அதிமுக இன்றி பாஜக தலைமையில் 3வது அணியா? அமித்ஷா-அண்ணாமலை சந்திப்பில் விவாதித்தது என்ன? பரபர தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை பாஜகவின் ஒரு தரப்பு ஆதரித்த நிலையில் மற்றொரு தரப்பு எதிர்த்தது. இந்நிலையில் தான் அண்ணாமலை நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்து சுமார் ஒருமணிநேரம் வரை பேசியுள்ளார். இதையடுத்து தமிழ்நாட்டில் பாஜக தலைமையில் 3வது அணியை உருவாகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் இருவரின் சந்திப்பில் என்ன நடந்தது? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் பாஜக அங்கம் வகிக்கிறது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் இந்த கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. இருப்பினும் அதிமுக தோல்வியடைந்து ஆட்சியை பறிகொடுத்தது. இதையடுத்து கடந்த ஆண்டு நடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக-அதிமுக தனித்தனியே போட்டியிட்டது.
அதன்பிறகு அதிமுக-பாஜக கூட்டணி தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தான் சமீபகாலமாக இந்த கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. இருகட்சி தலைவர்களும் தொடர்ந்து கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்ணாமலை பேச்சு
இந்நிலையில் தான் சமீபத்தில் சென்னையில் பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பேசினார். அப்போது, ‛‛திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க விருப்பமில்லை. கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக் கொண்டு யாருக்கும் சலாம் போடமாட்டேன். மாநில தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான முடிவை மே மாதம் அறிவிப்பேன். திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க விரும்பவில்லை. தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டு குனிந்து செல்ல விரும்பவில்லை. தனித்து போட்டியிட விருப்பம் உள்ளது. பாஜகவை வலுப்படுத்த வேண்டும். கட்சி வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ‛டைம்’ கேட்ட அண்ணாமலை
இது அதிமுகவில் மட்டுமின்றி பாஜக கட்சி தலைவர்கள் இடையேயும் கருத்து மோதல்களை ஏற்படுத்தி உள்ளது. அண்ணாமலையின் கருத்துக்கு பாஜக சில தலைவர்களும் பேசியுள்ளனர். இதனால் பாஜக தலைவர்கள் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டது. இது விவாதத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து பாஜக கூட்டணியை நாடாளுமன்ற குழு தான் தீர்மானிக்கும். இதில் எனக்கு அதிகாரம் இல்லை என அண்ணாமலை தெரிவித்தார். இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அண்ணாமலை, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் சந்திக்க நேரம் கேட்டிருந்ததாக கூறப்பட்டது.

அமித்ஷாவை சந்தித்த அண்ணாமலை
இந்நிலையில் தான் டெல்லி சென்ற அண்ணாமலை, நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். மாலையில் நடந்த இந்த சந்திப்பு சுமார் ஒருமணிநேரம் வரை நடந்தது. இந்த வேளையில் பல்வேறு அம்சங்கள் குறித்து அண்ணாமலையும், அமித்ஷாவும் விவாதித்துள்ளனர். குறிப்பாக தமிழ்நாடு அரசியல் சூழல், அதிமுக கூட்டணி விவகாரம் மற்றும் மாநிலத்தில் பாஜகவின் வளர்ச்சி உள்ளிட்டவை பற்றி பல்வேறு கோணங்களில் இருவரும் விவாதித்துள்ளனர்.

அதிமுக-பாஜக கூட்டணி விவகாரம்
இதில் அதிமுக, பாஜக கூட்டணி நிலவரம் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது. தமிழ்நாடு கூட்டணி குறித்த விவரங்களை அண்ணாமலை, அமித்ஷாவிடம் எடுத்துரைத்தார். அதனை கேட்ட கொண்ட அமித்ஷா நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிமுக கூட்டணி விவகாரத்தை பொறுத்தமட்டில் நாடாளுமன்ற குழு முடிவு செய்யும் என அண்ணாமலையிடம் கூறியுள்ளார். மேலும் இந்த விஷயத்தில் அவசரம் காட்டாமல் பொறுமை காக்கும்படியும், உரிய நேரத்தில் நாடாளுமன்ற குழு சரியான முடிவை எடுக்கும் எனவும் அமித்ஷா தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

3 அணி உருவாகிறதா?
அதோடு, தமிழ்நாட்டில் அதிமுக, பாஜக பலமாக உள்ள மண்டலங்கள் குறித்து இருவரும் விவாதித்துள்ளனர். இதுதவிர திமுக, அதிமுக இன்றி 3வது அணியை தமிழ்நாட்டில் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் என்னென்ன இருக்கின்றன? எந்த அடிப்படையில் 3வது அணியை முன்னெடுப்பது உள்ளிட்டவை பற்றியும் சில விஷயங்களை இருவரும் விவாதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் தற்போதைய சூழலில் கூட்டணி விஷயத்தில் அவசரம் காட்ட வேண்டாம். மாறாக பாஜக கட்சியை மண்டலங்கள் வாரியாக வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என அண்ணாமலைக்கு அமித்ஷா அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

அண்ணாமலை கூறியது என்ன?
இருப்பினும் டெல்லியில் இருந்து தமிழ்நாடு திரும்பிய அண்ணாமலை மத்திய அமைச்சர் அமித்ஷா உடனாக சந்திப்பு பற்றி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். இந்த வேளையில், ‛‛தமிழ்நாட்டில் பாஜக கட்சியை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினோம். மக்களின் செல்வாக்கை பெற்று ஆட்சியை பிடிக்கும் வகையில் பாஜக வளர் வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். பாஜகவுக்கும், எனக்கும் தனிப்பட்ட கட்சி தலைவர்களுக்கும் இடையே மோதல் இல்லை. பாஜக வேகமாக வளர வேண்டும் என நாங்கள் சில முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம். கட்சியை வலுப்படுத்தும்போது சில மனஸ்தாபங்கள் வருவது வழக்கம் தான்'' என கூறினார்.












Click it and Unblock the Notifications