அமைச்சர் பிடிஆர் கார் மீது காலணி வீச்சு.. 3 பேர் கைது.. அதில் ஒருவர் சிண்ட்ரெல்லாவா?
சென்னை: அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்தில் பாஜக மகளிரணியை சேர்ந்த 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர். இதுவரை இந்த வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் ராஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடனான தாக்குதலில் தமிழக வீரர் உள்பட 3 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதையடுத்து தமிழக வீரர் மதுரை மாவட்டம் டி புதுப்பட்டியை சேர்ந்த லட்சுமணனின் உடல் மதுரைக்கு கடந்த சனிக்கிழமை கொண்டு வரப்பட்டது.
அப்போது மதுரை விமான நிலையத்தில் தமிழக அரசு சார்பில் அவரது உடலுக்கு அமைச்சர் பிடிஆர் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது மதுரை விமான நிலையத்தில் பாஜகவினரும் அஞ்சலி செலுத்த குவிந்தனர்.

பிடிஆர்
அப்போது அங்கு வந்த பிடிஆர், தமிழக அரசு சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்காதவர்கள் எப்படி கலந்து கொள்ள முடியும் என கேட்டு அவர்களை லட்சுமணனின் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்துமாறு கூறியுள்ளார். இதனால் போலீஸாருக்கும் பாஜகவினருக்கும் வாக்குவாதம் நடைபெற்றது.

மதுரை விமான நிலையம்
பின்னர் மதுரை விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய அமைச்சர் பிடிஆரின் காரை வழிமறித்த பாஜகவினர் அதன் மீது காலணியை வீசினர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக நடந்தவற்றுக்கு அமைச்சரிடம் மன்னிப்பு கேட்ட மதுரை மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் பாஜகவிலிருந்து விலகினார்.

7 பேர் கைது
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் இதுவரை 7 பேரை கைது செய்தனர். மேலும் அமைச்சரின் கார் மீது பெண் ஒருவர் செருப்பை வீசியதால் அந்த பெண்ணை தேடி வந்தனர். இந்த நிலையில் பாஜக மகளிரணியை சேர்ந்த தனலட்சுமி, சரண்யா, தெய்வானை ஆகிய 3 பெண்களை கைது செய்துள்ளனர்.

மேலும் 3 பேர் கைது
எனவே காலணி வீச்சு விவகாரத்தில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை விமான நிலைய முனையத்தில் செருப்பை தவறவிட்ட சிண்ட்ரெல்லா தனது ஒற்றை செருப்பை எப்போது வேண்டுமானாலும் தனது அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம் என பிடிஆர் ட்வீட் போட்டிருந்த நிலையில் கைதான 3 பேரில் ஒருவர் சிண்ட்ரெல்லாவாக இருப்பாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications