சோலியை முடிக்கிறாங்க..செல்வப்பெருந்தகைக்கு எதிராக 30 மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள்- 'தாகூர்' தாண்டவம்!
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு எதிராக 30 மாவட்ட தலைவர்கள் போர்க்கொடி தூக்கியிருப்பதால் அக்கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவன் பரபரத்துக் கொண்டிருக்கிறது. செல்வப்பெருந்தகைக்கு எதிரான இந்த கலகக் குரலின் பின்னணியில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் இருப்பதாகவும் சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் கட்சிகள் என்றாலே உட்கட்சி மோதல் இருக்கத்தான் செய்யும்.. ஆனால் அதீதமான உட்கட்சி மோதலை கொண்டதுதான் காங்கிரஸ். தமிழக காங்கிரஸ் கட்சியில் எப்போதும் ஆகக் குறைந்தது 10, 15 கோடிகள் இருக்கவே செய்யும். முன்னாள் தலைவர்கள், இந்நாள் முன்னாள் எம்.பிக்கள் என பலரும் ஆளுக்கொரு கோஷ்டியை உருவாக்கிக் கொண்டு அவ்வப்போது களேபரங்களில் ஈடுபடுவதுதான் காங்கிரஸின் கலாசாரமாகவே மாறியும் போய்விட்டது.

என்ன நடக்கிறது தமிழக காங்கிரஸில்?
தற்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகையும் இப்போது உச்சகட்ட உட்கட்சி மோதலை எதிர்கொண்டு வருகிறார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியில் இருந்து செல்வப்பெருந்தகையை நீக்கியாக வேண்டும் என்று 30 மாவட்ட தலைவர்கள் போர்க்கொடி தூக்கி இருக்கின்றனர். இந்த கலகக் குரலுக்கு காரண கர்த்தாவாக இருப்பது மாணிக்கம் தாகூர் எம்பிதான் என்கின்றனர் கதர்ச்சட்டையினர். மேலும் செல்வபெருந்தகைக்கு எதிரான கேஎஸ் அழகிரி, டாக்டர் செல்லக்குமார், ஜெயக்குமார் என பல எதிர் கோஷ்டிகளையும் ஒருங்கிணைக்கும் ஜரூர் பணியில் களமிறங்கி இருக்கிறாராம் மாணிக்கம் தாகூர். அடுத்து வரும் சில நாட்களில் அதிருப்தி மாவட்ட தலைவர்கள் ஒருசேர டெல்லிக்கு படையெடுத்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை நேரில் சந்தித்து செல்வப்பெருந்தகையை மாற்ற கோரவும் முடிவு செய்துள்ளனராம். இதற்கான ஏற்பாடுகளையும் மாணிக்கம் தாகூர் செய்துவருவதாகவும் கூறப்படுகிறது.
செல்வப்பெருந்தகைக்கு எதிராக மாணிக்கம் தாகூரின் ருத்ர தாண்டவம் ஏன்?
செல்வப்பெருந்தகைக்கு எதிராக மாணிக்கம் தாகூர் எம்பி ஏன் இப்படியான ருத்ரதாண்டவத்தை வெளிப்படுத்துகிறார் என நாம் காங்கிரஸ் வட்டாரங்களில் விசாரித்தோம். இது தொடர்பாக நமக்கு கிடைத்த தகவல்களின் தொகுப்பு:
செல்வப்பெருந்தகையின் நியமனத்தை தொடக்கம் முதலே கடுமையாக எதிர்த்து வருகிறவர் மாணிக்கம் தாகூர். தமக்கு இருக்கும் டெல்லி மேலிட செல்வாக்கின் மூலம் செல்வப்பெருந்தகை மேற்கொள்ளும் பல நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டைகளையும் போட்டு வருகிறார் மாணிக்கம் தாகூர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட தலைவர்கள் நியமனம் தொடர்பாக இதுவரை பல முறை டெல்லிக்கு பட்டியல் அனுப்பிவிட்டார் செல்வப்பெருந்தகை. ஆனால் இந்த பட்டியலுக்கு ஒப்புதல் பெற முடியவில்லை. இதற்கு காரணமே மாணிக்கம் தாகூர்தான் எனவும் கூறப்படுகிறது.
யாரை கேட்டு அறிவித்தீங்க?
அண்மையில் திருப்பரங்குன்றம் விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. அப்போது, காங்கிரஸ் கட்சியினர் திருப்பரங்குன்றம் முருகன் கோவில்- தர்காவுக்கு செல்வார்கள் என செல்வப்பெருந்தகை அறிவித்தார். இதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்ததே மாணிக்கம் தாகூர்தானாம். என் தொகுதிக்குள் ஒரு நிகழ்ச்சியை நடத்துவதாக அறிவிப்பதற்கு முன்னர் என்னிடம் ஆலோசித்திருக்க வேண்டும்.. ஆனால் அப்படி செய்யாமல் தன்னிச்சையாக எப்படி செல்வப்பெருந்தகையால் செயல்பட முடியும்? என கொந்தளித்தார் மாணிக்கம் தாகூர். ஆனால் செல்வப்பெருந்தகையோ, மாநில தலைவர் நான் ஏன் உங்ககிட்ட அனுமதி கேட்கனும் என பதிலுக்கு எகிற இந்த விவகாரம் டெல்லி வரைக்கும் போனதாம்.

செல்வப்பெருந்தகையை தூக்காம விடமாட்டேன்- தாகூர் சபதம்
இந்த நிலையில்தான் அண்மையில் டெல்லி சென்ற செல்வப்பெருந்தகை காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை நேரில் சந்தித்து சுமார் 1 மணிநேரம் தமது மனக்குமுறலை கொட்டித் தீர்த்தாராம். மாணிக்கம் தாகூர் தமக்கு எப்படியெல்லாம் முட்டுக்கட்டை போட்டு வருகிறார் என கண்ணீரும் கம்பலையுமான செல்வப்பெருந்தகை விவரித்தாராம். செல்வப்பெருந்தகையின் இந்த சந்திப்பு வெகு ரகசியமாகவே இருந்ததாம். இதனை தெரிந்து கொண்ட மாணிக்கம் தாகூர் தமக்கு எதிராக டெல்லியில் புகார் தெரிவிக்க பறந்து வந்த செல்வப்பெருந்தகையின் பதவியை பறிக்காமல் விடப்போவது இல்லை என சபதம் எடுத்திருக்கிறராம்.
டெல்லிக்கு படையெடுக்கும் அதிருப்தி கோஷ்டி
இதன் முதல் கட்டமாகத்தான் 30 காங்கிரஸ் மாவட்ட தலைவர்களை ஒருங்கிணைத்துள்ளாராம் மாணிக்கம் தாகூர். அத்துடன் அனைவரையும் டெல்லிக்கு அழைத்துச் சென்று செல்வப்பெருந்தகையை மாற்றியே ஆக வேண்டும் என வலியுறுத்தவும் போகின்றதாம் இந்த கோஷ்டி. செல்வப்பெருந்தகை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகி பிப்ரவரி 17-ந் தேதியுடன் ஓராண்டுதான் ஆகிறது.. அதற்குள்ளேயே இத்தனை களேபரங்களை எதிர்கொள்ளத்தான் வேண்டியதும் இருக்கிறதாம்.
-
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
ராகுல் சொல்லியும் அடங்கலையே! கூட்டணிக்குள் குண்டு வைக்கும் மாணிக்கம் தாகூர்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications