பாஜக பற்றிய திமுகவின் 3 பொய்கள் சுக்குநூறானது! பிரதமர் மோடி பேச்சால் வானதி சீனிவாசன் உற்சாகம்!
சென்னை: சென்னையில் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சால் பாஜக பற்றிய அறிவாலயத்தின்(திமுக அலுவலகம்) 3 பொய்கள் உடைந்துள்ளது என வானதி சீனிவாசன் எம்எல்ஏ கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழகத்துக்கான பல்வேறு பணிகளை துவக்கி வைத்தார். மேலும் சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.31,400 கோடியாகும்.
இந்த விழாவில் முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர். முதலில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
மோடி விழாவில் திருக்குறளை மறந்த மத்திய அமைச்சர் எல் முருகன்! அடுத்த நடந்தது என்ன?
பிரதமர் மோடி பேச்சு
அதன்பிறகு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர், ‛‛தமிழ்நாடு வருவது எப்போதும் மகிழ்ச்சிக்கு உரியது. தமிழ் மொழி நிலையானது. தமிழ் கலாசாரம் உலகளாவியது. ஒவ்வொரு துறையிலும் தமிழ்நாட்டை சேர்ந்த யாராவது ஒருவர் தலைசிறந்தவராக உள்ளார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி ஆய்வு படிப்புக்கான சுப்பிரமணிய பாரதியார் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. இது என் தொகுதியில் இருப்பது கூடுதல் மகிழ்ச்சி. இந்திய மொழிகளை ஊக்குவிப்பதற்காக தான் தேசிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
இலங்கை உதவி
தமிழ்மொழி மற்றும் கலாச்சாரத்தை மேலும் பிரபலப்படுத்துவதில் இந்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கான புதிய வளாகம் திறக்கப்பட்டது. இதற்கு மத்திய அரசு முழுமையாக நிதியுதவி செய்தது. இலங்கை கடினமான சூழ்நிலையை சந்தித்து வருகிறது. இந்த சூழல் நிச்சயமாக உங்களுக்கு கவலையை தரும். ஒரு நெருங்கிய நண்பனாகவும், அண்டை நாடகவும் இந்தியா இலங்கைக்கு அனைத்து வகையான உதவிகளையும் வழங்கி வருகிறது. இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதி மலையக தமிழர்கள் உட்பட அந்நாட்டில் இருக்கும் சகோதர சகோதரிகளுக்கு தனி நபர்கள், இந்திய அமைப்புகள் உதவி செய்துள்ளனர்'' என்றார்.
3 பொய்களை உடைத்த பிரதமர்
பிரதமர் மோடியின் இந்த பேச்சு குறித்து இன்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‛‛நேற்று பிரதமர் நரேந்திர மோடி பேச்சில் பாஜக பற்றிய அறிவாலயத்தின் பல்வேறு பொய்கள் உடைக்கப்பட்டுள்ளது. ஒன்று அனைத்து இந்திய மொழிகளையும் புதிய கல்வி கொள்கை ஊக்குவிக்கும். இரண்டாவது இலங்கை மற்றும் தமிழர் விவகாரங்களில் இந்தியா துணை நிற்கும். மூன்றாவதாக செம்மொழி அமைப்பிற்கு உதவி'' என குறிப்பிட்டுள்ளார்.
காரணம் என்ன?
அதாவது தமிழகத்தை ஆட்சி செய்யும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தமிழ் மொழியை அழித்துவிடும் என தொடர்ந்து கூறி வருகிறது. அதேபோல் தமிழ்மொழி வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவி செய்யாமல் உள்ளது எனவும், இலங்கை தமிழர் விஷயத்தில் பாராமுகம் காட்டுவதாகவும் திமுக குற்றம்சாட்டி இருந்தது.ஆனால் நேற்று பிரதமர் நரேந்திர மோடி திமுகவின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் வகையில் புதிய கல்வி கொள்கை இந்திய மொழிகளை ஊக்குவிக்கம், இலங்கை, தமிழர் விவகாரங்களில் மத்திய அரசு துணை நிற்கும். செம்மொழி அமைப்புக்கு உதவி செய்ததாக பேசியிருந்தார். அதனை தான் குறிப்பிட்டு வானதி சீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார்.