பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு
சென்னை: பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை உச்ச நீதிமன்ற ஒப்புதல் இல்லாமல் பின்பற்ற முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
அதே நேரம், மருத்துவ படிப்புக்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது அனுமதிக்கத்தக்கது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து குழு அமைத்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2020 ஜூலையில் உத்தரவிட்டது.

திமுக வழக்கு
இந்த உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் அமர்வு விசாரித்தபோது, திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நடராஜ் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். திமுக தரப்பில் தமிழக அரசின் இட ஒதுக்கீடை அமல்படுத்துவது குறித்து முடிவு செய்யவே குழு அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும், மத்திய அரசின் 27 சதவீத இட ஒதுக்கீடு என்பது மத்திய அரசு கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் 69 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது. நீண்ட போராட்டங்களுக்கு பின் கிடைத்த இடஒதுக்கீட்டை பறிக்க கூடாது எனவும் வாதிடப்பட்டது.

அவமதிப்பு இல்லை
மத்திய அரசுத் தரப்பில், உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் குழு நியமிக்கப்பட்டு, அதன் பரிந்துரை அடிப்படையில், மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், நீதிமன்ற அவமதிப்பு ஏதும் செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் மத்திய அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்
மேலும், பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டால், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும், பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டுக்கும், இந்த வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும், உயர் நீதிமன்றத்தின் உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டது. இந்த வழக்கில், இன்று தீர்ப்பளித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நாடு முழுவதற்கும் ஒரே மாதிரியாக இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் எனவும், ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு மாதிரியாக இடஒதுக்கீடு பின்பற்ற முடியாது என்பதால், மருத்துவ படிப்புக்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு அனுமதிக்கத்தக்கது எனத் தீர்ப்பளித்தது.

உச்சநீதிமன்ற ஒப்புதல் தேவை
அதேசமயம், பொருளாதார ரீதியில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு என்பது, மொத்த இடஒதுக்கீட்டு அளவான 50 சதவீதத்திற்கு அதிகமாக உள்ளதால், உச்ச நீதிமன்ற ஒப்புதல் இல்லாமல் அந்த இடஒதுக்கீடு அனுமதிக்கத்தக்கதல்ல என நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர். நீதிமன்ற உத்தரவின்படி குழு அமைக்கப்பட்டு, இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதால் நீதிமன்ற உத்தரவுகள் வேண்டுமென்றே மீறப்படவில்லை எனக் கூறிய நீதிபதிகள், திமுக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தனர்.












Click it and Unblock the Notifications