ஒரே நாளில் 22 கோடி சம்பாதித்த 28 வயது குஜராத் இளைஞர்.. ஏமாந்த சென்னை தொழில் அதிபர்
சென்னை: பொய்களை நம்பி பலர் கோடிகள் செலவழித்து ஏமாறுவது தொடர்கிறது. அதேநேரம் பணக்காரர்களை மற்றும் தொழில் அதிபர்களை மிகப்பெரிய செல்வந்தர் ஆக்குவதாக கூறுவோர் எளிதாக கோடீஸ்வரன் ஆகிறார்கள். ஆனால் அது நிலைப்பது இல்லை. கடைசியில் சிறையில் கம்பி எண்ண வேண்டிய நிலை வருகிறார். ஆன்லைன் முதலீட்டில் சென்னை தொழிலதிபரிடம் ரூ.22.30 கோடியை ஏமாற்றிய குஜராத் இளைஞர் கைது செய்யப்பட்டார்.
நமது ஊரில் பலருக்கு எவ்வளவு தான் பணம் இருந்தாலும் மேலும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை குறையவே குறையாது. பல கோடிகளை சேர்த்தாலும், மேலும் பணம், சொத்து சேர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இப்படிப்பட்டவர்கள் மோசடி நபர்களிடம் சிக்கி கோடிகளை இழக்கும் வாய்ப்பு உள்ளது. அப்படித்தான் ஒருவர் சதுரங்க வேட்டை சினிமா பாணியில் சென்னை தொழில் அதிபரிடம் 22 கோடி மோசடி செய்திருக்கிறார்.

22 கோடி மோசடி
சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த 76 வயதாகும் சுவேதரன்யன் என்பவர் தொழிலதிபர் ஆவார். இவர் சென்னை மாநகர காவல் ஆணையர் அருணை சந்தித்து கடந்த ஜூன் மாதம் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகார் சுவேதரன்யன் கூறுகையில்,"ஆன்லைன் வர்த்தக தளத்தில் முதலீடு செய்தேன். ஆனால் போலியான ஆன்லைன் வர்த்தக தளம் என்பது தெரியவந்தது. அந்த தளம் மூலம் ரூ.22.30 கோடியை நான் இழந்துவிட்டேன். எனவே, எனது பணத்தை மீட்டு, மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும்' என கூறியிருந்தார்.
கண்டுபிடித்தது எப்படி
இதுகுறித்து உரிய விசாரணை நடத்த சைபர் கிரைம் போலீசாருக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் உத்தரவிட்டார். அதன்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள 'சைபர்' கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இதில், மோசடி கும்பல், சுவேதரன்யன் பணத்தில் ரூ.1.40 கோடியை குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள வங்கி கணக்கு ஒன்றிற்கு மாற்றியதை போலீசார் கண்டுபிடித்தனர்.
28 வயது இளைஞர் கைது
இதையறிந்து, அங்கு விரைந்த சென்னை 'சைபர்' கிரைம் போலீசார், மோசடியில் ஈடுபட்டதாக குஜராத் மாநிலம், ஆமதாபாத்தைச் சேர்ந்த படேல் ஜே (28) என்பவரை கைது செய்தனர். பின்னர், அவரை சென்னை அழைத்து வந்து புழல் சிறையில் அடைத்தனர். விசாரணையில், கைது செய்யப்பட்ட படேல் ஜே மீது தமிழ்நாடு, மகாராஷ்டிரா, தெலுங்கானா, கர்நாடகா, டெல்லி, கோவா, பஞ்சாப், ஆந்திரபிரதேசம், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 31 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
எப்படி ஏமாற்றினார்கள்
அவர், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து போலியாக ஆன்லைன் முதலீட்டு செயலிகளை உருவாக்குவது, இணையதளங்கள், சமூக ஊடக விளம்பரங்கள் (பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப்) மூலம் பொதுமக்களை ஏமாற்றி, விரைவில் அதிக லாபம் கிடைக்கும் என்ற பேராசையை தூண்டி, பெரிய அளவில் பணத்தை போலியான தனது ஆன்லைன் முதலீட்டு தளத்தில் முதலீடு செய்ய வைத்து கோடிக்கணக்கில் சுருட்டியது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளிகளை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். தீவிர விசாரணைக்கு பின்னர் இவர்களது முழு விவரமும், எப்படி ஏமாற்றினார்கள் என்பதும் தெரியவரும்.
செபி அறிவுரை
ஆன்லைனில் முதலீடு செய்தால் கோடிகளில் லாபம் சம்பாதிக்கலாம் என யாராவது கூறினால் நம்ப வேண்டாம். ரிசர்வ் வங்கி அனுமதி இல்லாத எந்த நிதி நிறுவனத்திலும் முதலீடு செய்யக்கூடாது. அதேபோல் ஆன்லைன் பங்கு வர்த்தகம் என்று கூறினால், செபியின் அனுமதி வேண்டும். அப்படி இருப்பதாக போலியாக கூட காட்ட வாய்ப்பு உள்ளது. செபியின் அதிகாரப்பூர்வ தளத்தில் லிஸ்டில் இல்லாத மற்றும் நம்பகமற்ற தெரியாத நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாறக்கூடாது. இதுபற்றியும் செபியும் விழிப்புணர்வு செய்து வருகிறது. எதார்த்தத்தை மீறி யாராவது லாபம் சம்பாதிக்கலாம் என கவர்ச்சி வாக்குறுதிகள் தந்தால் காவல்துறையில் புகார் அளிக்கலாம். கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்கள்.












Click it and Unblock the Notifications