ஒரே நேரத்தில் 2 பக்கமும் சோதனை.. வங்க கடல், அரபிக்கடலில் உருவாகும் தாழ்வுப்பகுதி.. என்ன நடக்கும்?
சென்னை: ஒரு பக்கம் வங்கக்கடலில்.. இன்னொரு பக்கம் அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்கிக்கொண்டு இருக்கிறது. இதனால் தமிழ்நாடு முழுக்க பரவலாக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இன்னொரு பக்கம் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 48 மணி நேரமாக பெய்த மழை தமிழ்நாட்டை உலுக்கி எடுத்துவிட்டது.
அதிலும் சென்னையில் ஒரே நாளில் 207மிமீக்கும் அதிகமாக மழை பெய்துள்ளது. இதனால் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் தேங்கி வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இன்று தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் மற்றும் 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

எப்படி?
ஆனால் இப்போது பெய்யும் மழை எல்லாம் வெறும் டீசர்தான். உண்மையான டிரெய்லர், மெயின் பிக்சர் எல்லாம் இனிதான் என்று சொல்லும் அளவிற்கு வானிலை மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அதன்படி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது அங்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு உள்ளது.

கடல்
வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் 4.5 கிமீ உயரம் வரை இந்த சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு அடுத்த 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். நாளை காலை பெரும்பாலும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இந்த தாழ்வு பகுதி அதன்பின் தமிழ்நாடு நோக்கி நகரும். இதை புயலாக மாறுமா, வலிமை பெறுமா என்பதை இப்போது கணிக்க முடியாது.
Recommended Video

அரபிக்கடல்
இன்னொரு பக்கம் அரபிக்கடலின் மத்திய கிழக்கு பகுதியிலும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இந்த தாழ்வு பகுதி வடமேற்கு நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. 5 கிமீ வேகத்தில் மணிக்கு இந்த தாழ்வு நிலை நகர்ந்து கொண்டு இருக்கிறது. மும்பையில் இருந்து 820 கிமீ தூரத்திலும் கோவாவில் இருந்து 760 கிமீ தூரத்திலும் காற்றழுத்த தாழ்வு பகுதி அமைந்துள்ளது.

இரண்டு தாழ்வு நிலை
அதன்பின் இந்த தாழ்வு பகுதி கொஞ்சம் கொஞ்சமாக வடமேற்கு திசையில் செல்லும்.இரண்டு பக்கமும் இருக்கும் தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு முழுக்க பரவலாக மழை பெய்ய போகிறது. வங்கக்கடலில் ஏற்பட உள்ள தாழ்வு நிலை காரணமாக வடதமிழ்நாட்டிலும், கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்யும். இன்று இரவில் இருந்தே தீவிர மழை தொடங்கிவிடும்.

மேற்கு தமிழ்நாடு
இன்னொரு பக்கம் அரபிக்கடலில் ஏற்பட்டு உள்ள தாழ்வு நிலை காரணமாக மேற்கு தமிழ்நாட்டிலும், மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டிய பகுதிகளிலும், கேரளாவை ஒட்டிய தென் மாவட்டங்களிலும் கனமழை பெய்யும். ஒரே நேரத்தில் இரண்டு பக்கமும் ஏற்பட்டுள்ள தாழ்வு நிலை காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை வெளுத்துக்கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications