விஜய பிரபாகரன் வேட்பாளர்னு யார் சொன்னது? வேட்பாளர்களை இன்னும் முடிவு பண்ணல.. ஷாக் கொடுத்த பிரேமலதா!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தேமுதிக தலைமை அலுவலகத்திற்குச் சென்று பிரேமலதா விஜயகாந்த்துடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் பிரேமலதா விஜயகாந்த்.
அதிமுக - தேமுதிக இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. அதன்படி, அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவை திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், விருதுநகர், தஞ்சாவூர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கையெழுத்திட்டனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா, "2011ல் ஏற்பட்ட வெற்றிக் கூட்டணி மீண்டும் உருவாகியுள்ளது. 2011ல் கிடைத்த வெற்றிபோல் இப்போது மீண்டும் கிடைக்கும். 2026-ம் ஆண்டிலும் இந்தக் கூட்டணி நிச்சயம் தொடரும்.
நாளை நல்ல செய்தி தேமுதிக அலுவலகத்தில் அறிவிக்கப்படும். தேமுதிக அலுவலகத்துக்கு எடப்பாடி பழனிசாமி வரவுள்ளார். நாளைக்கு மிகப் பெரிய செய்தியை அறிவிப்போம். தேர்தல் என்றால் பலமுனை போட்டி வரும். அதிமுகவும், தேமுதிகவும் பல தேர்தல்களைச் சந்தித்துள்ளது. எண்ணிக்கை என்பது முக்கியமல்ல. யார் யார் கூட்டணி சேர்க்கிறார்கள் என்பது தான் முக்கியம். இந்தக் கூட்டணி இயற்கையான கூட்டணி." எனத் தெரிவித்திருந்தார்.
தேமுதிக அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி: இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தேமுதிக தலைமை அலுவலகத்திற்குச் சென்றார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி, விஜயகாந்த் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உடன் கலந்து ஆலோசனை செய்தார். பின்னர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

பிரேமலதா பேட்டி: பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "இன்று மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினோம். தேமுதிக வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெற்று வருகிறது. தேமுதிக போட்டியிடும் 5 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்." என்றார்.
மேலும் பேசிய பிரேமலதா, "வரும் மார்ச் 24ஆம் தேதி நடைபெறும் திருச்சி பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார் எடப்பாடி பழனிசாமி. நேற்று நான் அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சென்ற நிலையில் இன்று அண்ணன் எடப்பாடியார் தேமுதிக தலைமைக் கழகத்திற்கு வந்திருந்தார். விஜயகாந்த் நினைவிடத்தில் தரிசனம் செய்தார். திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அதிமுக கூட்டணியின் 40 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், "விஜய பிரபாகரன் தான் வேட்பாளர் என்று யார் சொன்னது? 5 தொகுதிகளுக்கு யார் வேட்பாளர் என்பதை நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. இப்போதுதான் நேர்காணல் நடந்துகொண்டிருக்கிறது. கொஞ்சம் பொறுமையாக இருங்கள். நேர்காணலை இன்று முடித்துவிட்டு, அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். 24ஆம் தேதி திருச்சி பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்களை அறிமுகம் செய்வோம். 25ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வோம்" எனத் தெரிவித்துள்ளார்.
விஜய பிரபாகரன்: விருதுநகர் லோக்சபா தொகுதியில் முதல் முறையாக விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், விஜய பிரபாகரன் வேட்பாளர் என யார் சொன்னது? எனக் கேட்டுள்ளார் பிரேமலதா விஜயகாந்த். இது தேமுதிகவினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications