தனி நபராக முயன்று ஒரு கேமரா மியூசியம்! சென்னையில் நமது பக்கத்தில் ஒரு சாதனையாளர்.. யார் இந்த அருண்?
சென்னை: நம்ம ஊரைப் பொறுத்தவரைச் சாதனை என்றால் அது வெளிநாட்டில் யாராவது செய்தால்தான் பாராட்டுவோம். நம்ம ஊரிலும் உலக அளவில் சாதிப்பவர்கள் இருக்கவே செய்கிறார்கள். அதில் ஒருவர் டாக்டர் அருண். படித்தது பல் மருத்துவம். செய்வது மருத்துவத் தொழில்.
ஆனால் தனித்துவமான ஆர்வத்தால் இன்று உலகையே சுண்டி இழுத்து இருக்கிறார். ஆசிய அளவில் அதிசயக் கூடமாக உருவாகி இருக்கிறது கனவு. அப்படி என்ன செய்திருக்கிறார்?
எல்லாம் ஆத்தாடி என ஆச்சரியம் போட வைக்கும் ரகம். சுருக்கமாகச் சொன்னால், தரமான சம்பவம். சென்னை கோவளம் பகுதியில் உலகிலேயே மிகச் சிறப்பான கேமிரா அருங்காட்சியகத்தைக் கட்டி எழுப்பி இருக்கிறார். அவ்வளவும் தனிமனித முயற்சி. ஏறக்குறைய இவரது காட்சியகத்தில் 3 ஆயிரம் கேமிராக்கள் உள்ளன. இங்கே இடம் பற்றாக்குறை உள்ளதால் வீட்டில் ஆயிரக்கணக்கான கேமிராக்களை வைத்துள்ளார். எல்லாம் உலகத்தில் எங்கேயும் கிடைக்காத கேமிராக்கள்.
சபாஷ்.. வீதிக்கு வீதி நூலகம்.. கோவை காவல்துறை ஆணையரின் அதிரடி ஆக்ஷன்!
எப்படி முடிந்தது?
"சின்ன வயதிலிருந்தே புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் அதிகம். அப்படித்தான் கேமிரா மீது ஆசைப் பிறந்தது. முதன்முதலாக 1997இல் மூர் மார்க்கெட்டில் ஒரு பழைய கேமிராவை 300 ரூபாய்க்கு வாங்கினேன். அந்த கேமிரா ரொம்ப ஸ்பெஷல். என்னவென்றால் அதில் இரண்டு லென்ஸ் இருக்கும். மொபைல் போன்கள் இல்லாத காலத்தில் வந்த இரண்டு லென்ஸ் கேமிரா. இதுவரை எனக்குப் பிடித்த கேமிரா அதுதான்" என்றவர் தான் எப்படி அருங்காட்சியகத்தைத் தொடங்கினேன் என்பதை விளக்கினார்.
"2013 ஆரம்பித்தேன். அப்ப சென்னையில் உலக கேமிரா கண்காட்சி நடந்தது. அதற்காக என்னை அழைத்து சில கேமிராக்களைக் காட்சிப்படுத்தக் கேட்டுக் கொண்டார்கள். அப்போது என் கையிலிருந்த வகைவகையான 300 சொந்த கேமிராவை காட்சிக்கு வைத்தேன். அதை 20 ஆயிரம் பேர் வந்து பார்வையிட்டார்கள்.
20 ஆயிரம் செலவு
அதன் பிற்பாடு பலரும் கேமிராவைப் பார்க்க விரும்பி போன் செய்ய ஆரம்பித்தார்கள். அத்தனை நபர்களையும் வீட்டுக்கு அடிக்கடி அழைத்துக் காட்ட முடியவில்லை. ஆகவே இந்த மியூசியத்தை எனது சொந்த பணம் போட்டு ஆரம்பித்தேன். அன்று முதல் இன்றுவரை நடத்து வருகிறேன். மாதம் இதை நடத்தவே 20 ஆயிரம் செலவாகிறது. ஏதோ டாக்டர் தொழில் இருப்பதால் சமாளிக்க முடிகிறது" என்கிறார் டாக்டர் அருண்.
2வது உலகப் போர்க் கால கேமிரா
"தனிப்பட்ட மனிதராக இதை நடத்துவது கஷ்டமாக உள்ளது. ஆனால் அரசு ஏதேனும் உதவினால் இதைத் தொடர்ந்து வளர்ச்சியடைய உதவும். இப்போது நான் கின்னஸ் சாதனைக்கு முயன்று வருகிறேன். உலகிலேயே தனி மனிதரால் நடத்தப்படும் மிகப் பெரிய கேமிரா மியூசியம் என உரிய அளவில் அங்கீகாரம் வாங்கப் போகிறேன். அதன் பிறகு அரசுக்கு கோரிக்கை வைக்கத் திட்டமிட்டுள்ளேன்.
இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட கேமிரா
அதேபோல ஜப்பான் ஹிரோஷிமாவில் விஷ வாய்வுக் கசியும் போது அந்தச் சேதத்தை விமான இறக்கையில் கேமிராக்களைப் பொருத்து படம் பிடித்தார்கள். அந்த கேமிரா உலகிலேயே 12 கேமிராக்கள்தான் உள்ளன. அவை விற்பனைக்காகச் செய்யப்பட்டவை அல்ல. சேதத்தைப் படம்பிடிப்பதற்காகவே தனியாக தயாரிக்கப்பட்டவை" எனக் கூறும் அருண் கடந்த 25 ஆண்டுகளாக இதை ஒரு ஹாபியாக செய்து வருகிறார்.