தமிழக பெண்களே ஹேப்பியா.. புதிதாக வருகிறது 10,000 மகளிர் குழுக்கள்.. பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் 10 ஆயிரம் புதிய மகளிர் குழுக்கள் அமைக்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
தமிழக அரசின் 2024- 2025 ஆம் நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வாசித்து வருகிறார். அவர் தனது உரையில் திருக்குறளை கூறி முதல்வரை புகழ்ந்தார்.

அவர் தனது உரையில் காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம் குடிமக்கள் எளிதில் அணுகக் கூடியவராகவும் கடுமையான சொற்களை கூறாது ஆட்சி புரிந்து வரும் அரசனினை உலகமே போற்றும். அது போல் கடைக் கோடி மக்களும் எளிதில் அணுகக் கூடியவராக உள்ள முதல்வர் ஸ்டாலினால் தமிழகத்திற்கே பெருமை.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 100 ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கைகள் தமிழர்களை தலைநிமிரச் செய்துள்ளன. கீழடியில் ₹17 கோடி செலவில் திறந்தவெளி அரங்கம் அமைக்கப்படும். மேலும் கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டிலேயே அகழாய்வுக்கு பட்ஜெட்டில் அதிக தொகை ஒதுக்கிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
சிலப்பதிகாரம், மணிமேகலையை 25 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய ₹2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 2030க்குள் குடிசையில்லாத் தமிழ்நாடு, கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயரில் 6 ஆண்டுகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். வடசென்னை வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலம் புதிய குடியிருப்புகள், திறன்மிகு பள்ளிகள், தொழிற்பயிற்சி மையங்கள், மருத்துவமனைகள் அமைக்கப்படும். ஏரிகள் சீரமைக்கப்படும்.
சென்னையின் கோவளம், பெசன்ட் நகர், எண்ணூர் ஆகிய கடற்கரைகள் ரூ 100 கோடி மதிப்பீட்டில் அழகுப்படுத்தப்படும். தமிழக அரசின் புதுமைப் பெண் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு ரூ 13,720 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அது போல் வரும் நிதியாண்டில் புதிதாக 10 ஆயிரம் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஒரு கிராமத்தில் 12 முதல் 20 பெண்கள் வரை இணைந்து சுய தொழில் செய்வது, அவர்களின் பொருளாதாரம் உயர கடன் வழங்குவது உள்ளிட்டவை இந்த திட்டத்தின் நோக்கமாகும். மகளிர் சுய உதவிக் குழுக்கள் முதலில் தருமபுரியில் உருவாக்கப்பட்டது. பிறகு படிப்படியாக தமிழகத்தில் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications