'பா.ஜ.க.வினரை எதிர்த்தால்.. கண்களை பிடுங்குவேன்.. ஆயுதங்களால் வெட்டுவேன்'..பாஜக எம்.பி அடாவடி பேச்சு
சண்டிகர்: மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை கண்டித்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு அவர்களுடன் இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டது. ஆனால் இதில் எதிலும் முடிவு கிடைக்கவில்லை.

விவசாயிகள் எதிர்ப்பு
ஆனால் வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் திட்டவட்டமாக உள்ளனர். பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க தலைவர்கள், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் எந்த நிகழ்ச்சியில், விழாவில் கலந்து கொண்டாலும் விவசாயிகள் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கோவிலில் சிறை பிடித்தனர்
ஹரியானா முன்னாள் அமைச்சர் மணீஷ் குரோவர் உட்பட சில பா.ஜ.க தலைவர்கள் நேற்று ரோஹ்தக் மாவட்டத்தின் கிலோய் என்ற இடத்தில் உள்ள கோயிலுக்கு சென்றனர். இதனை அறிந்த கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் அங்கு சென்று கோவிலை முற்றுகையிட்டு முன்னாள் அமைச்சர் மணீஷ் குரோவர் உள்ளிட்டவர்களை சிறைபிடித்தனர். வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய விவசாயிகளை வேலையில்லா குடிகாரர்கள் என்று மணீஷ் குரோவர் கூறியதாகவும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.
Recommended Video

பாஜக எம்பி அரவிந்த் சர்மா
சுமார் 8 மணி நேரமாக மணீஷ் குரோவர் உட்பட பா.ஜ.க தலைவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். மாவட்ட நிர்வாகமும், காவல்துறை அதிகாரிகளும் சமாதானம் செய்ததையடுத்து அவர்கள் விடுக்கப்பட்டனர். அதன்பின்னர் வெளியே வந்த முன்னாள் அமைச்சர் மணீஷ் குரோவர் '' நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். இந்த கோவிலுக்கு எப்போது வேண்டுமானாலும் வருவேன்' என்று கூறினார். இந்த நிகழ்வுக்கு ஹரியானா பாஜக எம்பி அரவிந்த் சர்மா கடும் கண்டனம் தெரிவித்தார்.

கண்களை பிடுங்குவேன்
ரோஹ்தக் மாவட்டத்தில் ஒரு பொது நிகழ்ச்சியில் பேசிய பாஜக எம்பி அரவிந்த் சர்மா கூறுகையில், '' பாஜக தலைவர் மணீஷ் குரோவரை நடத்திய விதம் கண்டித்தக்கது. மணீஷ் குரோவரை, பாஜகவினரை யார் எதிர்த்தாலும் அவர்களுடைய கண்களை பிடுங்குவேன். ஆயுதங்களால் வெட்டுவேன்'' என்று கூறியுள்ளார். பா.ஜ.க எம்.பி கூறிய இந்த பயங்கரமான கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications