பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா! டிச.15ஆம் தேதி தமிழகம் முழுவதும் 100 திமுக பொதுக்கூட்டங்கள்!
சென்னை: பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவையொட்டி டிசம்பர் 15ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் 100 பொதுக்கூட்டங்கள் நடத்த திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தள்ளாத வயதிலும், தளராத தத்துவச் சிந்தனைகளுடன் கடைசி மூச்சு வரை திமுகவுக்காக உழைத்தவர் அன்பழகன் என திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம் வருமாறு;

திராவிட இயக்கத்தின் கருவூலம்
''திராவிட முன்னேற்றக் கழகத்தின் தத்துவத் தலைமையாக, தன் வாழ்நாள் முழுவதும் அப்பழுக்கற்ற கொள்கைக் கோபுரமாக உயர்ந்து நின்றவர் இனமான பேராசிரியர். இன உணர்வும், மொழி உணர்வும், பண்பாட்டுப் பெருமையுடன் கூடிய தொலைநோக்குப் பார்வையும் கொண்ட அவருடைய எழுத்தாற்றலில் விளைந்த படைப்புகள் அனைத்துமே திராவிட இயக்கத்தின் கருவூலங்கள்.''

இனமானப் பேராசிரியர்
''நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினராக இருந்து, இன -மொழி உரிமைக்காகக் குரல் கொடுத்தவர் இனமானப் பேராசிரியர். சட்டப் பேரவையில் ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி என இரு வரிசைகளிலும் உறுப்பினராக இருந்து ஜனநாயக மாண்பு காத்தவர். கழக ஆட்சிக்காலங்களில் மக்கள் நல்வாழ்வுத்துறை, சமூக நலத்துறை, நிதித்துறை, கல்வித்துறை உள்ளிட்ட துறைகளுக்கு அமைச்சராக இருந்து மக்களுக்கானத் திட்டங்களை திறம்பட நிறைவேற்றியவர்.''

நல்லாசிரியராக வழிகாட்டி
''பேராசிரியர் என்ற சொல்லுக்கேற்ப கழகத்தின் ஒவ்வொரு தலைமுறைக்கும் மாநாடுகளிலும் - பொதுக்கூட்டங்களிலும் கொள்கை வகுப்பு போல உரைகளை வழங்கி, இனஉணர்வையும் மொழி உணர்வையும் விதைத்து வளர்த்தவர். திமுக தலைவர்-தமிழ்நாடு முதலமைச்சருக்கு 'பெரியப்பா' எனும் கொள்கை உறவாக இருந்து, அவர்தம் பொதுவாழ்வுப் பணியின் ஒவ்வொரு கட்டத்திலும் நல்லாசிரியராக வழிகாட்டி, நல்ல மதிப்பெண் அளித்துப் பாராட்டியவர் இனமானப் பேராசிரியர்.''

பெருமைமிகு பொதுவாழ்வு
''தள்ளாத வயதிலும், தளராத தத்துவச் சிந்தனைகளுடன் கடைசி மூச்சு வரை கழகத்திற்காகவே வாழ்ந்த இனமானப் பேராசிரியரின் நூற்றாண்டு தொடக்க விழாவை கடந்த ஆண்டில் தொடங்கி, தொடர்ந்து நடத்தி அவரது பெருமைமிகு பொதுவாழ்வுக்கு புகழ் மாலை சூட்டியிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம்.''

100 பொதுக்கூட்டங்கள்
''பேராசிரியர் பெருந்தகையின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, தலைமைக் கழகத்தின் சார்பில் டிசம்பர் 15 (வியாழக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் 100 பொதுக்கூட்டங்கள் நடத்த தலைமைக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்படும் அந்த கூட்டங்களை மாவட்டக்கழகச் செயலாளர்கள் சிறப்புடன் நடத்திட இந்தக்கூட்டம் தீர்மானிக்கிறது.''












Click it and Unblock the Notifications