ஆஹா.. கோயில், மசூதிகளை "அலாரமாக" மாற்றிய ஹரியானா அரசு.. பள்ளி மாணவர்களுக்காக 'சூப்பர் மூவ்'
சண்டிகர்: ஹரியானாவில் பள்ளி மாணவர்களை அதிகாலையிலேயே எழுந்து படிக்க வைப்பதற்காக கோயில்களையும், மசூதிகளையும் 'பார்ட் டைம்' அலாரமாக மாற்றியுள்ளது ஹரியானா அரசு.
வீட்டில் அலாரம் வைத்தால் மாணவர்கள் அதை அணைத்துவிட்டு தூங்கிவிடுவர்; பெற்றோர்கள் எழுப்பிவிட்டாலும் பல மாணவர்கள் பெரிதாக கண்டுகொள்வதில்லை என்பதால் இந்த அதிரடி முடிவில் ஹரியானா அரசு இறங்கியிருக்கிறது.
இனி அதிகாலையிலேயே கோயில்களிலும், மசூதிகளிலும் அதிக ஒலி எழுப்பப்படுவதால் மாணவர்களால் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என்கின்றனர் ஆசிரியர்கள்.
நாடு முழுவதும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கி வருகிறது. மார்ச் மாதம் இந்த பொதுத்தேர்வுகள் நடைபெற இருக்கின்றன. எப்படி பார்த்தாலும் குறைந்தபட்சம் 70 நாட்கள்தான் இந்த தேர்வுகளுக்கு இருக்கின்றன.
அலாரமாக மாறும் கோயில், மசூதிகள்
இந்நிலையில், மாணவர்களின் வாழ்க்கையில் திருப்புமுனையாக பொதுத்தேர்வுகள் கருதப்படுவதால் அவர்களை ஊக்குவிக்கும் விதமான பல்வேறு நடவடிக்கைகளில் ஹரியானா பள்ளிக்கல்வித் துறை ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது புதிய முயற்சியை ஹரியானா அரசு எடுத்துள்ளது. அதன்படி, மாணவர்களை அதிகாலை நேரத்திலேயே எழுந்து படிக்க வைப்பதற்காக கோயில்களையும், மசூதிகளையும் அலாரமாக பயன்படுத்த முடிவு செய்துள்ளது அரசு.
"வாழ்க்கையை தீர்மானிக்கும் தேர்வு"
அதன்படி, ஹரியானாவில் உள்ள அனைத்து இந்து கோயில்களுக்கும்,மசூதிகளுக்கும் ஹரியானா பள்ளிக்கல்வித் துறை ஒரு சுற்றிறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், "நம் மாநிலத்தில் 10, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இன்னும் 2 மாதங்களில் பொதுத் தேர்வுகளை எழுதவுள்ளனர். இதுதான், அவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கப் போகும் தேர்வுகள் ஆகும். எனவே, அவர்கள் படிப்பதற்கு உகந்த சூழலை ஏற்படுத்தி தருவது சமூகத்தில் உள்ள நம் அனைவரின் கடமையாகும்.
"அதிகாலை 4.30-க்கு அலறவிடுங்கள்"
மாணவர்களுக்கு காலை 9 மணிக்கு பள்ளி தொடங்கிவிடுகிறது. எனவே, அவர்கள் அதிகாலை சீக்கிரம் எழுந்தால் மட்டுமே படிக்க முடியும். மேலும், 7 மணிக்கு வாகனங்களின் இரைச்சல் தொடங்கிவிடும். இதுவும் மாணவர்களின் கவனத்தை சிதறடிக்கும். ஆனால், அதிகாலையில் இதுபோன்ற எந்த தொந்தரவும் இருக்காது. மேலும், அதிகாலையில் மாணவர்களின் மனமும் புத்துணர்ச்சியாக இருக்கும். எனவே, மாணவர்களின் தூக்கத்தை அதிகாலை 4.30 மணிக்கு கலையும் விதமாக, நீங்கள் (மசூதி, கோயில் நிர்வாகங்கள்) பக்தி பாடல்களை சற்று அதிக ஒலியுடன் வைக்க வேண்டும். 10 நிமிடங்கள் இந்த பாடலோ, மந்திரமோ ஒலிக்கச் செய்யுங்கள்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"படிப்பதை உறுதி செய்ய வேண்டும்"
அதேபோல், ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் ஒரு அறிவுறுத்தலை ஹரியானா பள்ளிக்கல்வித் துறை வழங்கியிருக்கிறது. அதாவது, கோயில், மசூதிகளில் இந்த சத்தம் கேட்டவுடன், மாணவர்கள் எழுந்து படிக்கிறார்களா என்பதை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும். மேலும், ஒவ்வொரு பெற்றோரிடமும் ஆசிரியர்கள் வாட்ஸ் அப் மூலமாக, இன்று அதிகாலை உங்கள் மகன்/மகள் எழுந்து படித்தாரா? எனக் கேட்பார்கள். அதற்கு உண்மையாக பதில் அனுப்ப வேண்டும். இதில் ஆசிரியர்களுடன் ஒத்துழைக்காத பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்து நிர்வாகம் விளக்கம் கேட்க வேண்டும் என ஹரியானா பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. பள்ளி மாணவர்கள் நலனில் ஓர் அரசே இத்தனை மெனக்கெடுவதை நிச்சயம் பாராட்டிதான் ஆக வேண்டும்.