2026இல் விஜய்க்கு 10% ஓட்டு? சொல்வது யார் தெரியுமா? ராகுல் பக்கம் தாவுகிறாரா விஜய்?
சென்னை: விஜய் கட்சி ஆரம்பித்து இன்னும் ஒரு தேர்தலில்கூட போட்டியிடாத நிலையில் அக்கட்சிக்கு 10% வாக்குகள் உள்ளன என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளரே வாக்குமூலம் அளித்திருப்பது தவெக தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தைக் கிளப்பியுள்ளது.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் விஜய் தனது கட்சியின் பெயரை அறிவித்தது முதல் பல்வேறு ஊகங்கள் அரசியல் களத்தில் முன்வைக்கப்பட்டும், விவாதிக்கப்பட்டும் வருகின்றன. 2026இல் தனது கட்சி தேர்தலில் போட்டியிடும் மிகத் தெளிவாக அவர் கூறிவிட்டார். ஆனால், இவர் தனித்துப் போட்டியிடுவாரா? அல்லது கூட்டணி வைத்துத் தேர்தலை எதிர்கொள்வாரா? என்பது பற்றி தெளிவாக இன்னும் தெரியவில்லை.

ஆனால், இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என எதிலும் தனது கட்சி போட்டியிடப் போவதில்லை என்பதை தவெக தெளிவுபடுத்திவிட்டது. பள்ளி மாணவர்களுக்குப் பரிசு வழங்கும் விழா வரை அவர் திமுகவை எதிர்க்கவே கட்சி தொடங்கி உள்ளார் என்ற பேச்சு நிலவி வந்தது. அதற்கு மாறாக நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்ற திமுகவின் கொள்கைக்கு ஒத்து ஊதிவிட்டார் விஜய் என பாஜக தரப்பு குற்றஞ்சாட்டி வருகிறது. விஜய், திமுகவின் அரசியல் பாதையைக் கையில் எடுத்தால் அது பாஜகவுக்கு ஆதாயம்தான் என்று அண்ணாமலை விளக்கமளித்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் எனச் சொன்ன விஜய், மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்ற மோடிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
சீமானின் நாதக 8%க்கும் மேல் வாக்குகளைப் பெற்றதால் தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் கிடைக்க இருந்த நிலையில், விஜய் அக்கட்சிக்கு வாழ்த்து சொன்னார். அதேபோல் விசிகவுக்கு மாநிலக் கட்சி அங்கீகாரம் பெற்றதற்கும் வாழ்த்து சொன்ன விஜய், 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக தலைமைக்கு வாழ்த்து சொல்லவே இல்லை. ஸ்டாலினுக்கும் அவர் வாழ்த்து தெரிவிக்கவில்லை.
ஆனால், பிரதமரான மோடிக்கு வாழ்த்து சொன்ன அவர், எதிர்க்கட்சி தலைவராகப் பதவியேற்ற ராகுல் காந்திக்கும் வாழ்த்து சொல்லி இருந்தார். அவருக்கும் ராகுலுக்கும் பல ஆண்டுகளாகவே நல்ல நட்பு இருந்து வருகிறது. 2009இல் ராகுல் காந்தியைச் சந்தித்து விஜய் பேசி இருந்தார். அப்போது புதுச்சேரி முதல்வர் வைத்தியலிங்கம் முன்னிலையில் மக்கள் இயக்கம் சார்பில் விஜய் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதில் 50 பேர் கலந்து கொண்டனர்.
அப்போதே அரசியலுக்கு வருவது தனது நோக்கம் என்று பேசிய விஜய், நிதானமாகவே வருவேன் என்று விளக்கம் அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்துதான் விஜய்க்கு ராகுலிடம் இருந்து அழைப்பு வந்தது. அப்போது டெல்லி சென்ற விஜய் கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் அவருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.
