திருமணத்தில் விருப்பம் இல்லை.. தந்தைக்கு வீடியோ அனுப்பிவிட்டு பெண் தற்கொலை.. திருவேற்காட்டில் ஷாக்
சென்னை: தனக்கு விருப்பமில்லாத திருமணத்தை செய்து வைத்ததால் விபரீத முடிவு என தந்தைக்கு வீடியோ அனுப்பி விட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்ணால் சோகம் நிலவி வருகிறது.
Recommended Video
திருவேற்காடு, கஸ்தூரிபாய் அவென்யூ கார்த்திகேயன் ஸ்கூல் தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன்(25), தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த மாதம் 26-ஆம் தேதி ரக்சனா(21), என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் ரக்சனா தனது மாமியார் வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் உள்ள அனைவரும் வேலைக்கு சென்று விட்டனர்.
தற்கொலை
இரவு ரக்சனாவின் மாமியார் வசந்தா வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது. கதவை தட்டியும் திறக்காததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது ரக்சனா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
செல்போன்
இதுகுறித்து திருவேற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்த ரக்சனா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தற்கொலைக்கு முன்பு அவரது தந்தையின் செல்போனுக்கு ஒரு வீடியோவை ரக்சனா அனுப்பியுள்ளார்.
திருவேற்காடு போலீஸார்
அதை பார்த்தபோது அதில் தனக்கு விருப்பமில்லாத திருமணத்தை செய்து வைத்ததினால் தற்போது இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாக அனுப்பி வைத்து தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. எனவே ரக்சனா விருப்பம் இல்லாமல் திருமணம் நடைபெற்றதா? அவர் வேறு யாரையேனும் காதல் செய்தாரா? தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து திருவேற்காடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
பரிந்துரை
திருமணமான ஒரு மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி ஒரு மாதம் ஆவதால் இந்த தற்கொலை தொடர்பாக ஆர்டிஓ விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் திருமணம் விவகாரத்தில் யாரும் யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்பதையும் மீறி சிலர் செய்வதால் இது போன்ற உயிரிழப்புகள் நேரிடுகிறது.