பஞ்சாப் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி- ஒரு எம்.எல்.ஏவுக்கு ரூ20 கோடி- பட்ஜெட் ரூ1,375 கோடி.. ஆம் ஆத்மி
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி ஆட்சியை கலைக்க ஒரு எம்.எல்.ஏ.வுக்கு ரூ20 கோடி வீதம் மொத்தம் ரூ1,375 கோடியை பாஜக ஒதுக்கியுள்ளதாக அக்கட்சி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
பஞ்சாப் சட்டசபை தேர்தலில் காங்கிரஸிடம் இருந்து அதிகாரத்தைக் கைப்பற்றியது ஆம் ஆத்மி. இம்மாநிலத்தில் ஆம் ஆத்மி, பாஜக, அகாலிதள் கட்சிகளுக்கு பின்னால் 4-வது இடத்தில்தான் பாஜக உள்ளது. தமிழ்நாட்டைப் போல பாஜக வேரூன்ற முடியாத மாநிலங்களில் ஒன்று பஞ்சாப்.

இம்மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்ப்பதற்கு பாஜக சதி செய்வதாக பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக பஞ்சாப் மாநில நிதி அமைச்சர் ஹர்பால்சிங் சீமா கூறியதாவது: ஆபரேஷன் தாமரை திட்டத்தை பஞ்சாப்பில் செயல்படுத்த பாஜக சதித் திட்டம் தீட்டியுள்ளது. இதற்காக பிரமுகர்களை பஞ்சாப் மாநிலத்துக்கு அனுப்பி வைத்துள்ளது பாஜக. பஞ்சாப்பில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியை இரண்டாக உடைத்து ஆட்சியைக் கவிழ்ப்பதுதான் பாஜகவின் திட்டம்.
இப்போது ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களுக்கு பேரம் பேசி வலை வீசி வருகிறது பாஜக கூட்டம். இதுவரை மொத்தம் 7 எம்.எல்.ஏக்களிடம் பாஜகவினர் பேரம் பேசி இருக்கின்றனர். ஆம் ஆத்மி கட்சியை உடைத்து ஆட்சியைக் கவிழ்க்க உதவினால் ஒரு எம்.எல்.ஏக்கு ரூ20 கோடி வழங்குவதாகவும் பேரம் பேசி உள்ளனர். அத்துடன் அமைச்சர் பதவியை வழங்குவோம் எனவும் உறுதி அளித்திருக்கின்றனர்.
அதேநேரத்தில் ஒரு எம்.எல்.ஏ. இன்னொரு எம்.எல்.ஏ.வை அழைத்து வந்தால் கூடுதலாக ரூ25 கோடி வழங்குவதாகவும் வாக்குறுதி தரப்பட்டுள்ளது. இந்த பேர விவரங்களுக்கு உறுதியான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. இதனை உரிய நேரத்தில் அம்பலப்படுத்துவோம். பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்ப்பதற்கு மொத்தம் ரூ1,375 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாம் பாஜக. இவ்வாறு ஹர்பால்சிங் சீமா கூறினார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை பாஜகவின் அனில் சரீன் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களிடம் நாங்கள் பேரமே பேசவில்லை என்பது அவரது நிலைப்பாடு. டெல்லியிலும் ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்வதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்ததும் பரபரப்பை கிளப்பியது.












Click it and Unblock the Notifications