பெட்ரோலில் எத்தனால் கலப்பால் 50 ஆயிரம் கோடி ரூபாயை சேமிச்சிட்டோம் தெரியுமா.. பிரதமர் மோடி பெருமிதம்
சண்டிகர்:பெட்ரோலில் எத்தனாலை கலப்பதன் மூலம் கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் ரூ.50 ஆயிரம் கோடி அன்னிய செலாவணியை இந்தியா சேமித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஹரியானாவின் பானிபட் நகரில் இண்டியன் ஆயில் நிறுவனம் சார்பில் இரண்டாம் தலைமுறை எத்தனால் தயாரிப்பு ஆலை ரூ.900 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியா பெட்ரோல், டீசல் தேவைக்கு வெளிநாடுகளையே அதிகம் சார்ந்துள்ளது. இதனால் ஆண்டுதோறும் பல லட்சம் கோடி செலவில் பெட்ரோல், டீசலை நாம் இறக்குமதி செய்து வந்தோம். இதனால் நமது அன்னிய செலாவணியின் இருப்பு கணிசமாக குறைந்து வந்தது. முந்தைய ஆட்சியாளர்கள் இதுகுறித்து பெரிதாக கவலைப்படவில்லை. ஆனால் 2014-ம் ஆண்டில் பாஜக ஆட்சி அமைந்தது முதலாக இந்த விவகாரத்தில் எனது தலைமையிலான அரசு தீவிர கவனம் செலுத்தியது. பெட்ரோலை நம்மால் உற்பத்தி செய்ய முடியாது என்ற போதிலும், அதில் எத்தனாலை கலப்பதன் மூலம் அதன் பயன்பாட்டை குறைக்க முடியும் என ஆராய்ச்சிகள் தெரிவித்தன.
எனவே பெட்ரோலில் எத்தனாலை கலப்பதற்கான நடவடிக்கையில் அரசு தீவிரமாக இறங்கியது. இதற்காக பல இடங்களில் எத்தனால் ஆலைகள் அமைக்கப்பட்டன. இதன் விளைவாக, 40 கோடி லிட்டர் என்ற ரீதியில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த எத்தனால், தற்போது 400 கோடி லிட்டராக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பெட்ரோலில் எத்தனாலை கலந்ததால் கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் ரூ.50 ஆயிரம் கோடி அன்னிய செலாவணியை நாம் சேமித்திருக்கிறோம். இந்த அன்னிய செலாவணியானது அப்படியே நமது விவசாயிகளின் மேம்பாட்டுக்காக செலவிடப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய சாதனை ஆகும்.
இப்போது பானிபட்டில் திறக்கப்பட்டுள்ள இந்த இரண்டாம் தலைமுறை எத்தனால் ஆலையால் ஹரியானா, டெல்லியில் விவசாயக் கழிவுகள் எரிக்கப்பட்டு மாசு ஏற்படுவது முற்றிலுமாக ஒழிக்கப்படும். முழுக்க முழுக்க விவசாயக் கழிவுகளை வைத்து இரண்டாம் தலைமுறை எத்தனால் தயாரிக்கப்படுவது விவசாயிகளுக்கு வரப்பிரசாதம் ஆகும். ஏனெனில் வீணாகப் போகும் விவசாயக் கழிவுகளில் இருந்து கூட விவசாயிகள் இனி அதிக அளவில் லாபம் ஈட்டுவார்கள். பானிபட் ஆலையில் ஆண்டுதோறும் 2 லட்சம் டன் வைக்கோல்கள் மூலம் 3 கோடி லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்யப்படும். இது நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை வழங்கும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.












Click it and Unblock the Notifications