இதற்கு பிறகு 2014இல் கோவை வந்த பிரதமர் மோடியை விஜய் சந்தித்துப் பேசினார். அந்தச் சந்திப்புக்குப் பிறகு பேசிய விஜய், "நாட்டின் மிகப்பெரிய தலைவர் மோடி. அவர் என்னைச் சந்திக்க விரும்பினார். அவரது விருப்பத்தை ஏற்றுச் சந்தித்தேன். இது முழுக்க முழுக்க மரியாதை நிமித்தமான சந்திப்பு" என்று கூறியிருந்தார். இந்தச் சந்திப்பை அடுத்து 2017ல் மெர்சல் படத்தை பாஜகவினர் எதிர்த்து வந்த நிலையில், அப்போது விஜய்க்கு ஆதரவாக ராகுல்காந்தி ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்தான் 2026இல் விஜய் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடலாம் என்ற ஒரு பேச்சு உலா வர தொடங்கி உள்ளது. அது பற்றி விளக்கம் அளித்துள்ள அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆனந்த் சீனிமாவன், "நீட் தேர்வை விஜய் எதிர்த்துப் பேசினால் ஓட்டு விழாது என்பதால் அவர் நீட் தேர்வு வேண்டாம் என்று பேசி இருக்கிறார். அவருக்குக் குறைந்தது 2026இல் 10% வாக்குகள் கிடைக்கும் என்பது என் கணிப்பு.
விஜயகாந்த் முதன்முதலாகக் கட்சி ஆரம்பித்துத் தேர்தலில் போட்டியிட்ட போது 8% க்கும் மேல் வாக்குகள் கிடைத்தன. அதை அப்படியே நான் விஜய்க்குப் பொருத்திப் பார்க்கிறேன். அவரைவிட இவருக்கு இளம் ரசிகர்கள் அதிகம் என்பதால் ஒரு 10% வரலாம் என யூகிக்கிறேன். இதுதான் என் சிம்பிள் லாஜிக்.
மேலும் மற்றொரு பக்கம் அதிமுக கரைந்துகொண்டே வருகிறது. ஆகவே இந்தக் கட்சியின் ஓட்டுகளும் சீமானுக்குக் கிடைக்கும் ஓட்டுகள் எல்லாம் ஆளும் கட்சிக்கு எதிரான ஓட்டுகள்தான் என்பதால், விஜய் அரசியலுக்கு வந்த பிறகு அவை இவருக்கு விழ ஆரம்பித்துவிடும் என்பதாலும் விஜயகாந்த் கட்சியின் வீழ்ச்சி அப்படியே விஜய் பக்கம் மாறும் என்பதாலும் இந்த 10% கிடைக்கும் என நான் ஊகித்துச் சொல்கிறேன். அதில் மாற்றங்கள் வரலாம்.
ஆனால், விஜய்க்கு கணிசமான ஓட்டு வரும் என்பது உண்மை. எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் பதவியேற்றதற்கு விஜய் வாழ்த்து சொன்னார் என்பதால், உடனே கூட்டணி உருவாகும் எனச் சொல்ல முடியாது. ராகுல் பாஜகவைத் தவிர மற்ற எந்த எதிர்க்கட்சிகள் ஆதரவு தந்தாலும் ஏற்பார். அவர்களை பிரதர் என்று அன்பாகவே அழைத்து வருபவர் அவர். தமிழ்நாட்டில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளது. அதை உடைக்கவேண்டிய தேவை எதுவும் இப்போதைக்கு உருவாகவே இல்லை.
இந்த 2024 திமுக கூட்டணி 40 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று நான் சொல்லி இருந்தேன். விருதுநகரில் மட்டும் கொஞ்சம் நெருக்கடி இருந்தது. இறுதியில் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றோம். அங்கே விஜயகாந்த் மறைவை ஒட்டி ஒரு அனுதாப அலை இருந்தது. அவர் பிறந்து வளர்ந்த பகுதி என்பதால் அந்த அலை இருந்தது. அதையும் காங்கிரஸ் கட்சி சமாளித்து வெற்றிபெற்றுள்ளது. சொன்னதைப்போல நாங்கள் வென்று காட்டி உள்ளோம். மீண்டும் சொல்கிறேன் 2026 ஸ்டாலின் தான் முதல்வர். அதை உறுதியாகச் சொல்கிறேன்" என்று அடித்து பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications