10 தொகுதிகளில் தேர்தலை நிறுத்த திட்டம்? ‘வேலூர் ஃபார்முலா’ மூலம் திமுகவை மடக்க பார்க்கும் பாஜக?
சென்னை: மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் குறைந்தது 10 தொகுதிகளில் தேர்தலை நிறுத்த பாஜக மறைமுகமாகத் திட்டமிட்டு வருவதாகத் தகவல் கசிந்துள்ளது.
திமுக தேர்தல் குழுவுடனான தனது சந்திப்பை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று தவிர்த்திருக்கிறார். கட்சியின் உயர்மட்டக் குழுக் கூட்டம் நடைபெறுவதால், இச்சந்திப்பு நடைபெறவில்லை என்று காரணம் கூறி இருக்கிறார்.

ஆனால், திமுக 3 சீட்டுகளை உறுதி செய்வதற்கு முன்னால், இந்தச் சந்திப்பை நடத்த வேண்டாம் எனக் கட்சியின் உயர்மட்டக் குழு முடிவெடுத்துள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது.
கட்டாயம் 3 சீட்டுகள் ஒதுக்கப்படும் என்ற பிறகே கூட்டணி ஒப்பந்தத்தில் விசிக கையெழுத்திட வேண்டும் என்ற நிலைப்பாட்டையும் அக்கட்சி எடுத்துள்ளது.
இந்தக் கூட்டத்தில் சில முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கட்டாயம் அனைத்து தொகுதிகளிலும் இவிஎம் இயந்திரங்களுடன் விவிபேட் வசதி கட்டாயம் செய்து தரப்பட வேண்டும் என்று தீர்மானம் போட்டுள்ளது விசிக. அதாவது 100% விவிபேட் பயன்பாட்டில் இருக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளது.

இந்தத் தீர்மானத்திற்குப் பின்னால் மிக முக்கியமான செய்தி உள்ளது. இந்த முறை பாஜக விவிபேட் வசதியைத் தேர்தலில் முழுமையாகப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரக் கூடாது என்று நினைக்கிறது என்கிறார்கள். அதை மனதில் வைத்துத்தான் இந்தத் தீர்மானம் போடப்பட்டுள்ளது.
இதே மாதிரி நாடாளுமன்றத் தேர்தலை 7 அல்லது 8 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. அதற்குப் பின்னால் மத்திய அரசின் அழுத்தம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
சில தேர்தல் அதிகாரிகள் பாஜகவுக்கு ஆதரவாகக் காய் நகர்த்தத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதைப்போல் வாக்குப் பதிவுக்கும் எண்ணிக்கைக்கும் இடையிலான நாள்களை அதிகப்படுத்தவும் விரும்புவதாகப் பேச்சு அடிபடுகிறது.

ஆகவே விசிக, இந்த இடைவெளியைக் குறைக்கவும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இந்தளவுக்கு விசிக அலர்ட் ஆவதற்குப் பின்னால் சில காரணங்கள் உள்ளன.
எப்படி காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற முழக்கத்தை பாஜக முன்வைத்து வருகிறதோ அதேபோல் திமுக இல்லாத தமிழ்நாடு என்ற கோஷத்தைப் பிரதமர் மோடி தனது பிரச்சாரத்தின் மூலம் தொடங்கி வைத்துள்ளார்.
சமீபத்தில் தமிழகம் வந்த மோடியிடம் அண்ணாமலை மட்டுமே க்ரீன் ரூமில் உட்கார்ந்து வார் ரூம் பற்றிய சில திட்டங்களை முன்வைத்துள்ளார். இந்தச் சந்திப்பில் அண்ணாமலை மட்டுமே இடம்பெற்றுள்ளார்.

எல்.முருகனுக்குக் கூட அனுமதி வழங்கப்படவில்லை என்கிறார்கள். சுமார் 20 நிமிடம் மோடியுடன் உரையாடி உள்ளார் அண்ணாமலை.
அப்போது ஆளும் கட்சியான திமுக ஒரு வாக்காளருக்கு 300 டு 500 ரூபாய் தர உள்ளதாகத் தகவல் தந்துள்ளார். ஒரு தொகுதிக்கு 10 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
அதில் 8 லட்சம் பேருக்கு இந்த 300 ரூபாய் பணப்பட்டுவாடா செய்ய திமுக திட்டமிட்டுள்ளது என்று மோடியின் காதில் போட்டுள்ளார். ஓட்டுக்காக அனைத்து கட்சிகளும்தான் இதைச் செய்கின்றன.

ஆனால், அந்த விசயத்தில் திமுகவைத் தனிப்பைப் படுத்த வேண்டும். அப்படிச் செய்தால் அவர்களின் செயல்பாட்டைச் சற்று முடக்க முடியும் என்று சொன்னதாகத் தெரிகிறது.
அப்போது மத்திய உளவுத்துறைக்கு முன்னதாகவே தமிழக பாஜக தரப்பிலிருந்து சில தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன என்பதையும் அண்ணாமலை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதிமுகவும் பணப்பட்டுவாடா பற்றிப் போட்டுள்ள ப்ளானை மோடிக்கு தெரிவித்திருக்கிறார் என்கிறார்கள். எனவே தேர்தல் அதிகாரிகளைத் தாண்டி ஐடி அதிகாரிகள் இடி அதிகாரிகள் எனத் தொகுதிக்கு 2 அதிகாரிகளைக் கண்காணிக்கவும் ரெய்டு நடத்தவும் நியமிக்க வேண்டும் என பாஜக மாநிலத்தலைமையான அண்ணாமலை வேண்டுகோள் வைத்துள்ளார்.

இதற்கு முன்பாகவே சமீபத்தில் தமிழ்நாட்டுக்கு வந்த அமலாக்கத்துறை தலைமை அதிகாரியிடம் காவல்துறையில் உள்ள திமுக ஆதவரான 48 உயர் அதிகாரிகளின் பட்டியலும் வழங்கப்பட்டுள்ளது. அதையும் மோடி சந்திப்பில் சுட்டிக்காட்டி உள்ளார்.
குறிப்பாக 10 தொகுதிகளை நாம் முடக்க வேண்டும். பணப் புழக்கத்தைத் தடை படுத்த வேண்டும். ரெய்டு செய்தியைப் பரப்பிக் கொண்டே இருக்க வேண்டும். அதன்மூலம் கடந்த முறை துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த்தின் வேலூர் தொகுதியில் தேர்தலை நிறுத்தியதைப் போல் 10 தொகுதிகளில் நிறுத்தினால், அது நாடு முழுவதும் பரபரப்பாக மாறிவிடும் என்று கருத்துகளை முன்வைத்துள்ளார் அண்ணாமலை என்கிறார்கள்.
இதற்கிடையே அதிமுக சார்பில் வேட்பாளர்களை நிறுத்த 15 முதல் 20 கோடி டெபாசிட் செய்யச் சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி. அவர் பக்கமும் வைட்டமின் அதிகம் புழங்கலாம். அவரையும் கொஞ்சம் அமுக்க அதிகாரிகளை அமர்த்த வேண்டும் எனப் பக்கம் பக்கமாகச் செய்திகளை வாசித்துள்ளார் மலை.














Click it and Unblock the Notifications