ஜாதியை புகுத்தியது பிராமணர்கள்.. வன்முறைகளுக்கு அவர்களே காரணம்.. பாஜக வேட்பாளர் பேச்சு
சண்டிகர்: சமூகத்தில் ஜாதியை புகுதியது பிராமணர்கள்தான் என்றும், சாதிய வன்முறைகளுக்கு அவர்கள்தான் காரணம் என்றும் ஹரியானாவின் பாஜக லோக்சபா தேர்தல் வேட்பாளர் ஒருவர் கூறியிருப்பது விவாதங்களை கிளப்பியுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. ஹரியானா மாநிலத்தை பொறுத்த அளவில், 10 லோக்சபா தொகுதிகளுக்கும் 6வது கட்டமாக மே 25ம் தேதியன்று ஒரே நாளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், அம்மாநிலத்தின் பாஜக வேட்பாளர் ஒவருவர் பிராமணர்கள் குறித்து கூறியுள்ள கருத்து பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானாவின் சிர்சாவில் உள்ள ரானியா தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றவர்தான் ரஞ்சித் சிங் சவுதாலா. இவர் சமீபத்தில்தான் அம்மாநில பாஜகவில் இணைந்தார். எனவே இவருக்கு வரும் லோக்சபா தேர்தலில் ஹிசார் தொகுதியில் நின்று போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று அவர் நடத்திய கூட்டத்தில் பிராமணர்கள் குறித்து பேசியிருப்பது சலசலப்பை கிளப்பியிருக்கிறது. அதாவது, "ஜாதி அமைப்பு தேவையில்லாமல் பிராமணர்களால் சமூகத்திடம் ஒப்படைக்கப்பட்டது, அதனால் கலவரங்கள் தொடர்ந்து நடக்கின்றன" என்று கூறியிருந்தார். இந்த கருத்து பல்வேறு தரப்பினரிடமிருந்து விமர்சனங்களை பெற்றிருக்கிறது.
குறிப்பாக பிராமணர் சங்கத்தினர் இவரது கருத்துக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜிலா பிராமண சபாவின் தலைவர் ராஜ் குமார் பரத்வாஜ் இது குறித்து கூறுகையில், "பாஜக வேட்பாளர் தனது கருத்துகள் மூலம் சாதி அமைப்பின் விஷத்தை பரப்ப முயன்று வருகிறார். பிராமண சமூகம் ஜாதி மற்றும் மத வேறுபாடின்றி மக்களை ஒன்றிணைப்பதன் மூலம் சமூகத்தை ஒன்றிணைக்க பாடுபட்டு வருகிறது. ஆனால் ரஞ்சித் சவுதாலாவின் கருத்துக்கள் தற்போது சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளன" என்று விமர்சித்துள்ளார்.
மேலும், "பிராமண சமூகம் அவரது கருத்துகளை கண்டிக்கிறது. அவர் தனது கருத்துக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்காவிட்டால், நாங்கள் அரசியல் தளத்தில் சவுதாலாவை புறக்கணிப்போம்" என்றும் கூறி, இதற்காக ஏப்ரல் 4ம் தேதி வரை கெடு விதித்திருந்தார். இதனையடுத்து சவுதாலா தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
"பிராமணர் சமூகத்தின் மீது எனக்கு ஆழ்ந்த மரியாதை உண்டு. எனது குடும்பத்தில் எந்த நிகழச்சிகளும் பிராமணர்கள் இல்லாமல் என் வீட்டில் நிறைவடையாது. எனது கருத்துக்கள் எந்தவொரு சமூகத்தினரின் உணர்வுகளையும் புண்படுத்தும் வகையில் இருந்தாலும், அக்கருத்துக்களை திரும்ப வாபஸ் பெற்றுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
முன்னதாக இதேபோல மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, ராஜ்புத் சமூகம் குறித்து கருத்து தெரிவித்திருந்தது சலசலப்புகளை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications