அரசியல் கட்சிகளுக்கு இது ஒரு பாடம்.. இனி எல்லா தேர்தலிலும் இப்படித்தானா? ரூல்ஸை மாற்றிய தவெக!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளை கதிகலங்க வைத்துள்ளது. பல கட்ட சோதனைக்குப் பிறகு வேட்பாளர் தேர்வு, தீவிர பிரச்சாரம், வலிமையான தேர்தல் அறிக்கை என களமிறங்கியபோதும், புதிய கட்சியான தவெகவால் இருபெரும் திராவிடக் கட்சிகளும் தோற்கடிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தற்போதுவரை தவெக 107 இடங்களில் முன்னிலையில் இருந்துவருகிறது. அடுத்தப்படியாக 72 தொகுதிகளில் திமுகவும், மூன்றாம் இடத்தில் அதிமுக 55 இடங்களில் முன்னிலையிலும் இருக்கின்றன.

முதல் முறையாக தேர்தல் களத்தை எதிர்கொண்ட தவெக, அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது அரசியல் அரங்கில் அனைவரின் புருவங்களையும் உயரச் செய்துள்ளது. பெரும்பான்மையான கருத்துக் கணிப்புகளுக்கு மாறாக தவெக ஆட்சியைப் பிடிக்கும் சூழலுக்கு முன்னேறியுள்ளது. மற்ற கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன், இன்றைய தமிழ்நாடு தேர்தல் முடிவுகளிலிருந்து நான் கற்றுக்கொண்ட பாடங்கள் எனக் குறிப்பிட்டு சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதன்படி,
1. வாரக்கணக்கில், தினமும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியமில்லை.
2. வாக்காளர்களைத் திரட்ட, வாக்குச்சாவடி முகவர்கள் எப்போதும் அவசியமில்லை.
3. ஒரு வலிமையான தேர்தல் அறிக்கை தேவையில்லை.
4. அரசியல் அனுபவம் தேவையில்லை.
5. அனுபவம் வாய்ந்த ஆலோசகர்கள் இருப்பது கட்டாயமல்ல. அது ஆப்ஷனல் தான்.
6. ஊடகங்களைச் சந்திப்பதோ அல்லது பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதோ அவசியமில்லை.
7. பணத்தால் எப்போதும் வாக்குகளை விலைக்கு வாங்கிவிட முடியாது.
8. விளம்பரங்களுக்காகப் பெருமளவில் செலவு செய்வது மட்டும் தேர்தல் வெற்றியைத் தந்துவிடுவதில்லை.
9. செல்வாக்கு மிக்க, பிரபலமான உள்ளூர் வேட்பாளர்கள் இருப்பது அவசியமில்லை.
10. தேர்தலில் சாதி ஒரு காரணியாகச் செயல்படும் தன்மை வெகுவாகக் குறைந்து வருகிறது.
வரும் காலத் தேர்தல்களில் இந்தப் போக்குகள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புமா? அல்லது ஒரு தீர்க்கமான மாற்றம் நிகழ்ந்துவிட்டதா? என சுமந்த் ராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications