இலங்கை கடற்படை அட்டூழியம் தொடருதே.. மேலும் 16 தமிழக மீனவர்கள் எல்லை தாண்டியதாக நடுக்கடலில் கைது!
சென்னை: தமிழ்நாட்டு மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை நடுக்கடலில் சுற்றி வளைத்து கைது செய்தது. தமிழ்நாட்டு மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடித்த போது எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படை கைது செய்தது. தமிழக மீனவர்கள் 16 பேரையும் அவர்களது 2 மீன்பிடி படகுகளையும் சிறைபிடித்தது இலங்கை கடற்படை. தற்போது கைது செய்யப்பட்ட 16 மீனவர்களும் இலங்கையின் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.
இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க அண்மையில் இந்தியா வருகை தந்திருந்தார். அனுர குமார திசநாயக்கவுக்கு டெல்லியில் சிவப்பு கம்பள விரிப்பு மரியாதை அழைக்கப்பட்டது. ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரை அனுர குமார திசநாயக்க சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தப் பேச்சுவார்த்தை முடிவில் பிரதமர் நரேந்திர மோடியும் அனுர குமார திசநாயக்கவும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில், இரு தரப்பிலும் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், வாழ்வாதார கவலைகளை கருத்தில் கொண்டு, அவற்றை மனிதாபிமான முறையில் தொடர்ந்து தீர்க்க வேண்டியதன் அவசியத்தை தலைவர்கள் ஒப்புக் கொண்டனர். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சிறப்பு உறவைக் கருத்தில் கொண்டு, இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண தங்கள் ஈடுபாட்டைத் தொடருமாறு அவர்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்த அறிக்கையில், தமிழ் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து மனிதாபிமான முறையிலும், அமைதியான முறையிலும் தீர்வு காண இலங்கை அதிபர் அநுர குமார திஸநாயக, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் முடிவு செய்துள்ளது ஊக்கமளிப்பதாக இருக்கிறது. மோதலை தவிர்க்க வேண்டிய அவசியத்தை இது வலியுறுத்துவதாக இருக்கிறது. இலங்கை கடற்படை கைது செய்துள்ள தமிழக மீனவர்களை விடுவிப்பது குறித்தும் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளைத் திருப்பி அனுப்புவது குறித்தும் இலங்கை அதிபர் பரிசீலனை செய்ய வேண்டும். இது செயல் நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கும். நமது இரு நாடுகளுக்கும் இடையே வலுவான உறவுகள் மற்றும் இணக்கமான எதிர்காலத்தை வளர்ப்பதற்கான ஆக்கப்பூர்வமான முதல் படியாக இது இருக்கும என வலியுறுத்தி இருந்தார்.
ஆனாலும் தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வருகிறது. தமிழ்நாட்டு மீனவர்கள் மேலும் 16 பேரை இன்று நடுக்கடலில் சுற்றி வளைத்து கைது செய்த இலங்கை கடற்படை, எல்லை தாண்டியதாக குற்றம்சாட்டி சிறைப்படுத்தியிருப்பது தமிழக மீனவர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications