விஜய் ராஜினாமா.. அரசிதழில் வெளியீடு.. நன்றியே சொல்லாமல் காலியானது திருச்சி கிழக்கு தொகுதி
சென்னை: வாக்காளர்களுக்கு முதல்வர் விஜய் இன்னும் நன்றி கூட தெரிவிக்காத நிலையில், அவர் வெற்றி பெற்றிருந்த திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த ஜோசப் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இரு தொகுதிகளில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களை வீழ்த்தி வெற்றி பெற்று தற்போது தமிழக முதல்வராகப் பதவியேற்றுள்ளார் ஜோசப் விஜய்.

இந்த நிலையில், ஏதேனும் ஒரு தொகுதியில் மட்டுமே சட்டமன்ற உறுப்பினராக இருக்க முடியும் என்ற நிலையில், தற்போது திருச்சி கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ பதவியை முதல்வர் விஜய் ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் வெங்கடரமணன் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் உள்ள அதிகாரிகளிடம் வழங்கினர்.
இந்நிலையில், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியானதாக அரசிதழில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த ஜோசப் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும்.

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பாக முன்னாள் அமைச்சர் கு.ப கிருஷ்ணன் அந்த தொகுதியில் போட்டியிடுவதாகக் கூறப்படுகிறது. இந்த சட்டமன்றத் தேர்தலில் ஏற்கெனவே தவெக சார்பாக திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் கு.ப.கிருஷ்ணன் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ள நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட மீண்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications