விவசாயிகளுக்கு நிம்மதி.. பயிர் காப்பீட்டு திட்டம்.. "அரசுகள் கடுமை காட்டாதீங்க".. மதுரை கோர்ட் அதிரடி
சென்னை: தமிழகத்தில் குறுவை, சம்பா பருவம் எப்போது தொடங்கி, எப்போது முடியும் என்ற கால அட்டவணையை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று மதுரை ஹைகோர்ட் தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டையை சேர்ந்தவர் ஜீவகுமார்.. இவர் மதுரை ஹைகோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார்.. 2024ம் ஆண்டுக்கான குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்வதற்கான திட்டத்துக்கான டெண்டரை இறுதி செய்ய உத்தரவிடக்கோரி அந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

மத்திய அரசு: ஜீவகுமார் மனுவில், நாடு முழுவதும் பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ், பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் விவசாயிகள் 1.5 முதல் 5 சதவீத பணம் செலுத்தினால் போதும். எஞ்சிய தொகையை மத்திய, மாநில அரசுகள் செலுத்துகின்றன.
தமிழகத்தில் கடந்த 3 வருடங்களாக குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்யப்படவில்லை. பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகள் குறுவை சாகுபடிக்கும் பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படாததால் மத்திய அரசின் பங்களிப்பு தொகையை இழந்துள்ளோம். குறுவை பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தினால் பேரிடர் காலங்களில் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை இழப்பீடு கிடைக்கும்.
குறுவை சாகுபடி: இப்போது ஒரு லட்சம் விவசாயிகள் 3.50 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்துள்ளனர். தமிழகத்தில் நவம்பர் 15-க்கு முன்பு பயிர் காப்பீடு திட்டம் தொடர்பான மாநில அளவிலான குழுக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். இந்தக் கூட்டத்தில் 2024-ம் ஆண்டுக்கான குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு திட்டத்துக்கான டெண்டரை இறுதி செய்ய உத்தரவிட வேண்டும் என்று தன்னுடைய மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவானது நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ''விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு திட்டத்தை உறுதி செய்ய வேண்டும். தமிழகத்தில் முப்போகம் விளைந்தது. ஆனால், இப்போது ஒருபோகம் விளைவிப்பதே கேள்விக்குறியாக உள்ளது. விவசாயிகள் விஷயத்தில் அரசுகள் கடுமை காட்டக்கூடாது.
விவசாயிகள்: அரசின் திட்டங்கள் விவசாயிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். தமிழகத்தில் குறுவை, சம்பா பருவம் எப்போது தொடங்கி, எப்போது முடியும் என்ற கால அட்டவணையை தாக்கல் செய்ய, மத்திய வேளான் துறை செயலாளருக்கு உத்தரவிடுகிறோம்'' என்று உத்தரவிட்டனர். அத்துடன், இது தொடர்பான விசாரணையை நவம்பர் 24-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications