பாட்டிலுக்கு 10 ரூபாய் எக்ஸ்ட்ரா.. சென்னை புறநகர் டாஸ்மாக் கடைகளில் சத்தமே இல்லாமல் வரும் மாற்றம்
சென்னை: சென்னை புறநகர் பகுதிகள், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் காஞ்சிபுரம் மண்டலத்தில் வரும். காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு என்று டாஸ்மாக் மண்டலங்கள் உள்ளன. இந்நிலையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 84 டாஸ்மாக் கடை பணியாளர்களுக்கு மது பாட்டில்களை ரசீது போட்டு விற்பனை செய்ய இன்று முதல் 2 நாள் பயிற்சி நடக்கிறது ரூ.10 கூடுதல் வசூலிக்கப்படுவதை தடுக்க புதிய முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் 4,829 டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. இந்த டாஸ்மாக் கடைகளில் குவாட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாயும், ஆப் பாட்டிலுக்கு 20 ரூபாயும், புல் பாட்டிலுக்கு 40 ரூபாயும் கூடுதலாக வாங்குவதாக புகார்கள் உள்ளது. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடிமகன்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகிறார்கள். புகாருக்கு உள்ளாகும் மற்றும் குடிமகன்களின் செல்போன் கேமராக்களில் சிக்குவோர் மட்டும் சஸ்பெண்ட் செய்யப்படுவதும் தொடர்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டணம் வாங்கும் நடைமுறையில் இன்று வரை எதுவும் மாறவில்லை.. ஏனெனில் பெரும்பாலான குடிமகன்கள் கூடுதல் கட்டணத்தை எதிர்த்து கேள்வி கேட்பதும் இல்லை.. அப்படி கேள்வி கேட்போருக்கு மட்டும் சில கடைகளில் கூடுதல் கட்டணம் திரும்ப தரப்படுவதாக குடிமகன்கள் கூறுகிறார்கள்.

இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் வழங்கப்படும் மதுபாட்டில்களுக்கு பில் வழங்கும் திட்டத்தை கொண்டுவருகிறது தமிழக அரசு. இதன்படி டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு ரசீது வழங்குதல், மதுபாட்டில்களில் பார்கோட் அச்சிட்டு அதன் மூலம் தொடர்ச்சியாக கண்காணிப்பது உள்ளிட்ட நடவடிக்கைளை டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொள்கிறது.
இதற்காக மென்பொருள் தயாரிக்க ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான ரயில்டெல் நிறுவனத்துக்கு ரூ.294 கோடி மதிப்பிலான பணி வழங்கப்பட்டிருந்தது. இதன்படி டாஸ்மாக் கடைகள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு வருகிறது. சோதனை முறையில் மதுபானங்க்களுக்கு ரசீது கொடுக்கும் நடைமுறை சில டாஸ்மாக் கடைகளில் தொடங்கி உள்ளது. டாஸ்மாக் கடைகளின் செயல்பாடுகளை கணினிமயமாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த பில்லிங் முறை நடைமுறைக்கு வந்துள்ளது.
டாஸ்மாக் கடைகளில் உள்ள விற்பனையாளர்கள் கையடக்க ஸ்கேனர் மூலம் ஒவ்வொரு பாட்டிலிலும் உள்ள கலால் வரியுடன் கூடிய லேபிள்களை ஸ்கேன் செய்து பில் ரசீதுகளை வாடிக்கையாளரிடம் வழங்கப்படும். மேலும் மதுபாட்டில்களை ஸ்மார்ட் போன் மூலம் ஸ்கேன் செய்தால், அந்த பாட்டில் எங்கே வாங்கப்பட்டது, எந்த தேதியில் வாங்கப்பட்டது, இது எந்த பேட்ச்சை சேர்ந்தது, மதுபான ஆலையில் இருந்து எப்போது வெளியே கொண்டு வரப்பட்டது போன்ற பல்வேறு விவரங்களை அறிய முடியும் என்றும் சொல்கிறார்கள்.
இந்த நிலையில், காஞ்சீபுரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள 84 டாஸ்மாக் மதுக் கடைகளில் உள்ள மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களுக்கு இன்றும், நாளையும் (சனி, ஞாயிறு) மதுபானங்களுக்கு ரசீது போடுவது எப்படி? என்பது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்தப் பயிற்சி, திருமழிசையில் உள்ள மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் தாலுகா வாரியாக அளிக்கப்பட இருக்கிறது. காலை 8 முதல் 9 மணி வரை சோழிங்கநல்லூர் மற்றும் ஆலந்தூர் தாலுகா டாஸ்மாக் பணியாளர்களுக்கும், காலை 9 முதல் 10 மணி வரை தாம்பரம் தாலுகா டாஸ்மாக் பணியாளர்களுக்கும், காலை 10 முதல் 11 மணி வரை ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் மற்றும் பல்லாவரம் தாலுகா டாஸ்மாக் பணியாளர்களுக்கும் ரசீது போட பயிற்சி அளிக்கப்பட உள்ளதாம். இந்த பயிற்சிக்கு பின்னர் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பில்லிங் முறை அமலுக்கு வரும் என்றும், அதன் பிறகு மது பாட்டில்களுக்கு ரூ.10 அதிகம் வசூலிக்கப்படுவது தடுக்கப்படும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் எதிர்பார்க்கிறது.
ஆனால் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து கூறும் குடிமகன்கள், விற்பனையாளர்கள் மனது வைத்தால் மட்டுமே 10 ரூபாய் கட்டணம் வாங்குவது குறையும் என்கிறார்கள். டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் விற்பனையார்கள் சம்பளம் மிக குறைவாகவே வாங்கும் நிலையில், இந்த கூடுதல் பணத்தில் கணிசமாக அவர்களுக்கு ஊதியமாக சொல்வதாகவும் மீதி பணம் கடைகளில் நடைமுறை செலவுகளுக்கு செல்வதாகவும் சில குடிமகன்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications