சில நாட்களில் அக்னி நட்சத்திரம்.. 11 நகரங்களில் சதமடித்த வெயில்! எங்கு அதிகபட்ச வெப்பம் தெரியுமா
சென்னை: தமிழ்நாட்டில் இன்று மட்டும் மொத்தம் 11 நகரங்களில் வெப்பநிலை சதம் அடித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு வரும் மே மாதம் 4ஆம் தேதி தான், அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. ஆனால், அதற்கு முன்னதாகவே கடந்த சில வாரங்களாக அங்கு கடும் வெயில் காணப்படுகிறது.
இந்த கடும் வெப்பத்தால் பொதுமக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். மதிய நேரங்களில், சில அடிகள் கூட வெளியே போக முடியாத அளவுக்கு வெயில் மண்டையைப் பிளக்கிறது.

வேலூரில் உச்சம்
இன்றைய தினமும் மாநிலத்தில் வெப்பம் வெளுத்து வாங்கியது. பகல் நேரங்களில் பல பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவியது. தமிழ்நாடு முழுக்க இன்றைய தினம் மட்டும் சுமார் 11 நகரங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. அதிகபட்சமாக வேலூரில் வெப்பம் 107.6 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவாகி உள்ளது. இந்த கடுமையான வெப்பம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது,

அடுத்து திருத்தணி
அதைத் தொடர்ந்து திருத்தணியில் வெப்பம் 106 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவாகி உள்ளது. மேலும், திருச்சி நகரில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி இருந்த நிலையில், மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் மதுரை நகரில் 101.12 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவாகி இருந்தது.

மொத்தம் 11 நகரங்கள்
தஞ்சை மாவட்டத்தில் 104 டிகிரி பாரன்ஹீட், கரூர் பரமத்தி பகுதியில் 103.1 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவாகி உள்ளது. சென்னையைப் பொருத்தவரை மீனம்பாக்கம் பகுதியில் 102 டிகிரி பாரன்ஹீட், நுங்கம்பாக்கம் பகுதியில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. இவை தவிர நாமக்கல், கடலூர், ஈரோடு, சேலம் நகரங்களிலும் வெப்பம் சதம் அடித்துள்ளது. மொத்தம் 11 நகரங்களில் வெப்பம் சதம் அடித்துள்ளது.

மழை
அதேபோல தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மாலை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications