தமிழகத்தில் 19 கைதிகள் விடுதலை! சுதந்திர தினத்தில் கிடைத்த சுதந்திரம்.. பின்னணி என்ன தெரியுமா?
சென்னை: சுதந்திர தினத்தையொட்டி இன்று தமிழ்நாட்டில் உள்ள 4 மத்திய சிறைகளில் இருந்து மொத்தம் 19 தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்னளர். சுதந்திர தினத்தில் அவர்களுக்கு சிறையில் இருந்து சுதந்திரம் கிடைத்தால் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.
நாடு முழுவதும் இன்று 77 வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடி ஏற்றி உரையாற்றினார். தமிழ்நாட்டில் சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின் தேசியக்கொடியை ஏற்றினார்.

அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரச அலுவலகங்கள், நீதிமன்றங்களில் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தினம் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் இருந்து இன்று ஒரேநாளில் 19 தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் சிறையில் நீண்டகாலம் தண்டனை அனுபவித்து வந்தவர்கள். அதாவது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம், குடியரசு தினவிழாவின்போது நன்னடத்தை அடிப்படையில் கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் சுதந்திர தினமான இன்று 19 தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அதன்படி சென்னை புழல் சிறையில் இருந்து 10 பேர், கடலூர் 4 பேர், திருச்சி 3 பேர், வேலூர் சிறையில் இருந்து 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்கள் மகிழ்ச்சியுடன் தங்களின் ஊர்களுக்கு சென்றனர்.

முன்னதாக கடந்த ஜனவரி 26ம் தேதியான குடியரசு தினவிழாவின்போது தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் இருந்து 60 கைதிகள் விடுதலை செய்யப்பட்டு இருந்தனர். தற்போது 19 பேர் விடுதலையாகி உள்ளனர். இதன்மூலம் கடந்த 8 மாதங்களில் மட்டும் 79 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தண்டனை கைதிகள் விடுதலை பற்றி தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூஜாரி கூறுகையில், ‛‛கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் தண்டனை காலத்துக்கு முன்கூட்டியே விடுவிக்கப்படுகின்றனர். அதன்படி தண்டனை காலத்தில் 3 ல் 2 பகுதியை அனுபவித்தவர்களை தமிழக அரசு விடுதலை செய்ய முடியும். இருப்பினும் இத்தகைய விடுதலை என்பது கொடூரமான குற்றங்களில் தண்டனை பெற்று வந்த கைதிகளுக்கு பொருந்தாது'' என்றார்.












Click it and Unblock the Notifications