Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு நடிகர் நாட்டை ஆள வேண்டுமா? என அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட திமுக செய்த கடுமையான பிரச்சாரத்தை மீறி 1977 சட்டசபை தேர்தலில் எம்.ஜி.ஆர் வெற்றி பெற்று கோட்டைக்குள் அடி எடுத்து வைத்தார்.

காங்கிரசை வீழ்த்தி 1967இல் திமுக 137 இடங்களை வென்று தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. சரியாக 10 ஆண்டுகளில் அக்கட்சியின் தலைவிதியை மாற்றி எழுதியது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். 1977 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் 130 தொகுதிகளை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது அதிமுக.

130 Seat victory MGR Stunned DMK For 10 Years Following 1977 AIADMK Flag Soared High

அண்ணாவின் மறைவுக்குப் பின் 10 ஆண்டு காலம் திமுகவை வலிமையாக வழிநடத்தி வந்த கருணாநிதி தலைமையிலான திமுக, இந்தத் தேர்தலில் 48 தொகுதிகளுக்கு மேல் தாண்ட முடியவில்லை.

இந்தக் காலகட்டத்தில் மூத்த தலைவர்களாக இருந்த பெரியாரும், ராஜகோபாலாச்சாரியும் காமராஜரும் இயற்கை எய்தியிருந்தனர். அரசியல் களத்தில் பெரிய வெற்றிடம் ஏற்பட்டிருந்தது. இருபெரும் எதிர் துருவங்களாகத் துப்பாக்கியாக எம்.ஜி.ஆரும் கருணாநிதியின் மோதிக் கொண்டிருந்தனர்.

அருப்புக்கோட்டையில் வெற்றிக் கொடி

சிபிஐ 5, சிபிஐஎம் 12, அகில இந்திய பார்வர்ட் பிளாக் 1, இந்தியத் தேசிய காங்கிரஸ் 27, ஜனதா கட்சி 10 இந்திரா காங்கிரஸ்1 என்ற அளவில் தொகுதிகளைப் பிடித்திருந்தன பிற கட்சிகள். அசுர பலம் பெற்றிருந்தார் எம்ஜிஆர்.

மு.கருணாநிதி அண்ணா நகர் தொகுதிக்கு இடம்பெயர்ந்திருந்தார். 43076 வாக்குகளைப் பெற்று வெற்றியை உறுதிசெய்தார். அருப்புக்கோட்டையில் போட்டியிட்ட எம்.ஜி.ராமச்சந்திரன் 43065 வாக்குகளைப் பெற்று வாகை சூடினார். இவரை எதிர்த்து நின்ற ஜனதா கட்சி வேட்பாளர் முத்துவேல் சேர்வை 13687 வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தார்.

இந்தத் தேர்தலுக்கு முன்புதான் திமுக மீது ஊழல் புகார் கிளம்பியது. அதற்காக மத்திய அரசு சர்க்காரியா கமிஷனை நியமித்து வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. அதிமுக தொடங்கிய காலத்தில் எம்.ஜி.ஆர் மீது ஒரு நன்மதிப்பும் இருந்தது. அடிமட்ட மக்கள் மத்தியிலும் அவரது புகழ் போய்ச் சேர்ந்திருந்தது. ஒரு நடிகர் நாட்டை ஆளலாமா? என திமுகவின் வினாவை மக்கள் பெரியதாகக் காதுகொடுத்து வாங்கவில்லை. 'அரசியலைத் தொழிலாகக் கொண்டவர்கள்தான் அரசியலில் நீடிக்க வேண்டும் என்றால் தேசம் உருப்படாது' என ஒரு பத்திரிகைத் தலையங்கம் தீட்டியது.

திமுகவிலிருந்து தன்னை வஞ்சகமாக வெளியேற்றிவிட்டனர் என்றும் திமுக ஒரு தீய சக்தி என்றும் ஒரு பிம்பத்தைக் கட்டமைத்த எம்.ஜி.ராமச்சந்திரன், 1972 அக்டோபர் 8 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் 'நான் தான் திமுக' என்று சவால் விடுத்தார்.

பின்னர் தனியாகக் கட்சி தொடங்கும்படி அவரது ஆதரவாளர்கள் ராமாபுரம் வண்டிகளில் சாரை சாரையாக வந்து குவிந்தனர். பெரும் அமைதி காத்துவந்த எம்.ஜி.ஆர்., ஒரு கட்டத்தில் தனது விசுவாசி அனகாப்புத்தூர் ராமலிங்கம் தொடங்கிய அதிமுகவில் தன்னை ஒரு உறுப்பினராக இணைத்துக்கொண்டார். அதற்கு, 'சாதாரண தொண்டன் தொடங்கிய கட்சியில் என்னைச் சேர்த்துக் கொண்டேன்' என்றார்.

