காண்டான கம்பீர்.. கோபத்தின் உச்சத்தில் கோலி! 10 ஆண்டு தீரா பகை.. “டெல்லி பாய்ஸ்” யுத்தம் -பிளாஷ்பேக்
சென்னை: நேற்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி முடிந்த பிறகு கோலி - கம்பீர் இடையிலான மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இருவருக்கும் இடையே இதேபோல் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பும் மோதல் வெடித்தது.
விளையாட்டு போட்டிகளில் வீரர்கள் இடையே மோதல் ஏற்படுவது சகஜம். குறிப்பாக கால்பந்து போட்டிகளின்போது வீரர்கள், ரசிகர்கள் மோதல் கலவரம் எல்லாம் வெடித்து உள்ளது. ஆனால், ஜென்டில் மேன் விளையாட்டு என்று சொல்லப்படும் கிரிக்கெட்டில் இதுபோன்ற பெரிய மோதல்கள் ஏற்படாது. பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அது சில ஸ்லட்ஜிங்கோடு நின்றுவிடும்.

ஆனால், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை விட கிளப் போட்டிகளில் மோதல்கள் அதிகம் ஏற்படுகின்றன. குறிப்பாக கிரிக்கெட் உலகில் அதிக ரசிகர்களை கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலும் மோதல்கள் அதிகளவில் ஏற்பட்டு இருக்கின்றன. பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்தை ஹர்பஜன் சிங் கை நீட்டி அடித்தது, பொல்லார்டு பேட்டை தூக்கி வீசியது என பல மோசமான நிகழ்வுகள் அரங்கேறி இருக்கின்றன.
ஆனால், இதில் பலரால் மறக்க முடியாத சம்பவம் என்றால் அது விராட் கோலி - கவுதம் கம்பீர் இடையிலான மோதல்தான். கடந்த 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட இந்த தகராறு 10 ஆண்டுகள் கழித்து இன்று வரை நினைவுகூறப்படும் அளவுக்கு பிரபலமான ஒன்றாகும். வெவ்வேறு நாட்டு வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்படுவது வேறு.. ஆனால், ஒரே நாட்டு வீரர்கள், அதுவும் சர்வதேச அளவில் பல சாதனைகளை நிகழ்த்தியவர்கள் இவ்வாறு மோதியது இந்திய ரசிகர்களை அதிகம் பாதித்தது.
2013 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டில் கவுதம் கம்பீரும் விராட் கோலியும் உச்சத்தில் இருந்த காலம். இருவருமே தரமான ஃபார்மில் இருந்த நேரம் அது. ஐபிஎலில் கம்பீர் கொல்கத்தா நைட் ரைடஸ் அணி கேப்டனாகவும், விராட் கோலி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டனாகவும் இருந்தனர். அந்த போட்டியில் பெங்களூரு அணி 2 வது இன்னிங்சில் பேட்டிங் செய்துகொண்டு இருந்தது. பெங்களூரு அணி வெற்றிபெறுவதற்கு 11 ஓவர்களில் 80 ரன்கள் தேவைப்பட்டது.
அப்போது கொல்கத்தா வீரர் பாலாஜி வீசிய பந்தில் விராட் கோலி 35 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பெரிய விக்கெட்டை எடுத்த மகிழ்ச்சியில் கொல்கத்தா கேப்டன் கம்பீர் உட்பட மற்ற வீரர்கள் பாலாஜி அருகே சென்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோபமடைந்த கோலி கம்பீரை நோக்கி சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கம்பீரும் கோபமாக கோலியை நோக்கி சென்று காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இரு வீரர்களும் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டனர். நடுவர்களும், வீரர்களும் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். கம்பீர் கோலியை கலாய்க்கும் வகையில் ஏதோ செய்கை செய்ததாலேயே அவர் கோபமடைந்ததாக கூறப்படுகிறது. தற்போது கம்பீர் ஓய்வுபெற்றுவிட்டாலும் கோலி தொடர்ந்து அணியின் ஸ்டார் வீரராக விளையாடி வருகிறார். ஆனால், கோலி கடந்த ஆண்டுகளில் சரியாக ஆடாதபோது கம்பீர் அவரை தொடர்ந்து விமர்சித்து வந்தார்.
ட்விட்டரில் அவர் வெளியிட்ட பதிவுகள் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வந்தன. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பெங்களூரு ரசிகர்களை நோக்கி கம்பீர் உதட்டில் விரல் வைத்து சைகை செய்ததற்கு நேற்று கோலி பதிலடி கொடுத்தார். போட்டி முடிந்த பின் 2013 சம்பவத்தை நினைவூட்டும் வகையில் மோதலும் வெடித்தது. டெல்லியை சேர்ந்த 2 வீரர்களுக்கு இடையிலான இந்த யுத்தம் 10 ஆண்டுகளாக பற்றி எரிந்துகொண்டுதான் இருக்கிறது.












Click it and Unblock the Notifications