1,118 தனியார் கொரோனா தடுப்பூசி மையங்கள்... நாட்டிலேயே தமிழகத்தில்தான் மிக அதிகம்!
சென்னை: நாட்டிலேயே தனியார் கொரோனா தடுப்பூசி மையங்கள் அதிக அளவில் செயல்படும் ஒரே மாநிலம் தமிழகம்தான். தமிழகத்தில் மட்டும்தான் 1,118 தனியார் கொரோனா தடுப்பூசி மையங்கள் இயங்கி வருகின்றன என்கின்றன மத்திய அரசின் புள்ளி விவரங்கள்.
நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்களில் போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகள், தனியார் மருத்துவமனைகளிலும் போடுவதற்கு அனுமதிக்கப்பட்டது.
தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், டெல்லி, கர்நாடகா, கேரளா, சத்திஸ்கர், மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அன்றாட கொரோனா புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை 13 கோடியைக் கடந்துள்ளது.
கொரோனா தடுப்பு பணிகளில் பிரதமர் மோடி படுதோல்வி... மத்திய அரசு திணறல்... மு.க.ஸ்டாலின் விமர்சனம்..!
தமிழகத்தில் 1,118 தனியார் மையங்கள்
மத்திய அரசு தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி போட அனுமதி அளித்த பின்னர் தமிழக அரசும் படிப்படியாக தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான அனுமதி வழங்கியது. தற்போதைய நிலையில் தமிழகத்தில் 1,118 தனியார் கொரோனா தடுப்பூசி மையங்கள் செயல்படுகின்றன.
தமிழகத்தில்தான் அதிகம்
இந்தியாவிலேயே 1,000-க்கும் அதிகமான தனியார் கொரோனா தடுப்பூசி மையங்கள் செயல்படும் ஒரே மாநிலம் தமிழகம் மட்டும்தான். தமிழகத்தில் மொத்தம் 5,263 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இதில் 4,154 மையங்கள் அரசு மருத்துவமனைகள் ஆகும். டெல்லியில் அதிகபட்சமாக 817 , கேரளாவில் 1101, உத்தரப்பிரதேசத்தில் 561 கொரோனா தடுப்பூசி மையங்கள் இயங்குகின்றன.
தனியார் மையங்களே இல்லை
அதே நேரத்தில் 13 சிறிய மாநிலங்களில் 10-க்கும் குறைவான தனியார் கொரோனா தடுப்பூசி மையங்கள்தான் இயங்கி வருகின்றன என்கின்றன அரசின் புள்ளி விவரங்கள். அந்தமான் நிக்கோபர், அருணாச்சல் பிரதேசம், டாமன் டையூ, லடாக், லட்சத்தீவு ஆகிய மாநிலங்களில் தனியார் கொரோனா தடுப்பூசி மையங்கள் எதுவுமே இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி
தாத்ரா நாகர் ஹைவேலியில் 2, மணிப்பூர் 3, நாகாலாந்து 4, புதுச்சேரி 7, சிக்கிம் 1, திரிபுரா 1, மிசோரமில் 2 தனியார் கொரோனா தடுப்பூசி மையங்கள்தான் இயங்குகின்றன. மே 1-ந் தேதி முதல் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. அப்போது தனியார் கொரோனா தடுப்பூசி மையங்களின் தேவை இன்னமும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்கின்றன அரசு வட்டாரங்கள்.