25 + 10.. பட்ட பாடெல்லாம் போச்சே.. அமித்ஷாவின் ஆபரேஷன் 25.. எடப்பாடி இல்லாத பாஜகவா?.. கருகுமா தாமரை
பாஜகவின் மெகா பிளானுக்கு எடப்பாடி பழனிசாமி ஒத்துழைப்பு தருவாரா
சென்னை: நேற்று பிரதமர் மோடி, இன்று அமித்ஷா என இரு பெரும் தலைகளின் தமிழகம் வருகை மிகப்பெரிய ஆர்வத்தையும், பலவிதமான யூகங்களையும் கிளப்பி விட்டுள்ளது.
பாஜக இந்த முறை தமிழகத்தை குறி வைத்தே தன்னுடைய தேர்தல் பிளானை நடத்தி வருகிறது.. காரணம், நம் நாட்டில் உள்ள 31 மாநிலங்களில் 18 மாநிலங்களில் பாஜக ஆட்சி செய்து வருகிறது...
இதில், 2 மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது... மற்ற மாநிலங்களில் குறிப்பாக அடுத்து வரும் தேர்தல்களில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில்தான், ஆபரேஷன் தாமரை கையில் எடுக்கப்பட்டுள்ளது..

ஆபரேஷன் சவுத்
சில மாதங்களுக்கு முன்பு, அமித்ஷா ஹைதராபாத் மாநாட்டில் சூளுரைத்ததை இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது.. "அடுத்த 30 முதல் 40 ஆண்டுகள் பாஜக-வின் சகாப்தமாக இருக்கும்... சர்வதேச அளவில் இந்தியா தலைமை வகிக்கும். தெலங்கானா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் குடும்ப ஆட்சிக்கு பாஜக விரைவில் முடிவுகட்டும். அதுமட்டுமல்லாமல், தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் கூடிய விரைவில் பா.ஜ.க ஆட்சி அமைக்கும்" என்று அமித்ஷா தெரிவித்திருந்தார். தமிழகத்திலும் பாஜக ஆட்சி மலரும் என்று அமித்ஷா அறுதியிட்டு சொன்னபோதே, ஆபரேஷன் சவுத் என்ற பிளான் கையில் எடுக்கப்பட்டது.

சவுத் 1
தமிழக பாஜகவும் தன்னுடைய வியூகத்தை 6 மாதங்களுக்கு முன்பேயே வகுக்க ஆரம்பித்துவிட்டது. அதனால்தான், அதற்கான முதல் ஆலோசனை கூட்டத்தை மதுரையில் அன்றே துவங்கினார் மாநில தலைவர் அண்ணாமலை.. அப்போது அவர் பேசியபோது, "15 இடங்களில் பாஜக வெற்றி உறுதி.. மிச்சம் 25 தொகுதிகளில் மட்டுமே கவனம் செலுத்துவது பாஜகவின் ஒரே லட்சியம்" என்று கூறியிருந்தார்... கொங்குவில் ஓரளவு, பாஜக நிமிர்ந்து வரும் நிலையில், தெற்கில் மட்டுமே முழு கவனத்தை செலுத்த முனைப்பு காட்டி வருகிறது..

சவுத் 2
அதனாலேயே தமிழகத்திற்கு மத்திய பாஜக அமைச்சர்கள் அடிக்கடி வந்து போகும்விதமான செயல்பாடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.. மற்றொருபுறம், ஏதாவது நிகழ்ச்சிகளில் பங்கேற்று, தென்மண்டல மக்களின் கவனத்தையும் தங்கள் மீது திருப்ப தீவிரம் காட்டப்பட்டு வருகிறது.. இப்படி அடிக்கடி தமிழகம் வந்து செல்லும்போது, மாநில பாஜக நிர்வாகிகளுக்கு, ஐடியாக்களை தந்து அவர்களை உற்சாகப்படுத்திவிட்டு போக வேண்டும் என்றும் மேலிடம் நினைக்கிறது.. இதனால், தென்மண்டலங்களில் குறைந்தபட்சம் 5 தாமரைகளை மலரவைத்து, மொத்தமாக தமிழகத்தில் இருந்து 10 தாமரைகளை டெல்லிக்கு அழைத்து சென்றுவிட வேண்டும் என்பதே அந்த திட்டமாக இருக்கிறது.

+ 25 சீட்
ஆபரேஷன் சவுத்தை நோக்கி சீக்ரெட்டாக காய்களை நகர்த்தி வருகிறார்களாம். குறிப்பாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தெற்கு மாவட்டங்கள், கோவை, திருப்பூர் ஆகிய மேற்கு மாவட்டங்கள் என 25 மக்களவை தொகுதிகளை குறிவைக்க திட்டமிட்டுள்ளனர்... இதற்கான பொறுப்பாளர்கள் நியமனம், பிரச்சார வியூகம், சந்திப்புகள் என பெரிய லிஸ்ட்டையே போட்டு வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது... இதற்காக ஒரு டீமை இறக்கி, சம்பந்தப்பட்ட தொகுதிகளில் களநிலவரத்தையும் பாஜக தயாராக வைத்திருக்கிறதாம்.

ஐடியா A
இதையொட்டிதான், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இந்த 2 நாள் பயணம் அடுத்தடுத்து அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.. தென்மண்டலங்களில் பாஜகவை ஆழஊன்றி விதைப்பது என்பது ஒருபக்கம் இருந்தாலும், மற்றொருபக்கம், தமிழகத்தின் மீது மத்திய அரசுக்கு மிகுந்த அக்கறை உள்ளது என்பதையும் பறைசாற்றுவது போல இந்த பயணம் அமைய வேண்டும் என்பதே முக்கிய இலக்காக உள்ளதாம்.. இந்த வருகையின் பின்னணி இப்படி இருந்தாலும், தேர்தல் அரசியலுக்கு இது எந்த அளவுக்கு உதவ போகிறது என்பதையும் கவனிக்க வேண்டி உள்ளது.

ஐடியா B
பாஜகவை பொறுத்தவரை, திராவிட கட்சிகளின் முதுகிலேயே சவாரி செய்தே தேர்தலை சந்தித்து வந்துள்ளது.. இப்போதும் அந்த நிலைமைதான் உள்ளது.. தேசிய கட்சியே என்றாலும் தனித்து போட்டியிடக்கூடிய நிலைமை இந்த திராவிட மண்ணில் இல்லை என்பதே 200 சதவீதம் நிதர்சனம்.. அந்தவகையில், அதிமுகவின் தோளில் தேர்தலை சந்திக்க வேண்டி உள்ளது.. திமுகவைவிட எப்போதுமே அதிமுகவுக்கு வாக்கு வங்கி என்பது சற்று அதிகமாகவே இருக்கும்.. அந்த வாக்குவங்கியை முழுமையாக அறுவடை செய்து கொள்ளவே, ஒன்றிணைந்த அதிமுகவை விரும்புகிறது.

டரியல் பிளான்
இதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.. இந்த முறை இரட்டை இலக்கத்துடன்தான் பாஜக போட்டியிட முடிவு செய்துள்ளது.. அந்தவகையில், தென்மாவட்டங்களில் தன்னுடைய வேட்பாளர்களை களமிறக்கினால், அதற்கு நிச்சயம் ஓபிஎஸ் ஆதரவு என்பது தேவையாக இருக்கிறது.. அதேபோல மேற்கு மாவட்டங்களில் பாஜக வேட்பாளர்களுக்கு, எடப்பாடி பழனிசாமியன் ஆதரவு என்பது தேவையாக இருக்கிறது.. அதனால்தான், எடப்பாடி பழனிசாமியை, அண்ணாமலையால் முழுவதுமாக ஒதுக்கி தள்ளிவிட முடியவில்லை.. திமுகவை கொங்குவில் சரிய செய்ய, எடப்பாடியின் தயவும் தேவை என்பதை அண்ணாமலை உணர்ந்துள்ளார்.

டார்கெட் 25
2 நாட்களுக்கு முன்பு பேட்டியின்போது, அதிமுக தலைமையில் கூட்டணி என்று அவர் சொல்வதற்கு காரணமே, எடப்பாடி தவிர்க்க முடியாதவர் என்பதால்தான்.. அதற்காக ஓபிஎஸ்ஸையும் இழக்க தயாராக இல்லை பாஜக.. இப்போதுவரை மேலிடத்தின் கறார்தன்மைக்கு இதுதான் காரணமாக இருந்து வருகிறது.. டார்கெட் 25ஐ எடுக்க வேண்டும் என்றால், ஆபரேஷன் சவுத்தை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்றால், இவர்களின் ஒத்துழைப்பு தேவையாக உள்ளது.. இன்றைய தினம் அமித்ஷா வரும்போதும், அதிமுக தலைவர்களிடமும் இதையே வலியுறுத்தக்கூடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.. அப்படியானால், வரப்போகும் தேர்தலின் களத்தை முடிவு செய்யக்கூடியவராக இருப்பது எடப்பாடி பழனிசாமிதான்.. என்ன செய்ய போகிறார்? பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications