தமிழகத்தில் அடுத்து திமுக ஆட்சிதான்.. மொத்தமாக விழப்போகும் 38.51% ஓட்டு.. புதிய தலைமுறை அதிரடி சர்வே
சென்னை: பல முனை போட்டி நிலவினால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு 38.51 சதவீதம் பேர் திமுக கூட்டணிக்கு வாக்களிப்போம் என்று தெரிவித்துள்ளனர்.
புதிய தலைமுறை நடத்திய மக்கள் நாடித்துடிப்பு தொடர்பான சர்வே இந்த தகவல்களை வெளிக்கொண்டு வந்துள்ளது.
தமிழக தேர்தலை ஒட்டி புதிய தலைமுறை செய்தி சேனல், ஏபிடி நிறுவனத்தோடு இணைந்து கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது.
திமுக கூட்டணி
தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் இன்று இரவு வெளியிடப்பட்டன. அதில், உங்கள் தொகுதியில் பலமுனை போட்டி ஏற்பட்டால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கு 38.51% பேர் திமுக கூட்டணிக்கு வாக்களிப்போம் என்று தெரிவித்துள்ளனர்.
திமுக ஆட்சி
அதேநேரம், ஆளும் அதிமுக கூட்டணிக்கு 28.39 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர். அதாவது திமுக மற்றும் அதிமுக கூட்டணிக்கு இடையேயான வாக்கு வித்தியாசம் 10% அளவுக்கு இருக்கிறது. இதனால் திமுக எளிதாக ஆட்சியை பிடிக்கும் சூழ்நிலை இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
ஓட்டு சதவீதம்
தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க குறைந்தது 33% அல்லது 34 சதவீதம் வாக்குகள் கிடைத்தால் போதும் என்ற நிலை உள்ளது. திமுக கூட்டணி அதைவிட அதிக வாக்கு விகிதத்தை பெற்றிருப்பதாக இந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. எனவே இந்த கருத்துக்கணிப்பு அடிப்படையில் பார்த்தால் அடுத்ததாக திமுக ஆட்சி வரப்போகிறது என்பது உறுதியாகத் தெரிகிறது.
மக்கள் நீதி மய்யம் ஆதரவு
கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஆதரவு அளிப்போம் என்று 6.28 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கு 4.84 சதவீதம் பேர் ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளனர் . அதாவது, கமல்ஹாசன் கட்சி, சீமான் கட்சியை விட அதிக வாக்குகளை பெறும் என்கிறது இந்த கருத்துக் கணிப்பு.
5 முனை போட்டி
தமிழகத்தில் இப்போது சுமார் 5 முனை போட்டி நிலவி வருகிறது. எனவேதான் பல முனை போட்டி ஏற்பட்டால் யாருக்கு வாக்களிப்பார்கள் என்று கேள்வி முன்வைக்கப்பட்டது என்று, இந்த கருத்துக்கணிப்பு நடத்திய ஏபிடி கருத்துக்கணிப்பு நிறுவனத்தின் நிர்வாகி தெரிவித்துள்ளது. இந்த நிறுவனத்தோடு 2014, 2016, 2019ம் ஆண்டு முறையே, லோக்சபா, சட்டசபை, லோக்சபா தேர்தல்கள் காலத்தில் சர்வே நடத்தியுள்ளது.