பிட்காயின் திடீரென எகிறுதே ஏன்? இந்தியாவில் சட்டப்பூர்வமானதா? முதலீடு செய்வது எப்படி? எளிய விளக்கம்
வாஷிங்டன்: டிரம்பின் வெற்றியைத் தொடர்ந்து க்ரிப்டோகரன்சிகள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக பிட்காயின் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 30% வரை அதிகரித்துள்ளது. இதற்கிடையே பிட் காயின் வரும் காலத்தில் எப்படி இருக்கும்.. இந்தியாவில் பிட்காயின் சட்டப்பூர்வமானதா இல்லையா.. அப்படி வாங்கலாம் என்றால் அதை எப்படி வாங்க முடியும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வென்றது முதலே அங்கு பிட்காயின் உள்ளிட்ட க்ரிப்டோ கரன்சிகளின் மதிப்பு உயர்ந்து வருகிறது. அங்கு பிட்காயின் புதிய உச்சமாக 80 ஆயிரம் டாலரை (இந்திய மதிப்பில் 67 லட்ச ரூபாய்) எட்டியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே பிட்காயின் விலை அதள பாதாளத்தில் இருந்த நிலையில், சில காலமாக அது உயர்ந்து வருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் பிட்காயின் விலை 80% வரை அதிகரித்துள்ளது. குறிப்பாக டிரம்பின் வெற்றிக்குப் பிறகு 30% அது உயர்ந்துள்ளது.
என்ன காரணம்: உலகின் மிக முக்கிய க்ரிப்டோ கரன்சியான பிட்காயின் டிரம்ப் வெற்றியைத் தொடர்ந்து அதிகரித்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. பிட்காயின் உள்ளிட்ட க்ரிப்டோ கரன்சிகளை ஆதரிக்கப் போவதாக டிரம்ப் அறிவித்துள்ளதே இதற்கு முக்கிய காரணமாகும். டிரம்பின் இந்த நிலைப்பாட்டைத் தொடர்ந்து அங்குள்ள அமெரிக்கர்கள் பிட்காயினை வாங்கி குவித்து வருகிறார்கள்.
அதேபோல டிரம்பை ஆதரிக்கும் எலான் மஸ்கும் க்ரிப்டோவை ஆதரிக்கும் நபர் தான். அவர் டாஜ்காயின் என்ற க்ரிப்டோ தான் எலான் மஸ்கிற்கு பிடித்த கரன்சியாக சொல்லப்படுகிறது. இந்த டாஜ்காயின் கடந்த ஒரு வாரமாக அதிகரித்தே வருகிறது. அது சுமார் 20% வரை அதிகரித்துள்ளது.
அதிகரிக்கும் ஆர்வம்: டிரம்ப் தனது ஆட்சியில் கிரிப்டோ கரன்சிகளுக்கு ஆதரவு அளிக்கப் போவதாகவே அறிவித்து இருக்கிறார். இதனால் அடுத்த 4 ஆண்டுகள் பிட்காயின் அதிகரிக்கவே வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். மேலும், அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பிறகு பிட்காயின் டிரேடிங் அளவு கூட 350% அதிகரித்துள்ளதாக வல்லுநர்கள் சொல்கிறார்கள்.

இந்தியாவில் சட்டப்பூர்வமானதா: சரி, இந்தியாவில் இந்த கிரிப்டோ கரன்சிகள் சட்டப்பூர்வமானதா என்ற கேள்வி வரும். இந்தியாவில் கிரிப்டோ கரன்சிகளுக்கு எந்தவொரு தடையும் விதிக்கப்படவில்லை. அது ரூபாயைப் போல Legal tenderஆகச் செயல்படாது என்ற போதிலும், அதை வாங்கி, சேமிக்கத் தடை இல்லை. அதேநேரம் கிரிப்டோ கரன்சிகளில் வரும் லாபத்தில் 30% வரி செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு கடந்த 2022 பட்ஜெட்டில் அறிவித்தது. மேலும், ஒரே ஆண்டில் ரூ.50,000க்கு மேல் பரிவர்த்தனை செய்தால் அதற்கு ஒரு சதவிகித டிடிஎஸும் விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
வல்லுநர்கள் எச்சரிக்கை: அதேநேரம் உலக முதலீட்டாளர் வாரன் பபெட்டும் சரி தமிழக பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசனும் சரி இந்த க்ரிப்டோக்களில் இருந்து தள்ளி இருக்கவே அறிவுறுத்தி வருகிறார்கள். ஏனென்றால் இது எந்தவொரு ரெகுலேஷனுக்கு கீழும் வராது. மேலும், மிகப் பெரியளவில் இதில் ஏற்ற இறக்கங்களும் இருக்கும். உதாரணத்திற்குக் கடந்த 2021ம் ஆண்டு சுமார் 47,000 டாலராக இருந்த பிட்காயின் விலை, இப்போது தான் அந்த நிலையை எட்டியுள்ளது. இதனால் இதில் முதலீடு செய்தால் அவசர தேவைக்கு எடுக்க முடியாமல் போகலாம்.. அல்லது நஷ்டத்தில் எடுக்க வேண்டிய சூழல் ஏற்படலாம்.
அதெல்லாம் பிரச்சினை இல்லை.. நான் சமாளித்துக் கொள்வேன்.. எப்படி வாங்கணும் எனக் கேட்போருக்கு.. இந்தியாவிலேயே இதற்குப் பல டிரேடிங் தளங்கள் உள்ளன. எப்படி பங்குச்சந்தைகளுக்கு டிரேடிங் தளங்கள் இருக்கிறதோ.. அதேபோல க்ரிப்டோவுக்கும் இந்த டிரேடிங் தளங்களைப் பயன்படுத்தலாம். சில சர்வதேச டிரேடிங் தளங்களும் இதற்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications