சென்னையில் வேலை பார்த்த வங்கிக்கே விபூதி அடித்த ஊழியர்கள்.. இப்படியும் அல்வா கொடுப்பார்களா?
சென்னை: சென்னையில் வேலை பார்த்த வங்கிக்கே விபூதி அடித்திருக்கிறார்கள் வங்கி ஊழியர்கள்.. இல்லாத கம்பெனிகள் பெயரில் பொய் கணக்கு உருவாக்கி, கிரெடிட் கார்டு வாங்கி சுமார் 3.5 கோடி ருபாய் மோசடி நடந்துள்ளது. வங்கிகளில் இப்படியும் மோசடி நடக்குமா என்ற அசர வைத்துள்ளார்கள்.. இந்த விவகாரத்தில் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த தனியார் வங்கி ஒன்றின் முதன்மை மேலாளர் ரங்கநாதன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அண்மையில் மோசடி நடந்ததாக புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த புகார் மனுவில் அவர் கூறியுள்ளதாவது: "எங்கள் வங்கியில் 3 போலி நிறுவனங்களின் பெயரில் 59 ஊழியர்கள் வேலை பார்ப்பதாக பொய்யான கணக்கை காட்டினார்கள்.

அத்துடன் அவர்களுக்கு சம்பளம் வழங்குவது போன்று ஒரு போலி பட்டியலை எங்களிடம் கொடுத்தார்கள். பின்னர் அந்த போலி நிறுவனத்தினர் 'கிரெடிட்' கார்டுகளையும் எங்களிடம் வாங்கினார்கள். இதன் மூலம் வங்கியில் இருந்து ரூ.3.5 கோடி கடன் உதவி பெற்றார்கள். கடைசியில் அந்த கடனை திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்கள்
இந்த மோசடிக்கு எங்கள் வங்கி ஊழியர்கள் 2 பேரும் உடந்தையாக இருந்துள்ளனர். இதுதொடர்பாக இந்த போலி நிறுவனங்களில் இயக்குனராக உள்ள 6 பேர் மீதும், மோசடிக்கு துணைப் போன எங்கள் வங்கி ஊழியர்கள் 2 பேரும் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு தனியார் வங்கியின் முதன்மை மேலாளர் தனது புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த புகார் மனு சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் கவனத்திற்கு சென்றது. அவர் இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பொன் சித்ரா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இந்த மோசடியில் ஈடுபட்டதாக போலி நிறுவனங்களின் நிர்வாகிகள் சதீஷ் செல்வராஜ் (வயது 33), அவரது மனைவி சர்மிளா (31), தனசேகர் (49), சதீஷ்குமார் (47), அவரது மனைவி மகாலட்சுமி (41), சசிரேகா (43) ஆகிய 6 பேரை அதிரடியாக போலீசார் கைது செய்தனர். மேலும் உடந்தையாக இருந்த வங்கி ஊழியர்களான ஜவகர் பெருமாள் (28), கார்த்திக் (31) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
இவர்கள் நடத்திய போலி நிறுவனங்களின் அலுவலகம் சென்னை கொட்டிவாக்கத்தில் செயல்பட்டு வந்தது. மோசடிக்கு துணை போன வங்கி ஊழியர்கள் 2 பேரும் பெரிய அளவில் கமிஷன் தொகை பெற்றது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications