சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே 20 அடிக்கு திடீர் பள்ளம்... அதிர்ஷ்டவசமாக சேதம் தவிர்ப்பு..!
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே 20 அடி ஆழத்துக்கு தோன்றிய திடீர் பள்ளத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையை மிரட்டி வரும் நிவர் புயலுக்கு மத்தியில் மாநகரின் பெரும்பாலான பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் பல இடங்களில் மக்கள் பரிதவித்து வருகின்றனர்.

இதனிடையே சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே இரவு 8 மணியளவில் சாலையின் நடுவே பள்ளம் தோன்றியது. நொடிபொழுதில் தார்சாலை சிதைந்து பூமிக்குள் புதைந்தது. நில அதிர்வு ஏற்பட்டதை போல் உணர்ந்த அப்பகுதி மக்கள் மாநகராட்சிக்கும் காவல்துறையினருக்கும் தகவல் அளித்தனர்.
அடுத்த ஒரு சில நிமிடங்களில் அங்கு விரைந்த போலீஸார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சாலையில் நடுவே பள்ளம் தோன்றியது குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர். தொடர் மழை காரணமாக இது போன்ற பள்ளம் ஏற்பட்டதா அல்லது மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை காரணமாக இந்த பள்ளம் உருவாகியதா என ஆராய்ந்து வருகின்றனர்.
மேலும், பள்ளம் தோன்றிய போது அப்பகுதியாக யாரும் பயணிக்காததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த சாலையை சீரமைக்க இன்னும் ஒரு வாரகாலம் ஆகும் என்பதால் அதுவரை போக்குவரத்து மாற்றிவிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இப்போது ஏற்பட்டுள்ள பள்ளம் போன்று கடந்த ஓராண்டு முன்னர் சென்னை அண்ணா சாலையில் திடீரென பள்ளம் உருவாகியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications