தமிழகத்தில் ஒரேநாளில் 1,843 பேருக்கு கொரோனா- முதல் முறையாக 24 மணிநேரத்தில் 44 பேர் மரணம்
சென்னை: தமிழகத்தில் திங்கள்கிழமை மட்டும் 1843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 44 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விவரங்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடையே தெரிவித்தார். தமிழகத்தில் திங்களன்று கொரோனா பாதிப்பு விவரம்:
கொரோனா ஒழிப்பு தவிர மாற்றுச் சிந்தனை இல்லாமல் வெளிப்படைத் தன்மையுடன் அரசு செயல்பட வேண்டும்: ஸ்டாலின்
46 ஆயிரம் பாதிப்பு- 479 மரணங்கள்
24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1843. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கையானது 46,504 ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா பாதித்தவர்களில் ஆண்கள் 1,132; பெண்கள் 710; மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத வகையில் 44 பேர் கொரோனாவால் மரணித்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 479 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் 1257 பேருக்கு பாதிப்பு
மாவட்டங்களைப் பொறுத்தவரையில் சென்னையில் இன்று 1257 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பிற மாவட்டங்கள் விவரம்: அரியலூர்-1; செங்கல்பட்டு 120; கோவை- 3; கடலூர்- 27; திண்டுக்கல்- 2; கள்ளக்குறிச்சி-11; காஞ்சிபுரம்- 39; கன்னியாகுமரி 5; கரூர்-1; கிருஷ்ணகிரி 2; மதுரை- 33; நாகை- 8; நீலகிரி-3; புதுக்கோட்டை- 8; ராணிப்பேட்டை- 34; சேலம்- 3; சிவகங்கை-9; தென்காசி-6; தஞ்சாவூர்-12; தேனி- 9; திருப்பத்தூர்- 1; திருவள்ளூர்-50; திருவண்ணாமலை- 32; திருவாரூர் -10; தூத்துக்குடி 34; நெல்லை- 17; திருப்பூர்-2; திருச்சி-8; வேலூர்- 20; விழுப்புரம்- 13; விருதுநகர் 9 என மொத்தம் 1789 பேருக்கு கொரோனா
பயணிகள் 54 பேருக்கு பாதிப்பு
பிற நாடுகள், மாநிலங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இன்றைய பரிசோதனையில் மொத்தம் 54 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையும் சேர்த்து தமிழகத்தில் இன்று மட்டும் ஒரே நாளில் 1843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை- செங்கை நிலவரம்
சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 33,244. சென்னையில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 382 ஆக உயர்ந்திருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 3005 ஆகவும் செங்கல்பட்டில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 27 ஆகவும் உள்ளது.