24 ஆண்டுக்குப் பின் சிக்கிய 'தாதா' சேரா-போலீஸ் என்கவுண்ட்டருக்கு பயந்து ஓடிய மாஜி போலீசின் கதை என்ன?
சென்னை: 24 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த வடசென்னையை கலக்கி வந்த ரவுடி சேராவை ஆந்திர மாநிலம் சித்தூரில் சுற்றி வளைத்து கைது செய்தது சென்னை போலீஸ். ரவுடி சேராவின் கூட்டாளிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது சேரா பிடிபட்டுள்ளார். ரவுடி சேரா மீது ஆயுத் தடை சட்டம், போதைப் பொருள் தடுப்புச் சட்டம் உள்ளிட்டவைகளின் கீழ் ஏராளமான வழக்குகள் பதிவாகி உள்ளன.
சென்னை மாநகரின் வடபகுதியில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தவர் ரவுடி சேரா. கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்னர் ரவுடி சேராவின் ஆட்டம்தான் வடசென்னை பகுதிகளை குலைநடுங்க வைத்துக் கொண்டிருந்தது.

யார் இந்த ரவுடி சேரா?
1990களில் சென்னையில் கோலோச்சிய பெஞ்சமின், வெள்ளை ரவி கோஷ்டி, சுப்பையா என்பவரை படுகொலை செய்தது. சுப்பையாவின் அண்ணன் மகனாகிய செ.ராஜேந்திரன் என்ற போலீஸ்காரர், தமது அடியாட்களுடன் பெஞ்சமினை போட்டுத் தள்ளுகிறார். இதனால் போலீஸ் பணியில் இருந்து செ.ராஜேந்திரன் நீக்கப்படுகிறார். இந்த செ.ராஜேந்திரன்தான், பின்னாளில் வடசென்னையை அதிரவைத்த கொலைகார ரவுடியாக தாதாவாக உருவெடுத்தா "சேரா".
வெள்ளை ரவி vs சேரா யுத்தம்
பெஞ்சமின் கொலைக்குப் பின்னர் வெள்ளை ரவி vs சேரா என்கிற யுத்தம் சென்னையில் உச்சத்தை எட்டியது. இருதரப்பும் மாறி மாறி கொலைச் சம்பவங்களை அரங்கேற்றின. இதனால் புளியந்தோப்பு, வியாசர்பாடியே பெரும் அச்சத்தில் உறைந்து போய் கிடந்தன.
திரைப்படங்களுக்கு தீனி போட்ட சம்பவங்கள்
இதன் உச்சமாக வெள்ளை ரவியின் மீதான வழக்குகளை மட்டுமே விசாரிகக் தனி நீதிமன்றமே உருவாக்கப்படும் நிலைமையும் உருவானது. இந்த காலகட்டத்தில்தான் ரவுடி சேராவின் கூட்டாளிகளான ஆசைத்தம்பி, கபிலன் ஆகியோர் சென்னை அடையாறு சிக்னல், லயோலா சாலை சந்திப்புகளில் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்; ஆசைத்தம்பி- கபிலன் என்கவுண்ட்டர் சம்பவம், சினிமா காட்சிகளை மிஞ்சிய பரபரப்பான சம்பவமாக பொதுமக்கள் முன்னிலையிலேயே நடந்தது. இதனை மையமாக வைத்து திரைப்படங்களும் வெளியாகி இருக்கின்றன. இப்படி ரவுடி சேராவின் கூட்டாளிகள் அடுத்தடுத்து போடப்பட்டதால் வெள்ளை ரவியின் ராஜ்ஜியம் குதூகலமடைந்தது. வெள்ளை ரவி- ரவுடி சேராவின் மோதல்கள்தான் விக்ரம் நடித்த ஜெமினி படமாகவும் வெளியானது.
வெள்ளை ரவியின் கதையை முடித்த போலீஸ்- தப்பி ஓடிய சேரா
ஒரு கட்டத்தில் சென்னை போலீசார் இருதரப்பையும் அழைத்துப் பேசி ஒற்றுமைப்படுத்தவும் முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் இந்த முயற்சிகள் வீணாகிப் போய் வடசென்னையில் ரத்த ஆறு ஓடியதுதான் மிச்சம். இதனால் வெள்ளை ரவியின் கதையை என்கவுண்ட்டரில் முடித்தது சென்னை போலீஸ். அப்போது சென்னையை விட்டு தப்பி ஓடியவர்தான் ரவுடி சேரா. கடந்த 24 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார் ரவுடி சேரா.
ஆந்திராவில் சுற்றி வளைத்து கைது
ஆனால் ரவுடி சேராவின் அல்லுகளும் சில்லுகளும் இன்னமும் வடசென்னையில் ஆட்டம் போட்டு வந்தன. இதனால் ரவுடி சேராவின் அத்தனை கூட்டாளிகளையும் அடுத்தடுத்து பொறி வைத்து பிடித்தது சென்னை போலீஸ். இந்த அதிரடி ஆபரேஷனில்தான் ரவுடி சேரா, ஆந்திர மாநிலம் சித்தூரில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து சித்தூருக்கு சென்ற சென்னை போலீசார், ரவுடி சேராவை சுற்றி அதிரடியாக கைது செய்தது.












Click it and Unblock the Notifications