தரையிலேயே படுத்து தூங்கி.. மடம் ஒன்றில் இரவு முழுக்க தங்கிய பஞ்சாப் முதல்வர் சன்னி.. ஏன்? என்னாச்சு?
சண்டிகர்: பஞ்சாப்பில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அம்மாநில முதல்வர் சரண்சித் சிங் சன்னி அங்கு உள்ள தேரா மடம் ஒன்றில் இரவு முழுக்க தங்கியது கவனம் பெற்றுள்ளது.
பஞ்சாப் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அங்கு விர்ச்சுவல் பிரச்சாரங்கள் தீவிரமாக நடந்து வருகிறது. பஞ்சாப் சட்டசபை தேர்தலில் இந்த முறை தலித் வாக்குகள், இடைநிலை சாதியினரின் வாக்குகள் அதிக மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 20ம் தேதி அங்கு தேர்தல் நடக்கிறது .
ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் இவர்களின் வாக்குகளை குறி வைத்துதான் தேர்தலில் காய் நகர்த்தி வருகின்றன. இந்த நிலையில்தான் தலித் சமூகத்தை சேர்ந்த அம்மாநில முதல்வர் சரண்சித் சிங் சன்னி சமீபத்தில் மடம் ஒன்றில் தங்கியது கவனம் பெற்றுள்ளது.
தேரா அமைப்பு
பஞ்சாப்பில் தேரா என்ற ஆன்மீக அமைப்புகள் நிறைய உள்ளன. சீக்கியர்களை கொண்ட தேரா அமைப்புகள் நிறைய உள்ளன. அதேபோல் சீக்கியர்கள் இல்லாத தேரா அமைப்புகளும் நிறைய உள்ளன. குர்மீத் ராம் ரஹீமின் தேரா சச்சா அமைப்பையும், இது தொடர்பான வழக்குகளை கேள்வி பட்டு இருப்பீர்கள். பத்திரிகையாளரை கொலை செய்தது மற்றும் பாலியல் வன்புணர்வு செய்தது உள்ளிட்ட வழக்குகளில் இவர் கைதானது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவரின் தேரா சச்சா அமைப்பு சீக்கிய அமைப்பு கிடையாது.
தலித் மக்கள்
இதற்கு தொடர்பு இல்லாத பல்வேறு ஆன்மீக ரீதியான சீக்கிய தேரா அமைப்புகள் உள்ளன. தேரா நானாஸ்கர், தேரா பாபா ரூமி வாலா போன்ற பிரபல அமைப்புகள் உள்ளன. இந்த அமைப்புகள் பெரும்பாலும் ஆன்மீக பாதையை போதிக்கும் துறவு அமைப்புகள் ஆகும். பெரும்பாலும் இந்த அமைப்புகளில் தலித் மக்கள், பிற்படுத்தப்பட்ட சாதியினர், இடைநிலை சாதியினர், சீக்கியர்கள் அதிக அளவில் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
தேரா சாக்காண்ட் பல்லான்
அப்படி ஒரு அமைப்புதான் தேரா சாக்காண்ட் பல்லான் அமைப்பு. சீக்கியர்கள் வணங்கும் குரு ரவிதாஸ் மூலம் தொடங்கப்பட்ட அமைப்பு ஆகும் இது. பஞ்சாப்பில் வலிமை வாய்ந்த தேரா அமைப்புகளில் ஒன்றாக தேரா சாக்காண்ட் பல்லான் அமைப்பு பார்க்கப்படுகிறது. இந்த அமைப்பில் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் பலர் உறுப்பினர்களாக உள்ளனர். பஞ்சாபில் டோபா மண்டலத்தில் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் முக்கிய அமைப்பாக தேரா சாக்காண்ட் பல்லான் உள்ளது.
முதல்வர் சன்னி
இந்த நிலையில்தான் ஜலந்தரில் தேரா சாக்காண்ட் பல்லான் அமைப்பின் மடத்தில் நேற்று முதல்நாள் இரவு அம்மாநில முதல்வர் சன்னி தங்கினார். இரவு முழுக்க பெரிய அளவில் பாதுகாப்பு இன்றி அந்த மடத்திலேயே சன்னி தூங்கினார். குடியரசுத் தினத்திற்கு முதல் நாள் இரவு சன்னி அந்த மடத்திற்கு சென்றார். இரவு 7 மணிக்கு பின் அவர் அங்கே சென்று தங்கினார். பின்னர் சில நிமிடங்கள் வழிபாடு நடத்தினார்.
தரையில் தூங்கினார்
பின்னர் அங்கேயே எளிமையான உணவு உட்கொண்டார். அதை தொடர்ந்து மடத்தின் தலைவர் நிரஞ்சன் தாஸ் அறையில் வெறும் தரையில் எளிமையாக சன்னி உறங்கினார். மடத்தின் போதனைகள் அடங்கிய கேசட் ஒன்றை ஒலிக்கவிட்டு அங்கயே உறங்கியவர் மறுநாள் காலை குடியரசு தின விழாவில் கலந்து கொண்டார். அம்மாநில தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் இடையே இது பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
Recommended Video
வாக்குகள் முக்கியம்
தேர்தல் நேரத்தில் இது போன்ற நடவடிக்கைகள் வழக்கில் முடியும் வாய்ப்புகள் இருந்தாலும், என் மனதிற்கு பிடித்ததை நான் செய்வேன். எனக்கு குரு ரவிதாஸ் மீதான பற்றி அதிகம். அதனால் தேரா சாக்காண்ட் பல்லான் மடத்தில் தூங்கினேன் என்று அம்மாநில முதல்வர் சன்னி கூறியுள்ளார். தேரா சாக்காண்ட் பல்லான் அமைப்பு அங்கு 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தேர்தல் முடிவை மாற்றும் திறன் கொண்டது. இப்படிப்பட்ட நிலையில்தான் தேரா சாக்காண்ட் பல்லான் மடத்திற்கு சென்று முதல்வர் தரையில் படுத்து தூங்கி இருக்கிறார்.