Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தென் இந்தியர், வடகிழக்கு மாநிலத்தவர் இடம்பெறாத கலாசார ஆய்வுக் குழுவை- கலைக்க 32 எம்.பிக்கள் கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசு அமைத்துள்ள 16 பேர் கொண்ட கலாசார ஆய்வுக் குழுவில் தென் இந்தியர், வடகிழக்கு மாநிலத்தவர், சிறுபான்மையிடம் இடம்பெறாததால் அந்த குழுவை கலைக்க உத்தரவிட வேண்டும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்துக்கு 32 எம்.பிக்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்துக்கு 32 எம்.பிக்கள் அனுப்பிய கடிதம் விவரம்: நாங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒரு முக்கியமான பொருளை உங்களின் கவனத்திற்கு கொண்டு வந்து உங்களின் உடனடித் தலையீட்டையும் நாடுகிறோம்.

மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் பிரகலாத் படேல், நாடாளுமன்றத்தில் செப்டம்பர் 14 அன்று எழுத்துருவில் அளித்த பதிலில் இந்தியாவின் கலாச்சார தோற்றுவாய் பற்றியும், அதன் பரிணாமம் குறித்தும் 12000 ஆண்டுகள் வரை பின்னோக்கிச் சென்று ஆய்வுக்குட்படுத்த ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

 மத்திய அரசின் 16 பேர் குழு

மத்திய அரசின் 16 பேர் குழு

நமது நாடு பன்மைத்துவ கலாச்சாரத்தை தன்னகத்தே கொண்ட பெருமை மிக்க மரபு வழியைக் கொண்டதாகும். ஆகவே அதன் ஆய்வுக்கு இம் மாபெரும் நாட்டின் பன் கலாச்சாரங்கள் குறித்த ஆழமான உட்பொருள்கள் இயல்பாகவே தேவைப்படுகின்றன. நாங்கள் உங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வர விழைவது என்னவெனில், இத்தகைய பன்மைத்துவத்தை பிரதிபலிக்கக் கூடிய அந்த 16 பேர் கொண்ட நிபுணர் குழு இல்லை.

 உயர்ஜாதியினருக்கு மட்டும் பிரதிநிதித்துவம்

உயர்ஜாதியினருக்கு மட்டும் பிரதிநிதித்துவம்

தென் இந்தியர்கள் எவரும் இல்லை. வடகிழக்கு இந்தியர்கள் இல்லை. சிறுபான்மையினர் இல்லை. தலித்துகள் இல்லை. பெண்கள் இல்லை. அநேகமாக அக் குழுவின் எல்லா உறுப்பினர்களுமே இந்திய சமுகத்தின் சாதிய அடுக்கில் உச்சத்தில் அமர்ந்திருக்கிற ஒரு சில சமூகக் குழுக்களைச் சார்ந்தவர்களே.

 விந்திய மலைக்கு கீழ் இந்தியா இல்லையா?

விந்திய மலைக்கு கீழ் இந்தியா இல்லையா?

தென் இந்திய மொழிகளின், பெருமைமிக்க வரலாற்றையும் மத்திய அரசாலேயே செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள தமிழ் உள்ளிட்ட, ஆய்வாளர்கள் யாரும் அக் குழுவில் இல்லை. அக் குழுவின் உள்ளடக்கம் பல கேள்விகளை எழுப்புகிறது. விந்திய மலைக்கு கீழே இந்தியா இல்லையா? வேத நாகரிகம் தவிர வேறு நாகரிகம் இல்லையா? சமஸ்கிருதம் தவிர தொன்மை மொழி ஏதும் இங்கு இல்லையா? பாலின பார்வையற்ற, தனித்துவமிக்க பன் தேசிய இனங்கள், பல்வேறு சமூகக் குழுக்களைப் புறம் தள்ளியுள்ள இக் குழுவின் உள்ளடக்கம் இது அமைக்கப்பட்டுள்ள நோக்கம் குறித்த ஐயங்களையே எழுப்புகிறது.

 வரலாற்று திரிபுகளுக்கு வழிவகுக்கும்

வரலாற்று திரிபுகளுக்கு வழிவகுக்கும்

மிகச் சிறந்த ஆய்வாளர்களான ஜான் மார்ஷல், சுனித் குமார் சாட்டர்ஜி, ஐராவதம் மகாதேவன், டோனி ஜோசப், ஆர். பாலகிருஷ்ணன் போன்றவர்கள் இத் துறைக்கு பெரும் பங்களிப்பை நல்கியுள்ளனர். இந்த நேர்மறையான பங்களிப்புகளையெல்லாம் இக் குழு சிதைத்துவிடுமோ என அஞ்சுகிறோம். இத்தகைய உள்ளடக்கம் கொண்ட இக் குழு அறிவியல் பார்வையோடு ஆய்வு செய்ய இயலாது. மேலும் வரலாற்றுத் திரிபுகளுக்கு வழி வகுத்துவிடும் எனக் கருதுகிறோம். இப் பிரச்சினையில் தாங்கள் தலையிட்டு, அரசு அமைத்துள்ள இக் குழுவை கலைக்க அறிவுறுத்துமாறு நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு 32 எம்.பிக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+