ஊட்டியில் விருப்பம் போல பயணிக்க 10 பஸ்கள்.. முதல்வரின் அறிவிப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. ஊட்டியில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக 10 பேருந்துகள் இயக்கப்படும் என்றும், கூடுதலாக ரூ.20 கோடியில் வாகன நிறுத்தம் அமைக்கப்படும் என்றும் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். ஸ்டாலினின் இந்த அறிவிப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவில், வார நாட்களில் நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் வாகனங்களும், வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்களும் மட்டும் ஊட்டிக்கு அனுமதிக்க வேண்டும் எனவும், கொடைக்கானலில் வார நாட்களில் 4 ஆயிரம் வாகனங்களும், வார இறுதி நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களும் மட்டும் அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவால் உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, அதனை மறு ஆய்வு செய்யக் கூறி நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, வாகன கட்டுப்பாட்டை அமல்படுத்துவதில் பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், சமீபத்தில் ஊட்டி சென்ற முதல்வர், ஊட்டியில் சுற்றுலாப் பயணிகள் விருப்பம் போல் பயணம் செய்யும் வகையில் 5 கோடி ரூபாய் செலவில் 10 பேருந்துகள் இயக்கப்படும் எனவும், 20 கோடி ரூபாய் செலவில் வாகன நிறுத்தம் அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளதாக அரசு தலைமை வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு பாராட்டும், வரவேற்பும் தெரிவித்த நீதிபதிகள், வாகன கட்டுப்பாட்டை அமல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை உரிய தரவுகளோடு மனுவாக தாக்கல் செய்ய நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.












Click it and Unblock the Notifications