எம்ஜிஆரை கட்சியில் மீண்டும் இணைக்கக் கருணாநிதி சில முயற்சிகளைச் செய்தார். தூதாக அனுப்பிவைக்கப்பட்ட எஸ்.டி.சோமசுந்தரம், போன இடத்திலேயே ஐக்கியமானார். அவருக்கு முன்பே திமுக நிறுவிய ஐம்பெரும் தலைவர்களில் ஒருவரான மதியழகன் அப்போது சபாநாயகராகப் பதவி வகித்து வந்தார். அவர் எம்.ஜி.ஆர் பக்கம் தாவிவிட்டார். அந்தக் காலத்தில் கட்சித் தாவல் தடைச் சட்டம் இருக்கவில்லை என்பதையும் இங்குச் சேர்த்துப் புரிந்துகொள்ள வேண்டும். கழகம் இரண்டாக உடைந்த போது திமுகவின் பலம் சட்டசபையில் 172. அதில் 6 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அதிமுக பக்கம் சென்றனர். 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்ஜிஆரை ஆதரித்தனர். விகிதாச்சார படி திமுகவிலிருந்து 5 முதல் 10% தலைவர்களே அதிமுக பக்கம் வந்தனர்.

பத்து ஆண்டுகள் பறந்த ஒரே சின்ன கொடி

பிற்காலத்தில் எம்.ஜி.ஆரை திமுகவிலிருந்து வெளியேற்ற வேண்டும் என அழுத்தம் தந்த நெடுஞ்செழியனே அதிமுகவுக்கு அவைத்தலைவரானார்.
கட்சி தொடங்கிய சமயம் எம்ஜிஆர் தன் கட்சிக் கொள்கையைச் சரியாக முன்வைக்கவில்லை. ஆகவே திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவர் கொள்கையைக் கேட்டனர். அதற்கு அவர், "கேபிடலிஸம், சோஷலிஸம், கம்யூனிசம் ஆகிய மூன்றும் இணைந்ததுதான் அண்ணாயிஸம்; அதுதான் எமது கொள்கை" என்றார். அதைப் பலர் ஞானசூனியமான விளக்கம் எனச் சாடினர்.
திமுக இந்திரா காந்தியின் அவசர நிலையை மிகக் கடுமையாக எதிர்த்துப் போராடியது. ஒருவகையில் இந்திராவின் சர்வாதிகார ஆட்சிக்கு மக்கள் ஜனநாயக முறைப்படி முடிவுகட்டினர் என அன்றைய அரசியல் தலைவர்களில் முக்கியமானவரான க.சந்தானம் கூறினார்.

அதிமுகவின் வளர்ச்சி தமிழ்நாட்டில் ராஜாஜியின் சுதந்திரா கட்சி மற்றும் காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் ஆகியவற்றைத் தேயச் செய்தது. 71 தேர்தலில் 48.6% ஓட்டுக்களைப் பெற்ற திமுக, அதிமுக புதிய கட்சியாக உருவெடுத்த பின் நடந்த 77 தேர்தலில் 24.9% ஆகக் குறைந்துபோனது. இதே தேர்தலில் அதிமுக 30.4% வாக்குகளைப் பெற்றிருந்தது.

திமுகவிலிருந்து பிரிந்து பெரிய அளவுக்கு இரண்டாம் கட்டத் தலைவர்கள் அதிமுக பக்கம் வராதபோதோ இக்கட்சி, எம்.ஜி.ஆரின் பலத்தால் அரசு சக்தியாக உருவெடுத்திருந்தது. களம் கண்ட முதல் தேர்தலிலேயே அதிமுகவின் வீச்சு இந்தளவுக்கும் என அன்றைய ஊடகங்கள் கணிக்கத் தவறியிருந்தன. அ.இ.அதிமுகவினர் அதை வரவேற்று வானளவுப் புகழ்ந்து பேசினர்.

நாடாளுமன்றத் தேர்தலில் இந்திரா காந்தியுடன் கூட்டணியும் அமைத்தனர். பின்னர் மத்தியில் ஜனதா அரசுக்கு ஆதரவு அளிப்போம் என்றும் கூறினர். இந்த இரட்டை வேடம் அதிமுக மீது ஒரு பழியைப் போட உதவியது. எந்த திமுக அமைச்சர்கள் மீது ஊழல் புகாரைக் கூறி மத்திய அரசிடம் புகார் மனுவைக் கொடுத்ததோ அதே தலைவர்களுக்கு அதிமுக சீட்டும் கொடுத்தது. சிலர் சுயேச்சையாகக் களம் கண்டபோது அவர்களுக்கு ஆதரவும் அளித்தது. முன்னதாகவே 1975இல் மறைவதற்கு முன்னதாகவே அ.இ.அதிமுக.வையும் திமுகவையும் ஒப்பிட்டு காமராஜ், "ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்" என்று சாடியிருந்தார்.

காமராஜர் மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் ஆதிக்கம் மேலும் கூடியது. 1970கள் மத்தியில் குதிரை பலத்தில் வளர ஆரம்பித்த அதிமுக 1977 தேர்தலில் அதிகாரத்தை வந்து, அவர் மறையும் வரை அடுத்த 10 ஆண்டுகள் அக்கட்சியே தமிழ்நாட்டின் தலைவிதியைத் தீர்மானித்தது. 'எங்கும் பறக்கவேண்டும் ஒரே சின்ன கொடி' என்ற அவரது பாடல் வரிகள் தேர்தல் அரசியல் வரலாற்றில் மெய்யானது.

எழுதியவர்: கடற்கரய்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+