கூட்டணி கட்சிகள் அதிருப்தி... அதிரடி திட்டத்துடன் காங்கிரஸ்... ஹரியானாவில் கவிழும் பாஜக அரசு?
சண்டிகர்: விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹரியானாவில் பாஜக அரசுக்கு எதிராகக் காங்கிரஸ் இன்று நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வருகிறது.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராகப் போராடும் பெரும்பாலான விவசாயிகள் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். ஹரியானாவின் மாநில பாஜக அரசு விவசாய சட்டங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளதால் அம்மாநில விவசாயிகள் கடும் கோபத்தில் உள்ளனர்.
ஹரியானாவில் தற்போது பாஜக - ஜனநாயக் ஜனதா கட்சி ஆகியோரின் கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் காரணமாக இரண்டு சுயேச்சை எம்எல்ஏக்கள் பாஜக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் வாங்கிவிட்டதாகக் காங்கிரஸ் கூறியுள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானம்
அதேபோல கூட்டணிக் கட்சியான ஜனநாயக் ஜனதா கட்சியைச் சேர்ந்த சிலரும் பாஜக மீது அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வர காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது. ஹரியான சட்டசபையில் இன்று பாஜக அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. இருப்பினும், தங்கள் கட்சி எம்எல்ஏகளுக்கு நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க மாட்டார்கள் என ஜனநாயக் ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.

காங்கிரசின் திட்டம்
இந்த தீர்மானத்தின் மூலம் பாஜக அரசை கவிழ்க்க முடியாது என்றாலும்கூட தார்மீக ரீதியில் அழுத்தத்தை ஏற்படுத்தக் காங்கிரஸ் முயல்கிறது. இச்சட்டங்களுக்கு எதிராக ஹரியானா மாநில மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இந்தச் சமயத்தில் அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்தால், மக்களுக்குக் காங்கிரஸ் கட்சியின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் என்பது அக்கட்சியின் கருத்து. விவசாய சட்டங்களுக்குக் காங்கிரஸ் ஆதரவாக இல்லை என்பதையும் தெளிவாக தெரிவிக்க அக்கட்சிக்கு இது ஒரு சரியான வாய்ப்பாக அமையும்.

பாஜக திட்டவட்டம்
அதேநேரம் பாஜக இந்த தீர்மானத்தைக் கண்டு துளியும் அஞ்சவில்லை. பாஜகவுக்கு தேவையான பெரும்பான்மை இருப்பதாகவும் நம்பிக்கையில்லாத தீர்மானம் சட்டசபையில் தோற்கடிக்கப்படும் என்றும் அம்மாநில பாஜக முதல்வர் மனோகர் லால் கட்டர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் தலைநகரை விவசாயிகள் முற்றுகையிட தொடங்கியபோது, கட்டர் அரசு அவர்களை தடுக்க அதிகளவு போலீசாரை பயன்படுத்தியது. இது மக்களிடம் இருந்த கோபத்தைப் பல மடங்கு அதிகரித்தது.

ஜனநாயக் ஜனதா கட்சி
கூட்டணிக் கட்சியான ஜனநாயக் ஜனதா கட்சிக்கு இந்தத் தீர்மானம் முக்கியமானதாக இருக்கும். தொகுதிக்குச் சென்றால் மக்கள் தங்களைப் புறக்கணிக்கிறார்கள் என ஜனநாயக் ஜனதா கட்சிக்கு எம்எல்ஏக்கள் வெளிப்படையாகவே கூறியுள்ளனர். இந்த சமயத்தில் விவசாயிகள் போராட்டத்தை எதிர்க்கும் வகையில் இந்தத் தீர்மானத்தை ஆதரித்தால் அது ஜனநாயக் ஜனதா கட்சியின் அரசியல் எதிர்காலத்தைப் பாதிக்கும்.

சட்டசபை எப்படி?
90 இடங்களைக் கொண்ட ஹரியானா சட்டசபைக்குக் கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பெரும்பான்மைக்குத் தேவையான 46 இடங்களைப் பெற தவறியது. இருப்பினும், 40 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்தது. இதையடுத்து ஜனநாயக் ஜனதா கட்சி(10) மற்றும் சுயேச்சை எம்எல்ஏகளின்(2) ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்தது.












Click it and Unblock the Notifications