிப்பாகத் தர முடியாது.. பணமாக வாங்கிக் கொள்ளுங்கள் என்பார்கள். அல்லது இத்தோடு இந்த திட்டம் முடிந்தது எல்லாரும் வந்து பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என அறிவிக்கலாம். இப்போதே கூட முன்கூட்டியே வாபஸ் பெறும் ஒரு திட்டத்தை அறிவித்துள்ளனர். பட்ஜெட்டில் அறிவித்த தொகைக்கு ஏற்ப வாபஸ் பெறுவார்கள் என நினைக்கிறேன்.
என்ன நடக்கலாம்?
நான் இன்று அரசில் இருந்திருந்தால் ஒட்டுமொத்த திட்டத்தையும் நிறுத்துவதாக அறிவித்திருப்பேன். நான் இருந்திருந்தால் இப்படியொரு திட்டத்தைப் போட்டிருக்கவே மாட்டேன். இது ஒரு பக்கம் இருக்கட்டும்.. ஆனால் இன்று மொத்தமாகத் திட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துவிட்டு 5 அல்லது 6% வட்டியைத் தருவதாக அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது. அதையே நான் பணமதிப்பு நீக்கம் எனக் குறிப்பிட்டேன். இப்போதைக்கு இதுபோல அவர்கள் அறிவிக்கவில்லை. ஒருவேளை தங்கம் விலை ஒரு கிராம் 12 ஆயிரம் ரூபாய் போகும் வரை சொல்லாமல் இருக்கலாம். அதன் பிறகு இப்படி அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது.
மக்கள் பணம்
அதாவது தற்போது உங்களிடம் ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கப் பத்திரம் இருக்கிறது என்றால் அதன் மதிப்பு குறையாது.. ஆனால், இதற்கு மேல் தங்கம் விலை ஏறும்போது அதன் பலன் உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். அடுத்த ஆண்டு பட்ஜெட்டில் இந்த அதிர்ச்சி உங்களுக்குக் கிடைக்கும். தங்கம் விலை அதிகரிக்காது.. குறையும் என நம்பி இதுபோன்ற திட்டத்தை அறிவித்தனர். ஆனால், இப்போது அரசு தான் மக்களுக்குத் தர வேண்டி இருக்கிறது. அரசு பணம் தானே என நினைக்க வேண்டாம்.. அதுவும் மக்கள் வரிப்பணம் தான்.
தோல்வி
நமது ஒட்டுமொத்த இறக்குமதியில் சுமார் 25% தங்கம் தான். மேலும், கச்சா எண்ணெய்யைத் தவிர்த்து அடுத்து நாம் அதிகம் இறக்குமதி செய்யும் ஒன்றாகவும் தங்கம் இருக்கிறது. இதைத் தடுக்கவே மத்திய அரசு 2 நடவடிக்கை எடுத்தது. ஒன்று இறக்குமதி வரியை அதிகரித்தார்கள். அடுத்து இந்த தங்கப் பத்திரம். இதுபோல ஒரு திட்டத்தை அறிவித்தால் மக்கள் இனி கடைக்குப் போய் தங்கம் வாங்க மாட்டார்கள் என நினைத்தனர். ஆனால், இரண்டுமே தோல்வியில் முடிந்துவிட்டது. இறக்குமதி வரி அதிகமாக இருந்த போது தங்கக் கடத்தலும் அதிகரித்தது. தங்க விலையும் உயர்ந்தது" என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications