ஆரியமே! தமிழ் மண்ணில் உனக்கு இடமே இல்லை- இந்தி காவுகொண்ட 25 வட இந்திய தாய்மொழிகள்-முதல்வர் ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்ப் பண்பாட்டை அழிக்க நினைத்து, சமஸ்கிருதம், இந்தி மொழிகள் மூலம் ஆரியப் பண்பாட்டைத் திணிக்க எவர் முயற்சித்தாலும் அதற்கு இந்த மண்ணில் இடம் கிடையாது என்கிற வகையில் அரை நூற்றாண்டுக்கு முன்பே தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையை சட்டமாக்கினார் பேரறிஞர் பெருந்தகை அண்ணா; அந்த வரலாற்றுப் பக்கத்தைப் புரட்டினால் தான் இன்றைய மத்திய ஆட்சியாளர்களின் வஞ்சகத்தை இளையதலைமுறை புரிந்து கொள்ள முடியும் என்று தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

hindi imposition tamilnadu mk stalin

இந்தி மொழி திணிப்பு எதிர்ப்பு தொடர்பாக திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியிருக்கும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

இந்தியைப் படித்தால் தமிழ் அழிந்துவிடும் என்று தி.மு.க. பயப்படுகிறதா எனக் கேட்கின்ற ஒரு கூட்டத்தார் இன்று நேற்றல்ல, பெரியார் முன்னெடுத்த 1937- 39 மொழிப் போராட்டத்தின் போதும் இருந்தனர். இதே கேள்வியை அப்போதும் கேட்டனர். இந்தி என்பது ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்பாக, சமஸ்கிருதமும் மேலும் சில மொழிகளும் கலந்து திரிபடைந்ததால் உருவான மொழி. தமிழ், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான மொழி. தன்னிலிருந்து திராவிடக் குடும்பத்து மொழிகளைக் கிளைத்திடச் செய்த தாய்மொழி.
தமிழை இந்தியால் அழிக்கவே முடியாது

கீழடி அகழாய்வுகள் மூலம் ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகள் பழமையான தமிழ் எழுத்துகளைக் கண்டறிந்திருக்கிறோம். மாங்குளம், மயிலாடும்பாறை, ஆதிச்சநல்லூர், சிவகளை ஆகிய இடங்களில் நடந்த அகழாய்வுகளில் கிடைத்த இரும்புப் பொருட்களை நவீன அறிவியல் தொழில்நுட்பமான கதிரியக்கக் கரிம காலக் கணிப்புகள் மற்றும் தூண்டொளி காலக் கணிப்புகளுக்கு உட்படுத்தியதன் விளைவாக, தமிழர்கள் 5300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத் திறன் பெற்றிருந்தனர் என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.'கல்தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்த குடி' என்பதற்கிணங்க, சங்க இலக்கியம் காட்டும் குறிப்புகள் பலவும் சான்றுகளுடன் நிரூபிக்கப்படுகின்ற அளவிற்குத் தமிழ் மூத்த மொழியாக- செம்மொழியாகத் திகழ்கிறது. சிறப்புமிக்கதமிழ்மொழியை இந்தி மொழியாலோ, இந்தியை முன்னிறுத்தி மறைமுகமாகத் திணிக்க நினைக்கும் சமஸ்கிருதத்தாலோ ஒருபோதும் அழிக்க முடியாது.

இந்தி மொழி திணிப்பு எதிர்ப்பு ஏன் தெரியுமா?

பிறகு எதற்காக அவற்றை நாம் எதிர்க்கிறோம்? அதற்கான காரணத்தைத் தந்தை பெரியார் அன்றே சொன்னார். "இந்தியால் தமிழ் அழியாது. ஆனால், தமிழ்ப் பண்பாடு அழிந்து போகும். இன்று வேலைக்காரியாக வரும் இந்தி, நாளை தமிழ் நாட்டரசி ஆவது நிச்சயம்" என்று எச்சரித்தார். ஓர் இனத்தை அழிக்க வேண்டுமென்றால் அதன் மொழி மீது தாக்குதல் நடத்தி, பண்பாட்டை சிதைக்க வேண்டும் என்பதை பாசிச எண்ணம் கொண்டோர் கடைப்பிடித்தார்கள். அண்மையில் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் அவர்கள் இந்தியா மீதான முந்தைய படையெடுப்புகள் குறித்துப் பேசியபோது, "ஒரு மாநிலத்தைக் கைப்பற்ற வேண்டுமென்றால், அதன் கலாச்சாரத்தை கையிலெடுப்பதும், மொழியை அழிப்பதுமே சிறந்த வழி" என்று குறிப்பிட்டதை மறக்க முடியாது. ஒன்றிய பா.ஜ.க. அரசின் கொள்கையே அதுவாகத்தான் இருக்கிறது.

இனப்பகைவர்களின் படையெடுப்பு

தமிழர்களின் கலாச்சாரத்தை - தனித்துவமானப் பண்பாட்டைச் சிதைக்கும் நோக்கத்துடன் பன்னெடுங்காலமாக இனப் பகைவர்கள் நடத்திய படையெடுப்பை இந்த மண் தொடர்ந்து முறியடித்து வந்திருக்கிறது. இந்த நெடிய தமிழ்ப் பண்பாட்டு மரபின் தொடர்ச்சிதான் திராவிட இயக்கம்.

ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், கங்கை கரை வரை படைநடத்தி கனக-விசய மன்னர்களை வென்று கண்ணகிக்கு கல் எடுத்து வந்து கோட்டம் அமைத்த சேரன் செங்குட்டுவன் என மூவேந்தர்கள் காலத்தில் மட்டுமல்லாமல், பக்தி இலக்கியங்களைப் பரப்பிய நாயன்மார்கள்- ஆழ்வார்கள், மெய்யியல் போற்றிய சித்தர்கள், சமரச சுத்த சன்மார்க்க நெறியை வழங்கிய அருட் பிரகாச வள்ளலார் உள்ளிட்டோர் சமஸ்கிருதத் திணிப்பை எதிர்த்து, தமிழை ஆயுதமாகக் கொண்டு பண்பாட்டுப் படையடுப்பைத் தடுத்தனர்.தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலான திராவிட இயக்கம் ஆதிக்க மொழியின் படையெடுப்பை முறியடித்து, தமிழைப் பாதுகாக்கும் அரணாகத் திகழ்கிறது.

இந்தி பரவிய நிலப்பரப்பில் காணாமல் போன தாய்மொழிகள்

தமிழ் தனித்து இயங்கும் தன்மை கொண்ட செம்மொழி என்பதும் இந்தியாவின் பிற மொழிகள் போல வடமொழி ஆதிக்கத்தால் சிதைவுறாமல் என்றும் நிலைத்திருக்கும் மொழி என்பதும் இந்திய ஒன்றியத்தை ஆட்சி செய்பவர்களின் கண்களை உறுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ் எனும் கோட்டைக்குள் ஓட்டை போட்டு நுழைய நினைக்கும் இந்தி -சமஸ்கிருதத் திணிப்பை அன்று முதல் இன்று வரை தடுத்து விரட்டும் காவலர்களாகத் திராவிட இயக்கத்தினர் திகழ்கின்றனர்.ஆதிக்கத்தை உணர முடியாமல் போனவர்களின் தாய்மொழிகள் கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் கரைந்து காணாமல் போன துயர வரலாற்றை, இந்தி பரவிய நிலப்பரப் பெங்கும் காண முடியும்.

இந்தியால் அழிந்த பீகாரின் தாய்மொழி மைத்திலி

இந்தி மொழியை ஏற்றுக்கொண்ட பீகார் மாநில மக்களின் சொந்த மொழியான மைத்திலி, அந்த மாநிலத்தின் அடுத்தடுத்த தலைமுறையினர் அறிய முடியாதபடி வழக்கொழிந்தது. அண்மைக்காலமாகத்தான் மைத்திலி மொழி பேசும் மக்கள் மெல்ல விழிப் புணர்வு பெற்று, தாய்மொழியை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர். இந்தியாவின் பெரிய மாநிலம் உத்தரபிரதேசம். இந்திதான் அந்த மாநிலத்தின் தாய்மொழி எனப் பலரும் நினைப்போம். உண்மை அதுவல்ல.

உபி.யில் இந்தி அழித்த பிரஜ்பாஷா, புந்தேல்கண்டி, போஜ்புரி, ஆவ்தி

வடமேற்கு உத்தரபிரதேச மக்களின் மொழி பிரஜ்பாஷா, தென்மேற்கு உத்தர பிரதேசத்தின் தாய்மொழி புந்தேல்கண்டி. வடகிழக்கு உத்தரபிரதேசத்தின் சொந்த மொழி போஜ்புரி. மத்திய உத்தரபிரதேசத்தின் உள்பகுதிகளில் பேசப்பட்டு வந்த மொழி ஆவ்தி. அத்துடன், கண்ணோஜி என்ற மொழியும் இப்பகுதியில் வழக்கில் இருந்தது. உத்தரபிரதேசத்தில் இருந்து பிரிக்கப்பட்ட மாநிலமான உத்தரகாண்டில் வாழும் மக்களின் பூர்வீக மொழி கடுவாலி மற்றும் குமோனி. மண்ணின் மைந்தர்களுடைய மொழிகள் அனைத்தையும் இந்தி என்கிற ஆதிக்க மொழியின் படையெடுப்பு சிதைத்துவிட்டது. போஜ்புரி, ஆவ்தி போன்ற மொழிகள் பெரும் அவதிகளுக்கிடையே இப்போதுதான் மெல்லத் துளிர்க்கின்றன.


வட இந்தியாவில் இந்தியால் அழிந்தவை எத்தனை மொழிகள் தெரியுமா?

இவை மட்டுமா? ஹரியாண்வி, ராஜஸ்தானி, மார்வாரி, மேவாரி, மால்வி, நிமதி, பகேலி, ஜார்கன்ஷி, சந்த்தலி, சட்டீஸ்கரி, கோர்பா உள்ளிட்ட மொழிகள் பேசுவோரைத் தேட வேண்டியுள்ளது. உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், ஜார்கண்ட், சட்டீஸ்கர், ஹரியானா, ராஜஸ்தான் என இந்தியை ஆட்சிமொழியாகக் கொண்ட மாநிலங்களின் பூர்வீக மொழிகள் சிதைக்கப்பட்டு, அழிக்கப்பட்ட நிலையில், அந்த மொழி பேசும் மக்களின் பண்பாட்டு விழுமியங்களும், இலக்கியச் செழுமைகளும், மரபார்ந்த அறிவுத்திறனும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிருக்கின்றன.

100 ஆண்டுகளில் இந்தி கபளீகரம் செய்த 25 தாய் மொழிகள்

வடஇந்திய மாநிலங்களில் 25க்கும் மேற்பட்ட அந்தந்த மண்ணின் தாய்மொழிகளை கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் இந்தி-, சமஸ்கிருதம் எனும் ஆதிக்க மொழிகளின் படையெடுப்பு சிதைத்திருக்கிறது.நூற்றாண்டைக் கடந்த திராவிட இயக்கம் ஏற்படுத்திய விழிப்புணர்வினாலும், அதன் தொடர்ச்சியானப் போராட்டத்தினாலும் நம்தாய்த் தமிழ் மொழி காப்பாற்றப்பட்டு, தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகள் நிலைநிறுத்த ப்பட்டிருக்கின்றன. இதனை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் ஒன்றிய பா.ஜ.க. அரசின் தேசிய கல்விக் கொள்கை மூலம் இந்தி, -சமஸ்கிருத மொழிகளைத் திணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதனைஉணர்ந்திருப்பதால்தான் தமிழ்நாடு எதிர்க்கிறது.

என்றும் தமிழைக் காத்து நிற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் தமிழ்நாட்டில் உள்ள பல கட்சிகளும் இணைந்து இந்தித் திணிப்பை எதிர்க்கின்றன. கழகத்தை அரசியல் களத்தில் எப்போதும் எதிர்க்கும் கட்சிகளும்கூட இந்தித் திணிப்பு கூடாதுஎன்கின்றன.

பாஜகவும் கூலிப்படையும் ஆதரிக்கும் புதிய கல்வி கொள்கை

தமிழ் மண்ணிற்கு கொஞ்சமும் பொருத்தமில்லாத; -தமிழர்களின் பண்பாட்டிற்கு நேரெதிரான கொள்கைகளைக் கொண்ட பா.ஜ.க.வும் அதன் கூலிப்படையினரும் மட்டும், தேசிய கல்விக் கொள்கையின் மும்மொழித் திட்டத்தை ஆதரித்தபடியே, "இந்தி-சமஸ்கிருதம் என்று எங்கே இருக்கிறது? மூன்றாவது மொழியாக, இந்தியாவில் உள்ள எந்த மொழியை வேண்டுமானாலும் படிக்கலாம். அயல்நாட்டு மொழிகளைக் கூடக் கற்கலாம்" என்று ஒரு 'தினுசாக'ப் பேசுகிறார்கள். அடடா..! இவர்களுக்குத்தான் இந்திய மொழிகள் மீது எவ்வளவு அக்கறை?

hindi imposition tamilnadu mk stalin

மும்மொழித் திட்டத்தை ஏற்றால் என்ன கதியாவோம் தெரியுமா?

மும்மொழித்திட்டம் என்ற பெயரில் என்னென்ன மொழிகள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன என அட்டவணையைப் பார்த்தால் பெரும்பாலான மாநிலங்களில் இந்தி அல்லது சமஸ்கிருதமே முன்னிலைப்படுத்தப்படுகிறது. தமிழர்கள் வாழும் யூனியன் பிரதேசமானஅந்தமான் நிக்கோபர் தீவுகளைத் தவிர வேறெங்கும் தமிழ் மொழி இடம்பெறவில்லை. இதுவும்கூட எத்தனை காலத்திற்கு நீடிக்கும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது.பா.ஜ.க. ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் உருது ஆசிரியர்களுக்குப் பதில் சமஸ்கிருத ஆசிரியர்களை நியமிக்கும் மொழிப் பாசிசம் வெட்டவெளிச்சமாகியுள்ளது. தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால், வடமாநிலங்களைப் போலத் தாய்மொழியை முற்றிலும் புறக்கணித்து சமஸ்கிருதமயமாக்கும் திட்டம்தான் எதிர்காலத்தில் நிறைவேற்றப்படும்.

தேசிய கல்வி கொள்கை சொல்வதுதான் என்ன?

தேசிய கல்விக் கொள்கை 2020ன் 4.17வது பிரிவு, "இந்தியஅரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள செம்மொழியான சமஸ்கிருதம் இலக்கியம், கணிதம், அறிவியல், மருத்துவம், தத்துவம், இசை, அரசியல் இன்ன பிற உள்ளிட்ட பல்வேறு கலைச்செல்வங்களைக் கொண்டுள்ளது, இதனால் சமஸ்கிருத மொழி பள்ளிகளிலும், உயர்கல்வியிலும் அனைத்து நிலைகளிலும் மும் மொழித் திட்டத்தில் ஒன்றாகமாணவர்களுக்கு கற்றுத்தரப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகே, மூத்த மொழியான தமிழ் மற்றும் இந்தியாவின் பிற மொழிகள் பற்றி 4.18வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவும், சமஸ்கிருதத்துடன் கூடுதலாக (In addition to Sanskrit). தமிழ் உள்ளிட்ட மொழிகளைக் கற்பதற்கு ஆன்லைன் முறையில் வாய்ப்பளிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், சமஸ்கிருதத்தைத் திணிக்கவும், தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளைப் புறங்கையால் ஓரங்கட்டவும் திட்டமிட்டே ஒன்றிய பா.ஜ.க. அரசு தேசியக் கல்விக் கொள்கையையும் அதன் வழியாக மும்மொழித் திட்டத்தையும் நம் மீது திணிக்கிறது என்பது தெளிவாகிறது.
கேந்திரிய வித்யாலாயா பள்ளிகளில் தமிழ்?

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. இதுகுறித்து, கழகத்தின் நாடாளுமன்ற மாநிலங்களவைக் குழுத் தலைவரான திருச்சி சிவா அவர்கள், அந்தந்த மாநில மொழிகளைக் கற்பதற்கு கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் எத்தனை ஆசிரியர்கள் நியமிக்கப் பட்டிருக் கிறார்கள் என்ற பட்டியலைக் கோரியதுடன், தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களின் நியமனம் தொடர்பாக ஒன்றிய கல்வித் துறை அமைச்சகத்திடம் ஏதேனும் விவரம் உள்ளதா? என்றும் எழுப்பிய கேள்விகளுக்கு, ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் 5-.8.-2021 அன்று அளித்த பதிலில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாநில மொழிகளுக்கான ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்றும், 15 அல்லது அதற்கு மேற்பட்ட மாணவர்கள் தங்களின் மாநில மொழியைக்கற்க விருப்பம் தெரிவித்தால் மட்டுமே அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதுதான் பா.ஜ.க அரசின் தமிழ் மீதான அக்கறை. இவர்கள்தான் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் தேசியக் கல்விக் கொள்கையின் மும்மொழித் திட்டம் மூலம் தமிழைக் கற்றுத் தரப் போகிறார்களாம். அதனால், தமிழ்நாட்டில் மும்மொழித் திட்டம் என்ற பெயரில் இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்க வேண்டுமாம்.

ஆரியத்துக்கு தமிழ்நாட்டில் இடமே இல்லை

தமிழ்ப் பண்பாட்டை அழிக்க நினைத்து, சமஸ்கிருதம், இந்தி மொழிகள் மூலம் ஆரியப் பண்பாட்டைத் திணிக்க எவர் முயற்சித்தாலும் அதற்கு இந்த மண்ணில் இடம் கிடையாது என்கிற வகையில் அரை நூற்றாண்டுக்கு முன்பே தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையை சட்டமாக்கினார் பேரறிஞர் பெருந்தகை அண்ணா. அந்த வரலாற்றுப் பக்கத்தைப் புரட்டினால் தான் இன்றைய ஒன்றிய ஆட்சியாளர்களின் வஞ்சகத்தை இளையதலைமுறை புரிந்து கொள்ள முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+